தினமலர் விமர்சனம்
இதுவரை, இளம் குணச்சித்திர நடிகராக இருந்த மெட்ராஸ் கலையரசனும், காமெடி நடிகராக கலக்கிய காளி வெங்கட்டும் அறிமுக பெண் இயக்குனர் உஷா கிருஷ்ணன் இயக்கத்தில், கதாநாயகர் அவதாரம் எடுத்திருக்கும் நெஞ்சை அள்ளும் தஞ்சைக் கிராமிய மணம் கமழும் காமெடி குடும்பபடமே "ராஜா மந்திரி".
கதைப்படி, சூர்யா எனும் காளி வெங்கட்டும், கார்த்தி எனும் கலையரசனும் அடிக்கடி அடித்துக் கொண்டாலும், தஞ்சை மாவட்ட கிராமம் ஒன்றைச் சார்ந்த பாசக்கார அண்ணன், தம்பிகள். மற்றவர்களால் இவர்களுக்கு ஏதாவது விபரீத மென்றால் ஒன்று சேர்ந்து எதிராளியை உண்டு, இல்லை... என்று செய்து விடுவார்கள். இவர்களுடைய அப்பா சொந்த ஊரிலேயே சின்னதாக சோடா கம்பெனி வைத்து சோடா தயாரித்து, அதை அந்த ஏரியா கடைகளுக்கு சப்ளை செய்து
வருகிறார். திருமண வயதை தாண்டிய சூர்யா - காளி வெங்கட்டுக்கு, நீண்ட நெடுநாட்களாக திருமண ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஆனால், அவருக்கு எந்த
பெண்ணும் அமையாமல் வரன்கள் வந்த வழியே வாயிற்கதவோடு தட்டிப்போகிறது.
இந்நிலையில் இவர்களது வீட்டருகே மகா - மகாலட்சுமி எனும் வைஷாலி மற்றும் அவரது குடும்பத்தினர் குடியேறுகிறார்கள். மகா - வைஷாலியை அண்ணன், தம்பி இருவரும் போட்டி போட்டுக் கொண்டு டாவடித்து வருகிறார்கள். அதேநேரம், கார்த்தி - கலையரசனுக்கு அருகில் இருக்கும் கும்பகோணம் டவுன் கல்லூரியில் பட்டப்படிப்பு படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க, கார்த்தி - கலையரசன் தனது காதலுக்கு இடைஞ்சலாக இருப்பார்... என்று கருதி., அவரை கல்லூரிக்கு அனுப்பி விடுகிறார் சூர்யா -காளி வெங்கட். கல்லூரியில் உடன் படிக்கும் மற்றொரு நாயகி சுபா எனும் ஷாலினை சந்திக்கும் கலையரசன், அவரை காதலிக்கிறார். இதன்பிறகு, கல்லூரி படிப்பு முடிந்து ஊருக்கு திரும்பும் தம்பி கார்த்தி - கலையரசன், தனது அண்ணன் சூர்யா - காளி வெங்கட்,
இன்னமும் மகா எனும் மகாலட்சுமி -வைஷாலியிடம், தன் காதலை சொல்லாமல் அவர்பின்னாலேயே சுற்றி வருவதை பார்த்து, சூர்யா எனும் காளியை.,
கடுப்பேற்றி விட, அவர், அன்றைய இரவு நேரம் வெறுப்பில், வேலிதாண்டி மகா - வைஷாலியிடம் தன் காதலை சொல்லப் போகிறார். அதை மகாவின் அப்பா பார்த்து, சத்தம் போட்டு ஊரைக் கூட்டி விடுகிறார்.
