காமெடியன் "லொள்ளுசபா" ஜீவா, ஸோலோ ஹீரோவாக புரமோஷன் ஆகிட, புதியவர் ரங்காவின் எழுத்து, இயக்கத்தில் சுவாதி பிலிம் சர்க்யூட் மாலதி வேலு / பத்தூள் சுக்குருல்லா தயாரிப்பில், பிரைடே பிலிம்பேக்டரி பட நிறுவனம் ரிலீஸ் செய்திருக்கும் படம் தான் "ஆரம்பமே அட்டகாசம்".
தன் அப்பா சொன்னதால், சின்ன வயதிலிருந்து லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ண வேண்டும் எனும் கொள்கையோடு தீவிரமாக காதலி தேடிடும் ஜீவாவுக்கு, காசு பணத்திற்காக காதலர்களை அடிக்கடி மாற்றும் சங்கீதா எனும் அறிமுக நாயகி அகஸ்துமஸ்தாக காதலியாகிறார். ஜீவாவை விட பெரும் வசதியான சார்லஸ் கிடைத்ததும் ஜீவாவை கழற்றி விடும் சங்கீதாவுக்கு, ஜீவாவும், சங்கீதாவின் ஜீவாவுக்கு முந்தைய காதலன் ஸ்ரீநாத்தும் சேர்ந்து எவ்வாறு பாடம் புகட்டுகின்றனர்? என்பது தான் "ஆரம்பமே அட்டகாசம்" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம் !
என் பெயர் ஜீவா நான் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணுவேன் எங்க அப்பா அப்படி தான் செய்ய சொன்னாரு... என்றபடி ஸ்கூலில் வாத்தியார்., பெரியவன் ஆனதும் என்ன பண்ணப்போற..? எனக் கேட்கும் போதே தன் லட்சியத்தை, கொள்கையை போட்டுடைக்கும் சிறு வயதில் தொடங்கி, நண்பர் சாம்ஸ் காசில் காதலிக்கு ஸ்கூட்டி எல்லாம் வாங்கிக் கொடுத்து, கோக்குமாக்கு காதலை தொடர்ந்து... இறுதியில் காதலி ஏமாற்றியதும் ராவாக சரக்கு அடித்துக் கொண்டே இருப்பது வரை ஜீவா, செமயாய் நடிக்க முயற்சித்து அதில் பாதி தேறியும் இருக்கிறார்.
ஜீவாவை ஏமாற்றும் காதலியாக கதாநாயகி சங்கீதாவாக புதுமுக நடிகை மப்பும் மந்தரமுமாக இருக்கிறார். இவர், முகத்தில் பெரிய ரியாக்ஷன்கள் வரவில்லை ... என்றாலும் பார்க்கும் பணம் படைத்த இளசுகளிடமெல்லாம் ஐ லவ் யூ, ஐ லவ் யூ .. தவுசண்ட்டைம்ஸ் ஐ லவ் யூ... என கிஸ் அடித்து தியேட்டரில் சூட்டை கிளப்பும் இடங்களில் க்ளாப்ஸ் அள்ளுகிறார்.
லொள்ளு சபா ஜீவாவின் காமெடி நண்பர்களாக வையாபுரி, சாம்ஸ் மற்றும் சங்கீதாவின் பழைய காதலர் காமெடி டைரக்டர் ஸ்ரீநாத் ஆகியோர் பேசிக் கொண்டே இருக்கின்றனர். ஜீவாவின் மாஜி காதலியாக ப்ளாஷ்பேக்கில் வரும் ஜாங்கிரி மதுமிதா, டீ மாஸ்டர் லொள்ளு சபா மனோகர், சேஷூ, மேரேஜ் ரிஜிஸ்தர். பேராசியர் கு.ஞானசம்பந்தம் அவரது உதவியாளர் வாசு விக்ரம் ஆகியோர் வரும் சீன்கள் சற்றே ஆறுதல்.
மற்றபடி, ஜீவாவின் அப்பாவாக ஆர். பாண்டியராஜன், அம்மாவாக ஸ்ரீரஞ்சனி இருவரும் பையனின் லவ்வுக்காக உருகுவதும் உதவுவதும் பெரிதாய் ஒட்டவில்லை.
மாரிஸ் ஏ.ஜி.வெங்கடேஷின் படத்தொகுப்பு படுத்தல் தொகுப்பு. ஆர்.ஆனந்தின் ஒளிப்பதிவு ஒ.கே பதிவு, ஜெயகே.தாஸின் இசையில் "டம்மாடம்மாரே ட முக்கு டம்மாரே...." , "ஏ உட்டாலக்கடி டாப்பு டக்கரு...." உள்ளிட்ட பாடல்களும் அவை படமாக்கப்பட்டிருக்கும் விதமும் ஆறுதல் என்றாலும் பின்னணி இசை, வையாபுரி சாம்ஸின் பேச்சு மாதிரியே பெரும் இரைச்சல்.
புதியவர் ரங்காவின் எழுத்து, இயக்கத்தில் "பசங்க லவ்வுக்காக எல்லாத்தையும் மாத்திக கிறங்க ஆனா, பொண்ணுங்க வசதியான பையன் கிடைச்சா, ஆளையேமாத்திடுறாங்க..." என்பது உள்ளிட்ட தத்துவவித்துவ வசனங்கள் ரசனை என்றாலும், காதலில் தோல்வி கண்டதால் ராவாக சரக்கு அடிக்கும் ஹீரோ, காமெடி நண்பர்கள்... என படம் முழுக்க வழக்கமான வாடையே வீசி க்ளைமாக்ஸில் மட்டும், ஏமாற்றிய காதலியிடம்., அதுவரை செலவு செய்த பணத்தை திருப்பி கேட்கும் புதுமையை புகுத்தியிருப்பது அவ்வளவு திருப்தியாக தெரியவில்லை. அதுவும் கூட சில வருடங்களுக்கு முன் தனுஷ் நடிக்க பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்த "தேவதையை கண்டேன்" பட சாயலில் முக்காலும், முழுசும் இருப்பது சற்றே பலவீனம்.
ஆக மொத்தத்தில் "ஆரம்பமே அட்டகாசம் - ஆஹா ஹாசமும் இல்லை... அவ்வளவு மோசமும் இல்லை...!