நடிகர்கள் : டொவினோ தாமஸ், சம்யுக்தா மேனன், சுராஜ் வெஞ்சாரமூடு, ஷைஜூ குறூப், சுரபி லட்சுமி, ஷம்மி திலகன்
டைரக்சன் : டி.பி.பெலினி
புகைபிடித்தல் ஒரு கொடிய நோய் என்பதை மனதில் தைக்குமாறு இப்படி காமெடியாகவும் சொல்லலாம் என வெளியாகி இருக்கும் படம் தான் இந்த தீவண்டி.
பிறக்கும்போதே இறந்துவிட்டதாக நினைத்த குழந்தையை சிகரெட் புகையை ஊதி பிழைக்க வைக்கிறார் குழந்தையின் தாய்மாமா. அந்த குழந்தை வளர்ந்து இளைஞன் டொவினோ தாமஸாக மாறும்போது, காலப்போக்கில் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவனாக தீவண்டி என அழைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறார். பள்ளித்தோழி சம்யுக்தாவை காதலித்து நிச்சயம் ஆன பின்னும் இவரது புகைபிடிக்கும் பழக்கத்தால் காதலியே திருமணத்தை நிறுத்தி இவரை விட்டு விலகுகிறார்.
இந்தநிலையில் அந்த தொகுதி எம்.எல்.ஏ விபத்தில் சிக்குகிறார். அவர் இறந்துவிடுவார் என நினைத்து அடுத்த எம்.எல்.ஏ யார் என சுராஜூக்கும், டொவினோவின் அக்கா கணவர் ஷைஜூ குரூப்புக்கும் போட்டி ஏற்படுகிறது. அடுத்த இருபது நாட்களுக்கு டொவினோ சிகரெட்டையே தொடாமல் இருந்தால், ஷைஜூ குரூப்புக்கு, தான் எம்.எல்.ஏ பதவியை விட்டு தர தயார் என பந்தயம் வைக்கிறார் சுராஜ்.
புகைபிடிக்கும் பழக்கத்தை விடமுடியாமல் தனது காதலியையே கோட்டைவிட்ட டொவினோவால் தனது மச்சானுக்கு பதவி கிடைப்பதற்காக புகைபிடிக்காமல் இருக்க முடிந்ததா..? கைவிட்டுப்போன தனது காதலை மீண்டும் கைப்பற்ற முடிந்ததா என்பது மீதிக்கதை.
சமீபகாலமாக டொவினோ தாமஸ் நடிக்கும் படங்களை பார்ப்பவர்கள், அவர் எந்த கேரக்டரிலும் தன்னை இயல்பாக பொருத்திக் கொள்வதை நன்றாக உணர முடியும். இதிலும் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஒரு இளைஞனின் மன உணர்வை, செயல்பாடுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக திருமணத்திற்காக வாங்கிய தாலியை மறக்காமல் மாமனார் வீட்டில் கொண்டுபோய் கொடுக்க வேண்டும் என்பதற்காக சிகரெட் பாக்கெட்டில் வைத்து கொண்டு வந்து கொடுக்கும் ஒரு காட்சி போதும் அந்த கேரக்டரை அப்படியே தூக்கி நிறுத்துகிறது.
நாயகி சம்யுக்தா மேனன் பேரழகி இல்லையென்றாலும் சின்னச்சின்ன விஷயங்களில் தனது இருப்பை அழகாக வெளிப்படுத்துகிறார். இவரால் மட்டும் எப்படி குணச்சித்திரம், வில்லத்தனம் காமெடி என ஒவ்வொரு படத்திற்கும் தன்னை எளிதாக மாற்றிக்கொள்ள முடிகிறது என தொடர்ந்து நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார் சுராஜ் வெஞ்சாரமூடு.
இதில் சதா சிகரெட் புகைத்துக் கொண்டு, அந்தப்பழக்கத்திற்கு நாயகனையும் ஆளாக்கிய தாய்மாமா கேரக்டரில் இயல்பாக வாழ்ந்திருக்கும் சுதீஷ், நம்மை இன்னும் கவனிக்க வைக்கிறார். விபத்தில் சிக்கி ஆம்புலன்சில் மயக்கத்தில் பயணிக்கும் எம்.எல்.ஏ முகத்தில் சிகரெட்டால் ஊதி அவரை பிழைக்க வைக்க முயற்சிப்பது செம காமெடி. தேசிய விருதுபெற்ற சுரபி லட்சுமி பஞ்சாயத்து தலைவராக காமெடியில் அசத்துகிறார்.
இது ஒரு மெசேஜ் சொல்லும் படம் தான் என்றாலும், அப்படி எந்த இடத்திலும் நமக்கு தோன்றாதபடி காட்சிகளை வெகு அழகாக, சாமர்த்தியமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் பெலினி. புகைபிடிக்கும் பழக்கம் உடல்நலத்தை மட்டுமல்ல, இந்த சமூகத்தில் இருந்தும் உறவினர்களிடம் இருந்து ஒரு மனிதனை எப்படி தனிமைப்படுத்துகிறது என்பதை பாடமாக எடுக்காமல் ரொம்ப இயல்பாக நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்.
இயக்குனர் சொன்ன சமூக அக்கறையுடனான கருத்துக்கும், அதை அவர் சொன்ன விதத்திற்குமாக சேர்த்தே அவரை தாராளமாக பாராட்டலாம்.