நடிகர்கள் : மம்முட்டி, ஆஷா சரத், தீப்தி சதி, இன்னொசன்ட், திலீஷ் போத்தன், ஹரீஷ்
ஒளிப்பதிவு : வினோத் இலம்பள்ளி
இசை : எம்.ஜெயச்சந்திரன்
கதை : ரதீஸ் ரவி
இயக்கம் : ஷ்யாம்தர்
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி நூறுநாள் ஓடிய சூப்பர்ஹிட் படமான 'தி செவன்த் டே' படத்தை இயக்கிய ஷ்யாம்தரின் இரண்டாவது படம் தான் இது.
இடுக்கியை சேர்ந்த மம்முட்டி ஆசிரியர்களுக்கெல்லாம் ட்ரெய்னிங் கொடுக்கும் பேராசிரியர்.. சின்னவயதில் இருந்தே அவர் பெண்கள் விஷயத்தில் வீக்கானவர் என தவறாக சித்தரிக்கப்படுகிறார். இதனால் தம்பிக்கு திருமணம் முடிந்தும் கூட தனக்கு பெண் கிடைக்காமல் அல்லாடுகிறார் மம்முட்டி. தவிர பெண்களுடன் பழகுவதில் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவரும் கூட.
பணி மாற்றல் காரணமாக கொச்சிக்கு வரும் மம்முட்டி, நண்பர்கள் திலீஷ் போத்தன், இன்னொசன்ட் ஆகியோர் இருக்கும் அபார்ட்மென்ட்டில் தனி பிளாட்டில் குடியேறுகிறார். ஒருமுறை வெளியூர் சென்று திரும்புகையில் தனது காதலனால் ஏமாற்றப்பட்ட தீப்தியை கூடவே அழைத்து வந்து வயதில் பெரியவரான இன்னொசன்ட் வீட்டில் தங்க வைக்கிறார்.
ஆசிரியர்களுக்கு ட்ரெய்னிங் அளிப்பதற்காக சென்ற இடத்தில் தனது பழைய பள்ளித்தோழி ஆஷா சரத்தை சந்திக்கிறார் மம்முட்டி. பள்ளிப்பருவ காதலை புதுப்பித்து திருமணத்தில் முடிக்க நண்பர்கள் மம்முட்டியை தூண்டுகிறார்கள்.. கூடவே இருக்கும் தீப்தியும் இந்த விஷயத்தில் மம்முட்டிக்கு ஐடியா கொடுக்கிறார்.
ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ஆஷாசரத்திற்கு திருமணமான விஷயமும் அவர் கணவனை விட்டு கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் விஷயமும் தெரிய வருகிறது. இந்தநிலையில் மம்முட்டியின் மீது தன்னையறியாமலே காதலில் விழுகிறார் அவரைவிட வயதில் ரொம்பவே குறைந்த தீப்தி... இதில் மம்முட்டி யாரை தேர்ந்தெடுக்கிறார் அல்லது விதி மம்முட்டியுடன் யாரை முடிச்சு போடுகிறது என்பது க்ளைமாக்ஸ்.
படத்தின் ஆரம்ப காட்சிகளில் மம்முட்டியின் முன்கதை சொல்லி சுவாரஸ்யம் ஏற்படுத்தவே செய்கிறார்கள்.. ஆனால் அதன் பின் நகரும் காட்சிகள் எல்லாம் சவசவ.. இதில் மம்முட்டி நன்றாக நடித்துள்ளார் என வழக்கம்போல சொல்லிவிட்டு கடந்துபோய்விட முடியாது. காரணம் மம்முட்டியின் கதாபாத்திரத்தை ரொம்பவே பலவீனமாக வடிவமைத்திருக்கிறார்கள்.
ஆசிரியர்களுக்கெல்லாம் ட்ரெய்னிங் கொடுக்கும் பேராசிரியரான அவருக்கு ஒரு பழகிய பெண்ணிடம் போனில் பேசுவது எப்படி என்பது கூட தெரியாதா..? பெண் வாசனையே அறியாத மம்முட்டி தனி அறையில் தன்னை நெருங்கும் கால்கேர்ளிடம் நடந்துகொள்வது ஏற்புடையதே அல்ல.. ஒரு கிராமத்தானை விட மோசமாக அவரை சித்தரித்திருக்கிறார்கள்.
படம் முழுதும் புன்னகை முகத்துக்கு சொந்தக்கராராக வலம்வருகிறார் ஆஷா சரத். சில இடங்களில் மட்டும் சோகம்...
துறுதுறு இளம்பெண்ணாக தீப்தி சதி.. கொஞ்சம் கொஞ்சமாக மம்முட்டி மீது காதல் வயப்படும் காட்சிகளில் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்..
நண்பர்களாக வரும் திலீஷ் போத்தன், இன்னொசன்ட், ஹரீஷ் ஆகியோர் மம்முட்டியை காதலிக்க தூண்டும் காட்சிகளில் எரிச்சலையே ஏற்படுத்துகிறார்கள். இதில் செக்யூரிட்டியாக வரும் ஹரீஷ் மட்டும் விதிவிலக்காக காட்சிக்கு காட்சி சரவெடி கொளுத்துகிறார்.
எம்.ஜெயச்சந்திரன் இசையில் மிட்டாய் பாடலும், அதற்கு மாணவர்கள் ஆட்டும் நடனமும் அதை கற்பனைத்திறனுடன் படமாக்கிய விதமும் அருமை.. ஆனால் அதை தொடர்ந்து இடம்பெறும் ஸ்கூல் பஸ் விபத்து, கதைக்கு சம்பந்தமில்லாமல் துருத்திக்கொண்டு இருப்பதை இயக்குனர் ஷ்யாம்தர் எப்படி கவனிக்காமல் விட்டார் என தெரியவில்லை.
மம்முட்டி பள்ளி மாணவன் மூலமாக மதக்கலவரம் உருவாகாமல் தடுக்கும் காட்சியும், மாணவர்கள் மனப்பாடம் செய்யாமல் படிப்பதற்கு யோசனை சொல்லும் காட்சியும், ஆசிரியர்கள் எப்படி மாணவர்களை அணுகவேண்டும் என பாடம் எடுக்கும் காட்சிகள் மட்டுமே கொஞ்சம் ஆறுதல் தருகின்றன.
'தி செவன்த் டே' படத்தில் புத்திசாலித்தனமாக காட்சிகளை அமைத்து, ரசிகர்களை இருக்கை நுனியில் அமரவைத்து, படத்தின் இறுதிக்காட்சியில் இரண்டாவதாக யாரும் எதிர்பாராத இன்னொரு க்ளைமாக்ஸையும் கொடுத்து 'அட' என ரசிகர்களை வாய்பிளக்க செய்த ஒரு இயக்குனரின் இரண்டாவது படம் என்பது எப்படி இருக்கவேண்டும்..?.
அந்த எதிர்பார்ப்பு அத்தனையையும் தவிடுபொடியாக்கி ரசிகர்களை ஏமாற்றியுள்ளது இந்தப்படம்.