தினமலர் விமர்சனம்
காதலுக்காவும், காதலிக்காவும் தடை பல கடந்து காவல் துறை அதிகாரியாக விரும்பும் இளைஞனையும், அவனது நண்பர்களையும் பற்றிய கதைதான் "குள்ளநரி கூட்டம்".
கதைப்படி செல்போனில் வகையாக சிக்கும் விஷ்ணு மீது ரம்யா நம்பீசனுக்கு காதல். விஷ்ணுவுக்கும், ரம்யா மீது அதே காதல் அடுத்தடுத்து சந்திப்புகளில் ஏற்படுகிறது. ஆனால் இவர்களது காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்ததும் ரம்யாவின் போலீஸ் அப்பா ஒரு கண்டிஷன் போடுகிறார். அது விஷ்ணுவும் தன்னைப்போல் போலீஸ் அதிகாரியாக வந்தால்தான் கல்யாணம் எனும் கண்டீஷன் தான் அது. விஷ்ணுவின் வாத்தியார் அப்பாவுக்கோ, போலீஸை கண்டாலே சுத்தமாக ஒப்பாது.... எனும் நிலையில் எம்.பி.ஏ., படித்த விஷ்ணு போலீஸ் அதிகாரியாக முயற்சித்தாரா? காதலில் ஜெயித்தாரா...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், பதில் சொல்கிறது குள்ளநரி கூட்டம் படத்தின் மீதிக்கதை!
ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஹீரோ எனும் பந்தா பஞ்ச் டயலாக் எதுவும் இல்லாமல் அமைதியாக நடித்து ரம்யாவை மட்டுமல்ல, ரசிகர்களையும் கவருகிறார் விஷ்ணு. காதலுக்காக அவர் அப்பாவிற்கு தெரியாமல் போலீஸ் செலக்ஷன் வரை போகும் காட்சிகள் பிரமாதமாக படமாக்கப்பட்டிருக்கின்றன பேஷ், பேஷ்!
நாயகி ரம்யா நம்பீசன் மாதிரி நமக்கும் ஒரு செல்போன் காதலி கிடைக்கமாட்டாரா என காட்சிக்கு காட்சி ஏங்க வைக்கிறார் ரம்யா. விஷ்ணு -ரம்யா ஜோடிகளுக்கு இடையே இப்படத்தில் கெமிஸ்ட்ரி, ஹிஸ்டரி, ஜியாகரபி, பாட்டனி, சுவாலஜி, ஜியலாஜி என எல்லாம் பிரமாதமாக ஒர்க்-அவுட் ஆகியிருப்பது "குள்ளநரி கூட்டம்" படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்டுகளில் ஒன்று!
பரோட்டோ சூரி, அப்புக்குட்டி, சுந்தர், ரமேஷ் பாண்டியன், ஐயப்பன் என விஷ்ணுவுடன் “வெண்ணிலா கபடிக்குழு” வெற்றி படத்தில் பங்கெடுத்த நண்பர்கள் பட்டாளமே இப்படத்திலும் பங்கு பெறுவது படத்தின் மற்றொரு ப்ளஸ் பாயிண்ட். அந்த போலீஸ் டிரெயினிங் நண்பர் பட்டாளங்களும் சரி, நாயகி ரம்யாவின் தோழி வசந்தியாக வரும் ப்ரியாமிதுன் குமார் உள்ளிட்டவர்களும் சரி படத்தில் பளிச் என்று பாத்திரமறிந்து நடித்திருக்கின்றனர். விஷ்ணுவின் அப்பா அம்மா கேரக்டர்களில் வரும் இயல் இளங்கோ, பாண்டியம்மாள், அண்ணன் அற்புதன் விஜய் உள்ளிட்டவர்களும் கூட படத்தின் பலம்!
ஆரம்பகாட்சிகளில் நாயகன் மதுரையிலும் நாயகி வேலுரிலும் இருந்து போனில் அடிக்கடி மொக்கை போடுவதை மட்டும் இயக்குநர் சற்றே தவிர்த்திருந்தால் “குள்ளநரி கூட்டம்” இன்னும் பெரிதாக இருந்திருக்கும். ஆனாலும் அவை கூட பின்பாதியில் சொல்லப்படும் அழுத்தமான கதை, காட்சிகள், போலீஸ் செலக்ஷன் குளறுபடிகள், அதற்குரிய அழகான தீர்வு உள்ளிட்ட சீரியஸ் காட்சிகளில் தெரியாமல் போவதுதான் குள்ளநரி கூட்டத்தின் மிகப்பெரிய ப்ளஸ்!
மொத்தத்தில் ஜெ.லஷ்மனின் அழகான ஒளிப்பதிவும், வி.செல்வ கணேஷின் இயல்பான இசையும்,, மு.காசி விஸ்வநாதனின் கச்சிதமான படத்தொகுப்பும், ஸ்ரீபாலாஜியின் எழுத்து இயக்கத்திற்கு பக்கதுணையாக இருந்து "குள்ளநரி கூட்ட"த்திற்கு ரசிகர் கூட்டத்தை சேர்ப்பது நிச்சயம்!"
----------------------------------
கல்கி விமர்சனம்
போலீஸ் வேலையே பிடிக்காத அப்பா; காதலுக்காக போலீஸ் வேலைக்கு முயலும் ஹீரோ; போலீஸில் சேர்ந்தாரா இல்லையா என்பதைக் காமெடி கலந்து சொல்வதே குள்ளநரி கூட்டம்!
