நடிகர்கள் : வினீத் சீனிவாசன், நிகிலா விமல், சீனிவாசன், அஜூ வர்கீஸ், ஊர்வசி, சாந்தி கிருஷ்ணா மற்றும் பலர்
டைரக்சன் : எம்.மோகனன்
சிறுவயதிலேயே கொல்லூர் மூகாம்பிகை கோவில் அருகில் தனது தாயால் அனாதையாக விடப்படுகிறார் வினீத் சீனிவாசன். அவருக்கு அடைக்கலம் தந்து வளர்க்கிறார் கோவில் அருகில் தங்கும் விடுதி நடத்தும் சீனிவாசன்.. கோவிலுக்கு வரும் பக்தர்களை நயமாக பேசி விடுதிக்கு அழைத்து வரும் வேலையை செய்யும் வினீத் சீனிவாசன், சிறுவயது மனக்காயம் காரணமாக ஒருமுறை கூட கோவிலுக்குள் அடியெடுத்து வைத்ததில்லை.
கொல்லூருக்கு தனது தாய் ஊர்வசியுடன் கோவிலில் நடன அரங்கேற்றம் செய்ய வரும் நிகிலா விமல், வினீத் சீனிவாசனின் கதையை அறிந்து அவரது தாய் யார் என தேட ஆரம்பிக்கிறார்.. அப்படி ஒருவரை கண்டுபிடித்து நெருங்கும் வேளையில் அவரது யூகம் தவறாகிறது. வினீத் சீனிவாசனின் தாய் யார்..? ஏன் அவரை சிறுவயதிலேயே விட்டுச்சென்றார்..? தற்போது உயிருடன் இருக்கிறரா..? வினீத் சீனிவாசனை தேடிவந்தாரா என்பதற்கு க்ளைமாக்ஸ் விடை சொல்கிறது.
முழுக்க முழுக்க கர்நாடகாவில் எடுக்கப்பட்டுள்ள மலையாள படம் இது. இடையில் கொஞ்சம் நம்ம கும்பகோணமும் வந்து போகிறது. படத்தின் முதல் பாதி கோவில், தங்கும் விடுதி கலாட்டாக்கள் என நகர, பிற்பாதி தாய் சென்டிமென்ட்டுடன் கொஞ்சம் கனமாக நகர்கிறது.
தங்கும் விடுதிக்கு ஆள் பிடிக்கும் ஏஜென்ட்டாக வினீத் சீனிவாசன் செம பிட். அவருக்கும் நிகிலாவுக்குமான காட்சிகள் ஒருபக்கம் கலாட்டா.. இன்னொரு பக்கம் க்யூட்.. நன்றாக நடித்தாலும் நிகிலா விமலிடம் ஏதோ ஒன்று மிஸ்ஸாகிறது. அஜு வர்கீஸ் பிஜூகுட்டன் ஆகியோர் நகைச்சுவைக்கு தோள்;கொடுத்துள்ளனர்.
சீனிவாசனின் நடிப்பில் வழக்கம்போல பாந்தம்.. ஊர்வசி வரும் காட்சிகள் எல்லாமே கலகலப்பு தான். சோகம் தாங்கிய முகத்துடன் கிளைமாக்ஸுக்கு சற்றுமுன் என்ட்ரி ஆகும் சாந்தி கிருஷ்ணா க்ளைமாக்ஸில் வினீத் சீனிவாசனை மட்டுமல்ல, நம்மையும் நெகிழ வைக்கிறார்..
வினீத்தின் தாய் அவரை விட்டுச்செல்வதற்கான காரணம் தெளிவாக சொல்லப்படவில்லை. அதேபோல நிகிலா விமல், வினீத்தின் தாயை தேடும் காட்சிகள் குழப்பத்தையே தருகின்றன. தமிழில் வெளியான கலகலப்பு-2வின் இடைவேளைக்கு முந்தைய காட்சிகளையும் தளபதி படத்தின் இடைவெளிக்கு பிந்திய காட்சிகளையும் இணைத்து பார்த்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.