இதனால், சூர்யா -காளி பிரச்சினையில் மாட்டிக்கொள்ள மகா - வைஷாலி குடும்பத்திற்கும், சூர்யா -காளி குடும்பத்திற்கும் பெரும் பிரச்சினை ஆகிறது. அதன்பின்னர், மகா - வைஷாலி குடும்பத்தினர் அந்தவீட்டை காலி செய்து வேறு ஊருக்கு சென்று விடுகின்றனர். இந்நிலையில், கார்த்தி - கலையரசனின் புதிய திருப்பமாக காதலியையே சூர்யா - காளிக்கு பெண் கேட்டு போகின்றனர் கலை - காளி குடும்பத்தினர். நிச்சயமும் நடந்தேறுகிறது. இதனால் அதிர்ச்சியாகும் கார்த்தி - கலையரசன், சூர்யா - காளியின் காதலி மகா - வைஷாலியை தேடி களத்தில் குதிக்கிறார். இறுதியில், சூர்யா - காளி வெங்கட்டுக்கு வைஷாலியை
தேடிக் கண்டுபிடித்து ஜோடி சேர்த்து வைத்தாரா கார்த்தி - கலையரசன்?, மகா - வைஷாலியுடன் சூர்யா -காளி ஜோடிசேர்ந்தாரா? கார்த்தி - கலையரசனின்
கல்லூரி காதலி, அவருக்கே கிடைத்தாரா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு தஞ்சை மண் மனம் கமழ காமெடியாகவும், கலக்கலாகவும், களேபரமாகவும், கலர்புல்லாகவும் விடை சொல்கிறது ராஜா மந்திரி படத்தின் மீதிக்கதையும், மிக அழகான காட்சிப்படுத்தல்களும் .
இதுவரை காதல், ஆக்ஷன் என இணை, துணை நாயகராகவும், கேரக்டர் ரோல்களிலும் கலக்கிய மெட்ராஸ் கலையரசன், இப்படத்தில் கதாநாயகராக கார்த்தி எனும் பாத்திரத்தில் காமெடியிலும் கலக்கியிருக்கிறார். மேலும், தனக்கே உரித்தான லவ், ரொமான்ஸ் காட்சிகளிலும் தனது சிறப்பான நடிப்பை செவ்வனே வெளிப்படுத்தியுள்ளார் மனிதர், என்றால் மிகையல்ல .
வித்தியாசமான காமெடி மற்றும் விவகாரமான குணச்சித்திர நடிகரான காளிவெங்கட்டும் முழுநீள கதாநாயகர்களில் ஒருவராக இப்படத்தில் சூர்யா எனும் கேரக்டரில் பேஷாக வலம் வந்திருக்கிறார். லவ் ,காமெடி, செண்டிமென்ட் என சகலத்திலும் கக்கை போடு போட்டிருக்கிறார், காளி. தன்னால் எந்தவொரு
கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்யமுடியும் என்பதை இந்த படத்தில் நிரூபித்து காட்டியிருக்கும் காளி வெங்கட்டுக்கு ஒரு சல்யூட் வைக்கலாம்.
இப்படியொரு அண்ணனோ, தம்பியோ நமக்கு இல்லையே? என்று ஏங்கவைக்கும் அளவுக்கு காளி - கலை இருவரும் பாசக்கார சகோதரர்களாக பக்காவாக நடித்துள்ளனர். பலே.பலே. அதற்கேற்ற படி கதை, திரைக்கதையை அசத்தலாக உருவாக்கியிருக்கிறார் இப்பட இயக்குனரும் என்பது படத்திற்கு பெரும் பலம்.
மகா எனும் மகாலட்சுமியாக வைஷாலி அச்சு அசல்கிராமத்து பெண்ணாக ரசிகன் மனதில் அசத்தலாக பதிகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் இவரது நடிப்பு செமஉருக்கம் என பாராட்டி சொல்ல வைக்கிறது.
மற்றொரு நாயகியாக சுபா கேரக்டரில் வரும் ஷாலின் கேரள இறக்குமதியாம். அங்கு, மலையாலத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழுக்கு அறிமுகமாகும் முதல் படம். ...இது என்பது தெரியாத வகையில் படத்தில் தனது கதாபாத்திரத்தை பக்காவாக உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
கலையரசனின் கல்லூரி நண்பராக வரும் பாலசரவணன் மூன்றாவது நாயகரா? எனக் கேட்கும் அளவிற்கு நிறைய காட்சிகளில் நிறைவாய் காமெடி செய்து தியேட்டரில் விசில் சப்தம் குறையாமல் பார்த்து கொள்கிறார் பலே!
