தினமலர் விமர்சனம் » சங்கரன் கோவில்
தினமலர் விமர்சனம்
அப்பாவை கொன்றவர்களை வளர்ந்து ஆளான பிள்ளை பழிவாங்கும் வழக்கமான கதைதான்! ஆனால் இதை வித்தியாசமாக சொல்கிறேன் பேர் வழி... என சுற்றி வளைத்து கழுத்தை சுற்றி மூக்கை தொட முயன்றிருப்பது கடுப்பேற்றுகிறது. இதில் கதாநாயகர் கனல் கண்ணன்(ஃபைட்மாஸ்டரே தான்...) வேறு கலகலப்பூட்டுகிறேன்... என கடிப்பதும், கலாய்ப்பதும் ரொம்ப ரோதனை போங்க!
கதைப்படி ஊருக்கு வாரி வழங்கும் முறையான பெரிய மனிதர் பிரபு! ஊருக்கு உழைப்பதற்காக கல்யாணமே வேண்டாமென கட்டபிரம்மச்சாரியாக வாழ்கின்ற அவரை கரைக்கிறார் கீழ்ஜாதி ரோஹினி! அப்புறம்? அப்புறமென்ன...? முறையான பெரிய மனிதர் பிரபுவுக்கு முறையில்லாமல் பிறக்கிற பிள்ளைதான் கனல் கண்ணன். கனல் ஐந்து வயதில் பிரபுவின் மகனாக அங்கீகரிக்கப்பட இருக்கும் தருவாயில், பிரபுவின் உறவுக்காரர் நாசரின் சகோதரர்கள் சொத்துக்காக பிரபுவை தீர்த்துகட்டி ரோஹினியையும் காலிபண்ணி கனல்கண்ணனையும் ஓடவிடுகிறார். அவ்வாறு ஐந்து வயதில் ஓடும் கனல் வாலிபனாக! திரும்பி வந்து என்ன செய்கிறார்? எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் சங்கரன்கோவில் படத்தின் கதை! அப்போ மேலே கண்டது, அது வெறும் ப்ளாஷ்பேக்குங்க!
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள ஒன்றிரண்டு படங்களில் இது குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக பாடல்காட்சிகளில் எல்லாம் காஸ்டீயூம், டான்ஸ் மூவ்மெண்ட், இத்யாதி, இத்யாதிகளில் கலக்கு கலக்கென்று கலக்கி இருக்கிறார். அதே கலக்கலை ஃபைட் சீனிலும் காட்டாமல் பட காட்சிகளிலும் காட்டாமல் விட்டிருப்பது மைனஸ!
கதாநாயகி ரூபிகா புதுமுகம் என்னும் அளவில் இருந்துவிடாமல், நடிப்பிலும் உடம்பிலும் ஒரு சுற்று பெரிதாகவே தெரிகிறார் பேஷ்! பேஷ்!!
பிரபு, ரோஹினி, நாசர், பொன்வண்ணன், சொர்ணமால்யா உள்ளிட்டோர் வரும் ப்ளாஷ்பேக் காட்சிகளே சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பாடல்காட்சிகளும் இந்த ப்ளாஷ்பேக் காட்சியும் தான் சங்கரன்கோவிலின் சத்தான கருங்கற்கள்!
சிங்கம்புலி, கஞ்சா கருப்பு, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் கனல் கண்ணனுடன் போட்டி போட்டு கடிப்பது போர். இதில் டபுள்மீனிங் எனும் பெயரில் வல்கர் வசனங்கள் வேறு வயிற்றெரிச்சலை கிளப்புகிறது!
டி.ராம துளசியின் ஒளிப்பதிவு, ரஜினியின் மியூசிக் இரண்டும் பாடல் காட்சிகளில் மட்டும் பளிச் என தெரிவதும் படக்காட்சிகளில் பச் சொல்ல வைப்பதும், பி.என்.பழனிவேல் ராஜாவின் எழுத்து இயக்கத்திற்கு இடையூறு செய்கின்றன!
"சங்கரன்கோவில்" சக்கரைப்பொங்கலாய் இனிக்கிறது என சொல்லத்தான் ஆசை! ஆனால்... கடிக்கிறதே! கசக்கிறதே!!
"சங்கரன்கோவில்" - "சாதாரண" கோவில்