மொத்தமே இரண்டே இரண்டு பேர் மட்டுமே நடித்து, வித்தியாசமான முயற்சியாக ஒரு சைக்கோ த்ரில்லர் படமாக வெளிவந்திருக்கும் திரைப்படமே வித்தையடி நானுனக்கு.
ஒரு நடிகையின் மகள், தன் அம்மா தன்னையும் நடிகையாக்க முயற்சித்ததால் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவரது கார் நடுவழியில் பெட்ரோல் இல்லாது நின்று போக, அந்த வழியாக காரில் வரும் ஒரு நடுத்தர வயது ஆணிடம் உதவி கோருகிறாள் அந்த இளம் பெண். அவரும் உதவுகிறார். அந்த உதவி உபத்திரத்தில் முடிகிறதா? உபயோகமாகிறதா...? என்பது தான் ‛வித்தையடி நானுனக்கு' மொத்தப் படமும்!
கதையின் நாயகியாக கதாநாயகியாக பிடிக்காத பெண்ணாக மித்ராவாக நடித்திருக்கும் சௌரா சையத் மிகப் பிரமாதமாக நடித்திருக்கிறார். புதுமுகம் சௌரா சையத், நிஜத்தில் அமெரிக்கா வாசியாம். ஆனால், அந்த சுவடு தெரியாமல் பிரமாதமாக நடித்திருக்கிறார். பேஷ், பேஷ்!
மித்ராவுக்கு உதவும் நடுத்தர வயதுக்காரராக, இயக்குனர் தீனதயாளனாக ராம்நாதன் கே.பி நச்சென்று நடித்திருக்கிறார். இவர்தான் இப்படத்தின் இயக்குனரும் என்பதாலோ என்னவோ பாத்திரத்தில் கூடுதல் ஈடுபாடு காட்டியிருப்பது பளிச் என இப்படத்திற்கு பலமாகியிருக்கிறது.
நடிக்க பிடிக்காத மித்ராவிடம், தீனதயாளன் டைரக்டர், நீ யார் மாதிரி தெரியுமா இருக்க? பீட்டர் மாதிரி .... என தன் செல்லப் பிராணியை உதாரணம் சொல்வதும், "ஒரு ரொமான்டிக் லுக் பண்ணு.... அதப்பார்த்துட்டு நான்சிரிக்க மாட்டேன்... என்பதும் அதற்கு மித்ரா, இப்பதான பண்ணினேன்... என்பதும் ரசனையான காட்சிகள் .
இருவருக்கிடையேயான விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் நடக்கும் நெருப்பான போராட்டம் தான் வித்தையடி நானுனக்கு என்ற அளவில் மெத்தப் படத்திலும் ஒரேயொரு பாடல்தான். அதுவும் மகாகவி பாரதியின் பாயும் ஒளி நீ எனக்கு.... எனத் தொடங்கித் தொடரும் அற்புதமான அந்தப்பாடலுக்கு மேற்கத்திய பாணியில் மெட்டமைத்துள்ள இசைஞர் விவேக் நாராயண் புதுசாக தெரிகிறார்.
அதே மாதிரி, இப்படத்தில் அடிக்கடி, ஒரே காட்சியில் ஒரே சூழ்நிலைக்கு அதில் உள்ள இரண்டு கதாபாத்திரங்களும் விதம்விதமான மனோபாவங்களை வெளிப்படுத்துவார்கள். அந்த உணர்வுக்குவியல்களை தனது இசையால் திகிலும் தீஞ்சுவையும் கலந்து நமக்குள் ஊடுருவ விடுகிறார் இப்பட இசையமைப்பாளர் விவேக் நாராயண் என்பது பலம். ராஜேஷ் கடம்கோட்டின் ஒளிப்பதிவும் ஓவியப் பதிவென்பது இப்படத்திற்கு மேலும் பலம்!
மொத்தப் படத்திலும் இரண்டே இரண்டு பாத்திரங்கள் தான் என்றாலும் ஆழ்மனத் துடிப்பை எகிற வைத்து, திரையை சூடாக்கும் அனலடிக்கும் காட்சிகளுடன் ராம்நாதன் கே.பி அழகாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
ஆனாலும், எல் 9 மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனங்களின் பெருமைமிகு கூட்டுத் தயாரிப்பாக வெளிவந்திருக்கும் ‛வித்தையடி நானுக்கு' திரைப்படம் முழுக்க இரண்டே இரண்டு பேரே... என்பதாலும், நிறைய டயாலக்குகள் ஆங்கிலத்தில்... வருவதாலும்., ஒரு சில லாஜிக் நெருடல்களாலும் சற்றே போரடிக்கிறது .
ஆகவே, புதுமையான முயற்சி என்ற அளவில் வித்தையடி நானுனக்கு - ஒரு நவீன திரில்லர் விந்தையடி எனலாம்!