"ப்ரியா நீ பின்னாடி இருந்து பார்க்க பிரியங்கா சோப்ரா மாதிரியே இருக்க..", "பரிட்சையே படிச்சுட்டு எழுதுறது தானே சார்...", "டேய் கட்டில்லாம் புடிச்சுடாத... சுபா, உனக்கு அண்ணியாவரத்தான் வாய்ப்பு அதிகம்..." என கலையரசனை கலாய்ப்பது உள்ளிட்ட பாலசரவணனின் டைமிங் டயலாக்குகள், காமெடிகள் செமயாய், ரசிக்கும்படியாக இருக்கிறது.
நாயகர்களின் பாசம் பார்த்து பதறும், கதறும் தந்தையாக நாடோடிகள் கோபால், தாய் ஜெயந்தி, ஜோசியரும் நாயகி மகா - வைஷாலியின் அப்பாவுமான கஜராஜ், இவரது மனைவி ரிந்து ரவி, நாயகிசுபா - ஷாலினின் அப்பாவாக வரும் பெரரா, அவரது மனைவியாக வரும் ஆனந்தி சுபாவின் மனநிலை முடியாத சகோதராக வரும் ராஜபாண்டி, கல்யாண புரோக்கர் சூப்பர் குட் சுப்பிரமணி , நாயகர்களின் ஒ.சி.குடி சித்தப்பு காத்தாக வரும் இயக்குனர் சரவண சக்தி, நாயகியின் தோழி சுடர் விழியாக வரும் அபிநயா உள்ளிட்ட எல்லோரும் பக்கா நடிப்பில் இப்படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளனர்.
பி. ஜி.முத்தையா ஒளிப்பதிவில் தஞ்சை பகுதி கிராமங்கள் நெஞ்சைஅள்ளுகின்றன. மனிதர், அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கதைக்கு தேவையான கிராமிய எழில் கொஞ்சும் ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் ரம் ரம் ரம..பம்பரம்.... , எதிர்த்த வீட்டு காலிபிளவரே ... என்னைக் காதலிக்கும் லவ் வரே .. தினமும் பார்க்கும் தினமலரே..., மெதுவா , மெதுவா., கூட்டத்த கூட்டி.... பாடல்களும், பின்னணி இசையும் புது வித ராகம்.
"உடைச்சு விட்ட ஓஸ் பைப் மாதிரி சும்மா அழுதுட்டு..." எனும் கிராமிய சொலவடையில் வரும் வசனத்தில் தொடங்கி, அம்மா பேங்க் வரைக்கும் போயிட்டு வரேன்மா.. ஏலேய் நீ பேங்க் வாசல் வரைக்கும் தான் போக முடியும்... உள்ளே போக முடியாது... எனும் நக்கல், நையாண்டி டயலாக்குகள் வரை கிராமிய மணம் கமழ விட்டிருக்கும் அறிமுக பெண் இயக்குனர் உஷா கிருஷ்ணன் தனது முதல்படத்தையே அழகிய கிராமத்து பின்னணியில் காமெடி, லவ் ,
செண்டிமென்ட் எல்லாம் கலந்து ஜனரஞ்சகமாக குடும்பத்துடன் பார்க்கும்படியான ஒரு அற்புதமான படமாக தர வேண்டும் ...என தீர்மானமாக இருந்திருப்பார் போலும் ...அவர் நினைத்த மாதிரியே ,அசத்தலான படம் கொடுத்திருக்கிறார்.
ஆகமொத்தத்தில், ராஜா மந்திரி நெய்மணக்கும் கேசரியில் போட்ட முந்திரியாக இனிக்கிறது. ருசிக்கிறது! ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!"