தினமலர் விமர்சனம் » கண்டேன்
தினமலர் விமர்சனம்
கிராமத்து பாசக்கார தாத்தாவின் திடீர் திருமண ஏற்பாடுகளில் இருந்து தப்பிப்பதற்காக, நகரத்தில் ஒரு பெண்ணை காதலிப்பதாக நாடகமாடுகிறார் ஹீரோ சாந்தனு. ஒரு மாதத்துக்குள் காதலியுடன் ஊர் திரும்ப வேண்டிய நிர்பந்தம் சாந்தனுவுக்கு! அதற்குள் மனதிற்கு பிடித்தவளை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் சாந்தனு, பார்வையற்றவர்களுக்கு உதவும் நாயகி ரேஷ்மியை கவர பார்வையற்றவர் போல் நடிக்கிறார். விரும்பியவருடன் விரும்பியபடியே திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறும் சூழலில் சாந்தனுவின் பார்வை நிஜமாகவே பறிபோகிறது! அப்புறம் சாந்தனு - ரேஷ்மி காதல் கல்யாணத்தில் முடிந்ததா...? இல்லையா...? என்பது க்ளைமாக்ஸ்.
ஹீரோ சாந்தனு, காமெடியும், காதலும் கலந்து கட்டி கண் தெரியாதவர் போன்று நடிக்கும் காட்சிகளிலும் சரி, நிஜமாகவே கண் தெரியாமல் போய்விடும் காட்சிகளிலும் சரி, "ராஜபார்வை" கமல்ஹாசனை ஞாபகப்படுத்துகிறார். அதற்காக அவருக்கு சொல்லலாம் ஒரு சபாஷ்!
ஹீரோயின் ரேஷ்மி கெளதம், சாந்தனுவுக்கு ஏற்ற ஜோடியாக வந்து மரத்தை சுற்றி டூயட் பாடி செல்கிறார்.
பார்வையற்றவராக நடிக்கும் ஹீரோ, ஹீரோயினின் பரந்த மனசை கவரும் கதை சற்றே பழசு என்றாலும், அதை சாந்தனுவும், சந்தானமும் பண்ணும் காமெடி கலாட்டாக்கள், புதுசாக்கி இருப்பது பேஷ் பேஷ்... சொல்ல வைக்கிறது.
போலீஸ் ஆபிஸர் ஆசிஸ் வித்யார்த்தி, போட்டுக்கொடுக்கும் முத்துக்காளை உள்ளிட்டவர்களும் சாந்தனு, சந்தானத்திற்கு சளைத்தவர்கள் இல்லை... என்பதை மெய்பித்திருக்கின்றனர்.
விஜய் எபினேசரின் இசையும், பிரசாத் டி.மிஷாலேவின் ஒளிப்பதிவும், புதியவர் ஏ.சி.முகிலின் எழுத்து, இயக்கத்திற்கு பலம் சேர்த்துள்ளன!
"கண்டேன்" - "பார்க்கலாம்!"
--------------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
காதலுக்குப் பொய் சொல்லலாம் தப்பில்லை என்பதுதான் படத்தின் மையம்.
கண் தெரியாதவன் என புளுகிவிட்டு ராஷ்மியை காதலிக்கிறார் சாந்தனு. காதலனுக்கு கண் தெரியும் எனத் தெரிந்தவுடன் காதலுக்கு குட்பை சொல்கிறார் ராஷ்மி. சில பல கெஞ்சல்களுக்குப் பிறகு சாந்தனுவின் காதலை ஏற்கிறார் ராஷ்மி. உண்மையாகவே சாந்தனுவுக்கு கண் தெரியாமல் போக(!) கண் தெரிந்தவன் போல் நடிக்கிறார் சாந்தனு. அப்புறமென்ன இந்தப் பார்வையற்ற காதல் கரை சேர்ந்ததா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
கதையே கொஞ்சம் குழப்பமா இருக்கலே. படத்தில் வரும் சாந்தனு கேரக்டரைப் போலவே லாஜிக் எதையும் பார்க்க மாட்டேன் என டைரக்டர் கண்களை இறுக மூடிக் கொண்டிருப்பார் போல. பொள்ளாச்சி என சொல்லிவிட்டு காரைக்குடியை காண்பிப்பதில் துவங்கி பல இடங்களில் லாஜிக் இடிக்கிறது.
கண் தெரியாதவனுக்காக உருகும் கேரக்டரில் ராஷ்மி நல்லாத்தான் நடித்திருக்கிறார். பார்வையில்லாமல் நடிக்கும் காட்சிகளில் சாந்தனு நன்றாகச் செய்திருக்கிறார். இவர்கள் இரண்டு பேரின் காதலையும் தூக்கி நிறுத்த சந்தானம் காமெடி பட்டாசு கொளுத்துகிறார்.
படத்தின் இரண்டாம்பாதியில் வரும் ட்விஸ்ட் நம்மை ரசிக்க வைக்கிறது. சந்தானம் உதவியுடன் கண் தெரிந்தவனாக காட்டிக் கொள்வதில் சாந்தனு படும் அவஸ்தைகள் கைதட்டல் போட வைக்கின்றன. பைத்தியமாக வரும் அந்தப் பெண் கேரக்டர், விமானப் பணிப்பெண் என சின்னச் சின்ன கேரக்டர்களின் மூலம் முடிச்சுப் போட்டு க்ளைமாக்ஸை முடித்திருப்பது டைரக்டரின் பலம். துல்லியமான ஒளிப்பதிவில் பிரசாந்த் டிமிசாலே நம்மை கவனிக்க வைக்கிறார். விஜய் எபினேசரின் இசையில் "உன்னைக் கண்டேனே... பாட்டை கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கலாம்.
கண்டேன் - ஆனால் முழுமையாக தெரியவில்லை.
குமுதம் ரேட்டிங் - ஓகே