தினமலர் விமர்சனம் » தம்பிக்கோட்டை
தினமலர் விமர்சனம்
இருபத்தோறாம் நூற்றாண்டிலும் அக்கா-தம்பி பாசம் பற்றியும், அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்றும் பிள்ளை பற்றியும் பேசியிருக்கும் படம்தான் "தம்பிக்கோட்டை".
கதைப்படி, சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளர் மீனா. அக்காவுக்கு ஒன்றென்றால் அதகளம் பண்ணும் அவரது அதிரடி தம்பி நரேன்! பொறியியல் படித்து வரும் நரேன், நண்பர்களுடன் நாட்டு நலப்பணித்திட்ட முகாமிற்காக தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் தம்பிக்கோட்டை பகுதிக்கு போகிறார். அந்த ஊரின் கோயில் குளத்தை எல்லாம் சுத்தம் செய்யும் நரேன் அண்ட் கோவினர் கண்களில் கதாநாயகி பூனம் பஜ்வா படுகிறார். பார்த்த மாத்திரத்திலேயே நரேனுக்கும் பூனத்திற்கும் காதல் தீ பற்றிக் கொள்ள விஷயம் பூனத்தின் அப்பாவும் வில்லனுமான "நான்கடவுள்" ராஜேந்திரனின் கவனத்திற்கு போகிறது. விடுவாரா? அவர் அவரும், அவரது ஆட்களும் நரேனை அடித்து துவைத்து தம்பிக்கோட்டைக்கு செல்ல தடையாக இருக்கும் உடைந்த பாலத்தில் குற்றுயிரும், கொலை உயிருமாக தொங்கவிடுகின்றனர். அதிர்ஷடவசமாக உயிர் பிழைக்கும் நரேன், சென்னை திரும்பி அக்கா பிள்ளையாக மாறுகிறார்.
இதன்பின் +2-வில் அந்த மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வரும் பூனம் பஜ்வாவை சென்னைக்கு சட்டம் படிக்க அனுப்புகின்றனர் வில்லன் கோஷ்டியினர். அதுவும் நான் கடவுள் ராஜேந்திரனின் வப்பாட்டி வயிற்றுமகள் "உயிர்" சங்கீதாவின் பாதுகாப்பில் நரேனின் அக்கா மீனா வேலை பார்க்கும் கல்லூரிக்கு படிக்க வருகிறார் பூனம்!
சென்னையில் பிரபல பெண் தாதா "உயிர்" சங்கீதாவின் அதட்டல்-மிரட்டல்களை மீறி நரேன்-பூனம் பஜ்வாவின் காதல் வளர்ந்ததா? அக்கா மீனாவின் சம்மதம் கிடைத்ததா? நரேனின் அப்பாவாக பிளாஷ்பேக்கில் வரும் பிரபுவின் லட்சியம் என்ன? அதை நரேன் எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்க முயற்சித்திருக்கிறது "தம்பிக்கோட்டை".
நரேன், மீனாவின் பாசக்காரத் தம்பியாகவும், பூனம்பஜ்வாவின் உயிருக்கு உயிரான காதலராகவும், அமரர் ஆகிவிட்ட அப்பா பிரபுவின் லட்சியம் தெரிய வந்ததும் அதை நிறைவேற்ற போராடும் பொறுப்புள்ள இளைஞராகவும், பல்வேறு பரிமாணங்களில் பக்காவாக நடித்திருக்கின்றார். ஆனால் அடிக்கடி ஏதோ பின்பக்கம் பெரிய ஜெனரேட்டர் இருப்பது போல் கைகளை முதுகுக்குபின் கொண்டு சென்று முறுக்கேற்றிக் கொண்டு வில்லன் கோஷ்டியினரை அடித்து துவம்சம் செய்வது சில சமயம் காமெடியாக தெரிவதை தவிர்த்திருக்கலாம்.
கதாநாயகியாக பூனம்பஜ்வா அழகுபதுமையாக வந்துபோகிறார். ஆனால் அவரை நரேனின் அன்பான அக்காவாக வரும் மாஜி நாயகி மீனாவும், பூனத்தின் அடாவடி அக்காவாக வரும் உயிர் சங்கீதாவும் தூக்கி சாப்பிட்டு விடுகின்றனர். அதுவும் சங்கீதா பீடா பாண்டியம்மாளாக, பொது இடத்தில் எல்லாம் பீடாவை பொளிச், பொளிச் என எச்சில் துப்பியபடி சேலையை தூக்கியபடி பண்ணும் ரவுசு செம த்ரில்!
ப்ளாஷ்பேக்கில் மீனா-நரேனின் அப்பாவாக பஸ் டிரைவராக சில சீன்களே பிரபு வந்தாலும் பிரமாதம் பிரபுதாம்! எனும் அளவில் பியித்து உதறிவிடுகிறார். சந்தானத்தின் சரவெடி காமெடி "தம்பிக்கோட்டை"யை காமெடி கோட்டையாகவும், கட்டி மேய்திருப்பது படத்தின் பெரும்பலம்! இவர்களுடன் "ப்ரண்ட்ஸ்" விஜயலட்சுமி, எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சாகருப்பு , ரியாஸ்கான், குண்டு ஆர்த்தி, மீராகிருஷ்ணன், ஸ்ரீரஞ்சினி, கூடல்சுரேஷ் என பெரும் நட்சத்திர பட்டாளமே தம்பிக்கோட்டையை நட்சத்திர கோட்டையாக்கி இருக்கின்றனர்.
டி.இமானின் இசையும், டி.கண்ணனின் ஒளிப்பதிவும், ஆர்.அம்மு ரமேஷின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்திற்கு பக்கபலமாக இருந்து தம்பிக்கோட்டையை தரமான கோட்டையாக்க பாடுபட்டிருக்கின்றனர்.
மொத்தத்தில் "தம்பிக்கோட்டை" விடவில்லை "கோட்டை"! வரவில்லை "குறட்டை"!