வின்சென்ட் செல்வா இயக்கத்தில் புதுமுகங்கள் சஞ்சய், அருந்ததி நாயர் இருவருடன், தம்பி ராமைய்யா, முருகதாஸ், யோகி பாபு, ரோபோ சங்கர், மயில்சாமி, அஸ்வின்... உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க, 2 மணி நேரம் 25 நிமிட முழு நீள் காமெடி மற்றும் சென்டிமெண்ட் படமாக வெளிவந்திருக்கிறது "விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் ."
அபலைப் பெண் ஒருத்தியை அவள்நம்பி வந்த காதலன் கைவிட்டு ஓட்டம் பிடிக்க, அவனது ஓட்டத்தால் நாயகி பாதிக்கப்பட, நாயகியின் ஓட்டத்தால் பெரிதாய் பாதிக்கப்பட்ட நாயகன், நாயகிக்கு வாழ்க்கை கொடுக்கும் கருவை உள்ளடக்கிய கதையுடன் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், காமெடியாகவும், கலகலப்பாகவும் வெளிவந்திருகிறது விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் படம் மொத்தமும்!
அறிமுக கதாநாயகர் சஞ்சய், பெற்றோர் ஆசைப்படி, அரசு வேலைக்கு போக மாட்டேன் என பிடிவாதமாக இருக்கும் நாயகராக பிஸினஸ் செய்கிறேன் பேர்வழி என நண்பர் முருகதாஸுடன் சேர்ந்து ஒரு அடாவடி தண்டல் பேர்வழியிடம் ஐந்து லட்சம் வட்டிக்கு வாங்கி அதை அடைக்க முடியாது அல்லல்படும் கேரக்டரிலும், அபலைப் பெண்ணுக்கு வாழ்க்கைத் தரும் கேரக்டரிலும் ‛நச் சென்று நடித்திருக்கிறார். அசத்தலாகவும், அழகாகவும் இருக்கிறார். ஆகவே நிச்சயம் இவருக்கு நல் எதிர்காலமும் இருக்கிறது என நம்பலாம்!
கதாநாயகியாக அறிமுக நாயகி அருந்ததி நாயரும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பது தெரியாத இளம் நடிகையாக, நாயகியாக அம்சமாக இருக்கிறார், அசத்தலாக நடித்திருக்கிறார்.
பல நாள் அஸிஸ்டன்ட் டைரக்டராக கஷ்டப்படும் தான், எப்படியாவது ஒரு சினிமா படத்தை எடுத்து, சாதித்து விட வேண்டுமென காமிராமேன், அஸிடன்ட், சகிதம் திரியும் பித்தலாட்ட சினிமா டைரக்டராக தம்பி ராமைய்யா, மொத்த படத்து பளுவையும் தன், ஒற்றைத் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார். வாவ்.
தம்பி ராமைய்யாவுக்கு ஈடு கொடுத்து, "ஆடுகளம்" முருகதாஸ், யோகிபாபு, மயில்சாமி, அஸ்வின்... உள்ளிட்டோரும் அவர்களது காமெடிகளும் படத்திற்கு மேலும் பலம்
சேர்க்கின்றன.
நாயகன், நாயகி மற்றும் மாப்பிள்ளையின் தந்தையாய் வரும் ஜார்ஜ், ஜோ மல்லூரி, பாலா சிங் ஆகியோரின் நடிப்பும் எக்கச்சக்க யதார்த்தம்.
தொழில்நுட்பகலைஞர்களளில் ஜெ.ஆர்.ரூபனின் வசனமும், மாருதி கிருஷின் பக்கா இல்லை என்றாலும் பலவீனமில்லாத, படத்தொகுப்பும், எஸ்.கே.மிட்டலின் அழகிய ஒளிப்பதிவும், ஆர்.தேவராஜனின் இசையில், "பறையடிக்கிற மச்சானே சலசலக்கிற மனசே..." உள்ளிட்ட கு.கார்த்திக்கின் பாடல் வரிகளும், அதற்கு தாலாட்டும் இன்னிசையும், பின்னணி இசையும் ரசிகனை இப்படத்தோடு ஐக்கிய படுத்தும் ரசனை.
வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில், க்ளைமாக்ஸில்... நாயகனோட அப்பாவை வச்சுக்கிட்டு நாயகியோட அப்பாக்கிட்ட, வேறு ஒருத்தருடன் ஓடிப்போனவ உங்கப் பொண்ணு.... அவருக்கு வாழ்க்கை தந்திருக்கிறார்... இந்தப் பையன்... என்று தம்பி ராமைய்யா, ஹீரோ சஞ்சையை காட்டி காப்பாற்றி, இருவரையும் ஒன்று சேர்ப்பதற்கு பதில், ஹீரோயின் அருந்ததி சினிமா நடிகை
ஆசையில்... ஒடிப்போன தாக... காட்சிப்படுத்தியிருந்தார்கள்.... என்றால், அக்காட்சி மேலும், அழகாக இருந்திருக்கும், மிளிர்ந்திருக்கும்.., அப்படிக் கூட வேண்டாம். இந்தக் காட்சியில் நாயகரின் அப்பா கேரக்டரை உடன் வைத்துக் கொள்ளாது, நாயகரையும், நாயகியின் அப்பாவையும் மட்டுமே வைத்துக் கொண்டு, அக்காட்சியை இயக்குனர் நினைத்திருந்தால், இன்னும் மெச்சூர்டாக காட்சிப்படுத்தியிருக்கலாம்.
அதே மாதிரி, "ஓடிப்போனவ .,வெறும் வயித்தோட வந்திருக்கிறாளா ? வயித்தை நிரப்பிக் கிட்டு வந்திருக்கிறாளா...? " என்பது உள்ளிட்ட நாரசமான ,அபத்தமான டயலாக்குகள், லாஜிக் இல்லாத சில சீன்கள்... சிற்சில குறைகள் இருந்தாலும் இரு ஊருக்கு இடையேயான ஒரு ஆற்று நீர் பிரச்சினையுடன் கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதலையும் கலந்து, முன்பாதியை வெகு ஜாலி காமெடியாகவும், பின்பாதியை சீரியஸ் காமெடியாகவும், சற்றே வளவள என்றாலும், அதிலும், கொஞ்சம் அழகு மிளிர சொல்லியிருக்கும் இயக்குனரின் நேர்த்தி, பேஷ் பேஷ் சொல்ல வைக்கிறது !
மேலும், "விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் "எனும் யூகிக்க முடியா பூடகமான இப்பட தலைப்பும்., சற்றே ஒவர் ஆக்டிங் என்றாலும், ஒரு டைரக்டராய் ஒரு அழகு கல்லூரிப் பெண்ணை தன் பட நாயகியாக தேர்வு செய்து அந்தப் பெண்ணுக்கேத் தெரியாமல் அவர் காலேஜுக்கு தோழிகளுடன் பேசியபடி போவது வருவதை ஷூட் செய்து... ஹீரோவை உயிருக்கு உயிராய் காதலிப்பது மாதிரியும்., ஹீரோ சஞ்சய்யுடன் ஊரை விட்டு ஓடிப் போவது மாதிரியும் கிராபிக்ஸ் சி.ஜி உதவியுடன் திரைப்படத்தை தகிடுதித்தமாய் தயார் செய்து கலகலப்பூட்டும் தம்பி ராமைய்யாவின் "நச் - டச் " நடிப்பும் படத்திற்கு பெரும் பலம்!
ஆக மொத்தத்தில், "விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்" - எல்லாத் தரப்பு, ரசிகனுக்கும், நிச்சயம்... பிடிக்கும்!"