நிதின் சத்யா, ரக்ஷா ராஜ், மயில்சாமி, சிங்கம் புலி, யோகி பாபு, சாமிநாதன்... உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க., புதியவர் எஸ்.டி.குணசேகரன் இயக்கத்தில் வந்திருக்கும் காமெடி பேய் படம் தான் "பாண்டியோட கலாட்டா தாங்கல...
கதைப்படி, ஒரு மேன்சனில் ஒழுங்காக வாடகை தர முடியாது தங்கியிருக்கும் பலதரப்பட்டவர்கள்., வேறு ஒருவருவருக்கு அந்த மேன்சன் விற்கப்பட இருப்பது தெரிந்ததும் செய்யும் அமானுஷ்ய வம்பு தான் கரு!
பெரிய மனிதர் இமான் அண்ணாச்சிக்கு சொந்தமான ஒரு மேன்சனில், பொம்மை வியாபாரி நிதின் சத்யா, ஹீரோ நைன் ஸ்டார் சிங்கம் புலி, பலேஜேப்படி திருடன் யோகிபாபு, டுபாக்கூர் டாக்டர் லொல்லு சபா சாமிநாதன், ராசிக்கல் போலி ஜோதிடர் குமரேசன் உள்ளிட்டோர்., ஒழுங்காக வாடகை தராமல் தங்கி இருக்கின்றனர். அல்வா பேர்வழிகளான அவர்களிடமிருந்து அதை வசூலிக்க அடாவடிப் பேர்வழியான பாண்டி எனும் மயில்சாமியை அந்த மேன்சனின் வாட்ச்மேனாக்குகிறார் அண்ணாச்சி.
பாண்டி -மயில்சாமியை கவுக்கும் திட்டத்துடன் அது வரை திருமணமாகாத மது போதை பிரியரான அவருக்கு மேன்சனை கூட்டிப் பெருக்கும் வேலை கேட்டுவரும் ஒரு பெண்மணியை ஒரு மாதிரி பேசி முடித்து திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர் மேன்சன் வாசிகள். அதற்குள், மொடாக்குடிகாரரான மயில் போதையில் ஒரு நாள் மாடியில் இருந்து தவறிவிழுந்து மரணமடைகிறார். நிறைவேறாத திருமண ஆசையோடு இறந்து போகும் பாண்டி - மயில்சாமி, தன் பேய் நட்புகளுடன் வந்து மேன்சன் வாசிகள் தான், தன்., சாவுக்கு காரணமென கருதி, அவர்களின் நிம்மதியை கெடுக்கிறார். கூடவே, அவர்களின் ஆசைகளையும் நிராசைகளாக்கி மகிழ்கிறார். ஓரு கட்டத்தில் பாண்டிக்கு தன் சாவுக்கு மேன்சன்வாசிகள் காரணமில்லை... எனும் உண்மை தெரிய வருகிறது. அதன் பின் அவர்களுக்கு பாண்டியோட உதவி எப்படி? பலே சொல்லும்படி இருக்கிறது? பாண்டி பேய் மற்றும் நட்பு பேய்களோட கலாட்டா யாருக்கு எதிராகிறது? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு விடை சொல்கிறது இப்படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல், ரசிகனைபடுத்தல்... இத்யாதி, இத்யாதி... எல்லாம்.
இப்படத்தின் கதாநாயகராக பொம்மை வியாபாரியாக நிதின் சத்யா, அவரது பொம்மைகளில் பாண்டி - மயில்சாமி உள்ளிட்ட பேய்கள் புகுந்து கொண்டு பயமுறுத்துவதைக் காட்டிலும் தன் முட்டை முழியை அடிக்கடி உருட்டி அதிகம் ரசிகனை பயமுறுத்துகிறார்.
மேன்சன் முதலாளி இமான் அண்ணாச்சி தொடங்கி., சினிமா ஹீரோ நைன் ஸ்டார் சிங்கம் புலி, பலே திருடன் யோகிபாபு, டுபாக்கூர் டாக்டர் லொல்லு சபா சாமிநாதன் , ராசிக்கல் போலி ஜோதிடர் குமரேசன் , பாண்டி - மயில்சாமி உள்ளிட்ட எல்லோரும்.. இதில் ஹீரோ மாதிரி வரும் பொம்மை வியாபாரி நிதின் சத்யா மாதிரியே காமெடி எனும் பெயரில் கடி த்து ரசிசிகனை தியேட்டரை விட்டு ஓட விடுகின்றனர். பாவம்! இப்பட டைட்டில் நாயகர் பாண்டி - மயில்சாமி மட்டும் கொஞ்சம் ரசனை கூட்டும்பலம்!
ஹீரோயினாக வரும் ரக்ஷா ராஜ் சும்மா வந்து போவதோடு சரி. நிதின் சத்யா, ரக்ஷா ராஜ் காதலில் உப்பு, சப்பு, உயிர்ப்பு, ஈர்ப்பு.... எதுவும் இல்லை. பாவம்!
கே.சுரேஷின் ஒளிப்பதிவு, குமாரின் இசை, எல்லாம் ஏதோ இருக்கிறது.... எனும் அளவில் இருக்கிறது. இவை யாவது பரவாயில்லை சபரி பெரியசாமியின் படத்தொகுப்பு பாடாவதி தொகுப்பு.
எஸ்.டி.குணசேகரனின் எழுத்து, இயக்கத்தில் பேய் படங்களுக்கு சமீபகாலமாக ரசிகர்கள் தரும் ஆதரவு பார்த்து தயாராகி வந்திருக்கும் இத்திரைப்படத்தில் வரும் பேய்கள் காப்பகமும், அதில் கண்ணாடி ஜாடிக்குள் கிராபிக்ஸ் உதவியுடன் பேய்கள் அடைக்கப்பட்டிருக்கும் விதமும் புதுமை. அதே மாதிரி, நிதின் சத்யாவின் பொம்மைகளுக்குள் பாண்டி உள்ளிட்ட பேய்கள் குடியேறி கலாட்டா செய்வதும் புதிய கான்செப்ட் என்பது ஆறுதல்! ஆனாலும், காமெடி காட்சிகள் எல்லாம் ரசிகனை துரத்தி, துரத்தி கடிப்பதும், படத்தில் வரும் பேய்கள் மாதிரியே அடிப்பதும் பலவீனம்.
ஆக மொத்தத்தில், "பாண்டியோட கலாட்டா தாங்கல - தலைவலி தாங்கல..."