செல்ஃபோனுக்கு வாய் இருந்தால், ஓவென அழுதே விடும். முதல் பாதி முழுக்க, விஷ்ணுவும், ரம்யா நம்பீசனும் செல்ஃபோனில் ரத்தம் வரப் பேசி, ரப்சர் பண்ணுகிறார்கள். எஸ்.ஐ. செலக்ஷனில் விஷ்ணு எப்படி ஜொலிக்கிறார் என்பதே இரண்டாம் பாதி! டைட்டிலுக்கு நியாயம் செய்ய, கடைசி பத்து நிமிஷத்தில் ஒரு டிவிஸ்ட்!
மத்திய தர குடும்ப கேரக்டர்களாகவே வரும் பாண்டியம்மாள், வசந்தி, சக்தி ஆகியோர் நடிப்பு மிக இயல்பு. "விழிகளிலே, "காதல் என்பதை பாடல்கள் செல்வகணேஷை நிலைநிறுத்துகின்றன. மதுரையைச் சுற்றியுள்ள இடங்கள் எல்லாம் இவ்வளவு அழகா என்று ஆச்சர்யப்படுத்துகிறது லஷ்மணின் கேமரா.
தமிழ்ப் படங்களினால் பிரயோஜனமே இல்லை என்று யார் சொன்னது? போலீஸ் எஸ்.ஐ. செலக்ஷனுக்கு முயல்பவர்களெல்லாம் இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம்! என்ன ஒண்ணு! அவ்வப்போது, டி.வி. சீரியல் பார்க்கும் ஞாபகம் வந்தால், அதற்கு அறிமுக இயக்குனர் ஸ்ரீபாலாஜியே பொறுப்பு!
-----------------------------
குள்ள நரி கூட்டம்
ஹீரோவின் அப்பாவுக்கு போலீஸ் என்றாலே அலர்ஜி... மழைக்குக்கூட போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒதுங்க மாட்டாராம். ஃப்ளாஷ்பேக்கில் இதை காண்பிக்கிறார்கள்.
ஹீரோயின் அப்பா ஒரு கடுமையான போலீஸ்காரர்... சரி... கதைக்கு வருவோம். "எம் மகளை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைச்சா நீ போலீஸ் ஆயிட்டு வா... என சவால் விடுகிறார் ஹீரோயினின் அப்பா. காதலியை கைபிடிக்க நம் கதாநாயகன் காவல்துறையில் சேர முயற்சிக்கிறாரு. அதில் ஏற்படும் தடங்கல், சங்கடங்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.
கதை முழுக்க மதுரையை சுத்தி நடந்தாலும், அருவா கிடையாது... டாடா சுமோ இல்லை; "கொன்டே போடுவேன் மாதிரியான காதைப் பிளக்கும் வசனங்கள், பொம்பளை ரவுடி, கட்டப் பஞ்சாயத்துன்னு எதுவுமே படத்துல இல்லை. இதற்காகவே டைரக்டர் பாலாஜியை பாராட்டலாம்.
எம்.பி.ஏ. பட்டதாரியாக நாயகன் விஷ்ணு. பள்ளிச் சிறுமியின் டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்டு, பஸ் டாப்பில் நிற்கும் அப்பாவிடம் உங்களுக்காக "லஞ்ச் கொண்டு வந்திருக்கேன் என தந்திரமாய்ப் பேசுவதிலும், செல்போன் கடையில் வேலைக்காரப் பெண்ணிடம் வம்பாக மல்லுக்கட்டுவதிலும் பாஸ் மார்க் வாங்குகிறார்.
அப்பாவின் செல்லுக்கு ரீஜார்ஜ் செய்வதற்குப் பதிலாக கதாநாயகியின் செல்லுக்கு தப்பாக ரீஜார்ஜ் செய்யப்போக... அதுவே காதலாக மாறுவது தமிழ் சினிமாவுக்குப் புதிதான மேட்டர்தான்.
ஹீரோயினிடம் தோழி "உங்களுக்கு மட்டும் எப்படிடீ காய்ச்சல் வர மாதிரி காதல் வருது... நாங்களும் அழகாத்தான் இருக்கோம் எங்கள ஒரு பையனும் காதலிக்க மாட்டேங்குறான் என டென்ஷனாவது செம நச்.
கதாநாயகியாக ரம்யா நம்பீசன். சுடிதார், தாவணி, புடவை என எல்லா காஸ்ட்யூம்களிலும் அழகாக வந்துபோகிறார். முதல் பாதி நம்மை ரொம்பவே நெளிய வைக்கிறது. எல்லோரும் பேசுகிறார்கள்... பேசுகிறார்கள்... பேசிக் கொண்டே இருக்கிறார்கள். செம அலுப்பு. போலீஸ் செலக்ஷனுக்காக விஷ்ணு ஆயத்தமாவதும், ப்ளாட்பாரத்தில் தூங்குவதுமாக, இரண்டாவது பாதி ஜிவ்வென எகிறுகிறது. விஷ்ணுவின் திடீர் ஹீரோயிசம் அவ்வளவாக எடுபடவில்லை. அதேபோல ஹீரோவின் நண்பர்களாக வரும் மொத்த கேரக்டர்களும் போலீஸாக க்ளைமாக்ஸில் காட்டுவது செம காமெடி.
குள்ளநரி கூட்டம் - முன்பாதி கடி; பின்பாதி காமெடி. குமுதம் ரேட்டிங் - சுமார்.