நாயகன் - சாய் தரண் தேஜ்
நாயகி - ராகுல் ப்ரீத்தி சிங்
இயக்குனர் - கோபிசந்த்
பலுபு, பண்டக சேஷ்கோ போன்ற குறிப்பிடும்படியான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கோபிசந்த் மெகா ஹீரோ சாய் தரண் தேஜூடன் இணைந்துள்ள திரைப்படம் வின்னர். சாய் தரண் தேஜின் முந்தைய திரைப்படமான திக்கா படத்தின் சுமாரான வெற்றிக்கு பின்னர் சூப்பர் ஹிட்டை எதிர்பார்த்து சாய் தரண் தேஜ் நடித்துள்ள வின்னர் எந்த அளவிற்கு அவரின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளது என பார்ப்போம்.
நாயகன் சித்தார்த் ரெட்டி(சாய் தரண் தேஜ்), குதிரை பந்தயத்தில் மோகம் கொண்ட தனது தந்தையுடன் ஏற்பட்ட மனகசப்பின் காரணமாக, சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி விடுகின்றான். தனது தாயின் மறைவிற்கு பின்னர் தந்தை மகேந்திர ரெட்டி(ஜெகபதி பாபு) இரண்டாவது திருமணம் செய்து கொள்வது பிடிக்காத சித்தார்த் வீட்டை விட்டு சிறுவயதிலேயே ஓடிப்போகின்றான். ஆரம்பத்தில் அலைக்கழிக்கப்படும் சிறுவன் சித்தார்த் தனது கடின உழைப்பில் வளர்ந்து நாளிதழ் ஒன்றிற்கு தலைவரும் ஆகின்றான்.
ஐதராபாத்தில் நடைபெறும் ஓட்டபந்தய போட்டியில் கலந்து கொள்ளவரும் நாயகி சித்தாரா-வை(ராகுல் ப்ரீத்தி சிங்) பார்த்ததும் மைய்யல் கொள்ளும் சித்தார்த், பல கட்ட முயற்சிக்கு பின்னர் சித்தாராவிற்கு தன் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகின்றார். இதனிடையே சித்தாராவின் தந்தை ஜெகபதி பாபுவின் மகன் ஆதிக்கும் சித்தாராவிற்கும் திருமண நிச்சயம் செய்கின்றார். தந்தைக்கு பயந்து அவர் நிச்சயிக்கும் மாப்பிள்ளையை மணக்க சித்தாரா நிர்பந்திக்கப்படுகின்றார். சித்தார்த் தான் மகேந்திர ரெட்டியின் மூத்த மகன் எனும் உண்மையை சொன்னாரா? தன்னை மணந்து கொள்ள காதலி சித்தாரா வைக்கும் போட்டியில் ஜெயித்து சித்தார்த் அவரை கரம் பிடித்தாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாக அமைகின்றது இப்படத்தின் இரண்டாம் பாதி.
சித்தார்தாக வரும் சாய் தரண் தேஜ், நடிப்பு, நடனம், வசன உச்சரிப்பு, ஹீரோயிசம் என அணைத்திலும் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளார். அதனை மேலும் ஒரு முறை வின்னர் படத்தில் நிரூபனம் செய்துள்ளார் சாய் தரண். ஆனால் சாய் தரணின் திறமைகளை இயக்குனர் கோபிசந்த் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஆடை குறைப்பில் தாராளம் காட்டும் நாயகி ராகுல் ப்ரீத்தி சிங், அழகாக வந்து செல்லும் ராகுல் ப்ரீத்தி சிங் பாடல்களில் அதீத கவனம் ஈர்க்கின்றார். நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்தால் ராகுல் ப்ரீத்தி சிங்கின் வளர்ச்சி இன்னும் வேகமெடுக்கும்.
வெண்ணிலா கிஷோர், ப்ருத்வி மற்றும் அலி. ஏற்கனவே பழக்கப்பட்ட நகைச்சுவை காட்சிகளில் தோன்றினாலும் சிரிக்க வைக்க முயற்சிக்கின்றனர். காதல் நகைச்சுவை என ஜாலியாக செல்கின்றது முதல்பாதி. இடைவேளையை நெருங்கும் காட்சிகள் இரண்டாம் பாதி மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விறுவிறுப்பான காட்சிகள் இரண்டாம் பாதியில் இல்லை. ஜெகபதி பாபு மீண்டும் தனது திறமைக்கு தகுதியான வேடத்தை தேர்வு செய்து அப்லாஸ் அள்ளுகின்றார். சாய் தரண் தேஜ் மற்றும் ஜெகபதி பாபுவிற்கிடையேயான சென்டிமென்ட் காட்சிகளில் இருவரும் போட்டிபோட்டு நடித்துள்ளனர். சிங்கம் 3 படத்தில் நடித்த தகுரு அனுப் சிங் இப்படத்தில் குறிப்பிடும்படியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சாய் தரண் தேஜின் திரைப்பட வரலாற்றில் வின்னர் திரைப்படம் தான் அதிக செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படம். சோட்டா கே நாய்டுவின் காமிரா கைவண்ணம் திரையில் ஜாலத்தை ஏற்படுத்துகின்றது. ரசிக்கும்படியான பாடல்களை கொடுத்துள்ள தமன் பின்னணி இசையிலும் கவனம் ஈர்க்கின்றார். அனுஷ்யாவின் குத்தாட்டப் பாடல் நிச்சய வெற்றியை உறுதி செய்துவிட்டது. பழக்கப்பட்ட கதையை தேர்வு செய்திருந்தாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் வெற்றி நிச்சயம்.
வின்னர் - பெயரில் மட்டும்