தினமலர் விமர்சனம்
மின்னுவதெல்லாம் பொன் அல்ல.. பொன் எல்லாம் மின்னுவதில்லை - எனும் பழமொழியையும், புது மொழியையும் கதையாய் தாங்கி வந்திருக்கும் வழக்கமான படம்!
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என ஒழுக்க சீலராக வாழும் ஆசிரியர் ராஜேஷ். அவரது வாரிசுகள் ஸ்ரீமன், புதுமுகம் தீபக். இதில் முன்னவர் ஸ்ரீமன் அப்பா மாதிரியே ஊருக்கு நல்லவராக படித்து என்ஜினீயர் ஆகி, குடும்பத்திற்கு கட்டுப்பட்டு கல்யாணம் - காட்சி என்று வாழ்கிறார். இளையவர் தீபக், அப்பாவிற்கு அவப்பெயர் ஏற்படும் விதமாக ஒழுங்காக படிக்காமல் ஊரில் வம்பிழுத்துக் கொண்டு, ஆட்டோ ஓட்டிக் கொண்டு காதல் கலாட்டா பேர்வழியாக திரிகிறார். ஒரு கட்டத்தில் இரண்டு மகன்களில் யார் அப்பாவிற்கு பிள்ளையாக வாழ்ந்தது எனும் உண்மை தெரிய வருவதும், அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும்தான் ஆறுமனமே படத்தின் மீதிக்கதை!
கண்டிப்பான கணக்கு வாத்தியாராக ராஜேஷ். அவரது மகன்களாக ஸ்ரீமன், புதுமுகம் தீபக். தீபக்கின் ஜோடி நிக்கோல், ஸ்ரீமனின் ஜோடிகள் கார்த்திகா, மைதிலி. ராஜேஷின் மனைவி மீரா கிருஷ்ணன், வில்லன் பொன்வண்ணன் கோஷ்டியினர், டூயல் கஞ்சா கருப்பு உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர். அதிலும் கார்த்திகாவின் அண்ணனாக வரும் ஆனந்த், அவர் மூலம் கார்த்திகாவை அடைய துடிக்கும் அருள்மணி உள்ளிட்டவர்கள் குப்பத்து கெட்டவர்களை அப்படியே பிரதிபலித்திருப்பது குறிப்பிடத்தக்கது!
ஸ்ரீகாந்த் தேவாவின் இதமான இசை, அன்புமணியின் பதமான ஒளிப்பதிவு, புதியவர் சுதீஷ் ஷங்கரின் அழகான இயக்கம் என ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் ஏதோ ஒன்று இல்லாததால் ஆறுமனமே சற்றே போறாத மனமே!