நாயகன் - நிஷல் தேவா
நாயகி - வந்தனா குப்தா
இயக்குனர் - ஆர்.பி. பட்நாயக்
இயக்குனர் ஆர்.பி. பட்நாயக் இம்முறை ஒரு ஹாரர் த்ரில்லர் பாணியிலான படத்துடன் களம் புகுந்திருக்கிறார். இது தான் இப்போதைய ட்ரன்ட் என்றாலும் அவர் இந்த வகைப்படத்தை எப்படி கையாண்டு இருக்கிறார் என்று பார்க்கலாம்.
நாயகன் சாத்விக்கு என குடும்பம் ஏதும் கிடையாது, தனது காதலியுடன் இருப்பதற்காக லாஸ்வெகாஸ் செல்கிறான். அவனுடன் சுப்பு எனும் அவனது நண்பனும் தங்கியிருக்கிறான். சுப்புவிற்கு ஆவி பேய் போன்ற விசயங்களில் நம்பிக்கை உண்டு, ஆனால் சாத்விக்கு இம்மாதிரியான விசயங்களில் கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது. ஒரு நன் நாளில் சுப்பு சாத்விக்கு ஒரு சவால் விடுகிறான், முடிந்தால் ஒரு நாள் இரவை பிணங்களை புதைத்து வைத்திருக்கும் இடுகாட்டில் தங்குமாறு சொல்கிறான். இதை ஏற்று கொள்ளும் சாத்விக் அதை வெற்றி கரமாக முடித்தும் விடுகிறான். இங்கு தான் திகில் அத்யாயம் ஆரம்பமாகிறது.
அந்த நாளுக்கு பின்னர், சாத்விக் பல அமானுஸ்ய நிகழ்வுகளை உணர ஆரம்பிக்கிறான், இதனுடன் தன்னை சாந்தி என்கிற பெண் தொடர்வதையும் கவனிக்கிறான், இதனால் மருத்துவர் பட்நாயக்கை நாடுகிறான். இந்த அமானுஸ்ய நிகழ்வுகளுக்கு காரணம் என்ன? சாந்தி யார்? இந்த பிரச்சனைகள் தீர்ந்ததா என்பதை திகிலுடன் சொல்லியிருக்கிறார்கள்.
நிஷல் தேவா அறிமுக நாயகன் சாத்விக் -ஆக நடித்திருக்கிறார், அவரால் முடிந்த அளவிற்கு கதாபாத்திரத்தை காப்பற்றியிருக்கிறார். பட்நாயக் அழுத்தமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் முக்கிய கதாபாத்திரமும் அவர் தான். பல முடிச்சுகளை அவர் தான் அவிழ்கிறார்
படத்தின் பெரும் பலவீனம் அதில் காட்டப்படும் அமானுஸ்ய விசயங்கள் தான், அதுவும் கிளைமேஸ் காட்சி அபத்தத்தின் உட்சம். தற்காலத்து திகில் படங்களில் மிகவும் மோசமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் வந்த படம் இது என்று சொல்லலாம். லாஸ்வெகாஸ் எனும் அருமையான ஒரு இடத்தை அழகாக கேமிராவில் பதிவு செய்ய தவறிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சில காட்சிகள் தவிர்த்து.
படத்தின் அனைத்து பகுதியிலும் பணியாற்றியிருக்கிறார் பட்நாயக். ஒற்றை ஆளாக படத்தை கரை சேர்க்கலாம் என்கிற அவரது எண்ணம் நிறை வேறாமல் இருக்கிறது. மொத்தமாக, இந்தபடம் ஒரு மோசமான திகில் திரைப்படமாக பதிவாகிறது. என்னதான் கதாபாத்திரங்கள் நன்றாக இருந்தாலும் மொத்தமாக ரசிகர்களை கவரும் மேஜிக் படத்தில் இல்லை.
துளசிதளம் - பொம்மை பூச்சாண்டி