நடிகர்கள் : மனீஷ்பால், பிரதுமன்சிங், சிக்கந்தர்கெர்
இயக்கம் : அபிஷேக் சர்மா
தயாரிப்பு : ஆர்த்தி ஷெட்டி மற்றும் பூஜா ஷெட்டி
தேரே பின்லேடன் படத்தின் இரண்டாம் பாகமாக, அபிஷேக் சர்மா இயக்கத்தில், மனீஷ்பால் நடிப்பில் வெளியாகி இருக்கும் காமெடி படம் 'தேரே பின்லேடன் டெட் ஆர் அலைவ்'. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...
கதைப்படி, சர்மா எனும் மனீஷ்பால் பாலிவுட்டில் ஒரு பெரிய இயக்குநராக வர வேண்டும் என்ற கனவோடு சுற்றி திரிகிறார். ஒருநாள் இவரது கண்ணில் ஒசாமா பின்லேடன் போன்று அச்சு அசாலாக இருக்கும் பட்டி சிங் எனும் பிரதுமன் சிங்கை பார்த்து அதிர்ச்சியாகிறார். இந்த விஷயம் எப்படியோ அமெரிக்க வரை செல்கிறது. ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஒபாமா, ஒசாமா கொல்லப்பட்டதை நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கும் சூழலில் ஒசாமா போன்று பட்டி இருப்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுஒருபுறம் இருக்க பயங்கரவாதியான கலீலி எனும் பியூஸ் மிஷ்ரா, ஒசாமா உயிரோடு தான் இருக்கிறார் என்று நிரூபிக்க நினைக்கும் சூழலில் பட்டி அவரது தோற்றத்தில் இருப்பதை ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் அமெரிக்க தரப்பிலிருந்தும், பயங்கராவாதி தரப்பிலிருந்தும் பட்டியை கடத்த திட்டமிடுகிறார்கள். இதில் யாருக்கு வெற்றி கிடைத்தது. அதற்கு சர்மா எனும் மனீஷ் பாலை இருதரப்பும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை காமெடியாக சொல்லியிருக்கிறது தேரே பின்லேடன் டெட் ஆர் அலைவ் படத்தின் மீதிக்கதை.
ஹீரோ ரோல் ஏற்றிருக்கும் மனீஷ் பால், பேசாமல் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவே தொடரலாம், அது தான் அவருக்கு செட்டாகிறது, சினிமா செட்டாகவில்லை. பிரதுமன்சிங், சிக்கந்தர்கெர், பியூஷ் மிஸ்ரா இவர்களில் பிரதுமன் சிங் நடிப்பு சில காட்சிகளில் மட்டும் ஓவர் ஆக்டிங்காக தெரிகிறது, மற்றபடி ஓ.கே.,
தேரே பின்லேடன் படத்தின் முதல்பாகத்தை இயக்கிய அபிஷேக் சர்மா தான் இப்படத்தின் இயக்குநரும் கூட. முதல்பாகத்தில் ரசிகர்களை ஈர்த்த அபிஷேக், இம்முறை ரசிகர்களை ஈர்க்க தவறிவிட்டார். ஏனென்றால் படத்தில் ஒரு தெளிவான கதையும் இல்லை, அதற்கு ஏற்ற நடிகர்களிடம் நடிப்பும் வெளிப்படவில்லை. பல இடங்களில் ஏதோ கார்ட்டூன் படத்தை பார்த்த உணர்வையே தருகிறது. மேலும் படத்திற்கான இசை மற்றும் வசனங்களும் சுமாரான அளவிலேயே இருப்பதால் படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
மொத்தத்தில், 'தேரே பின்லேடன் டெட் ஆர் அலைவ்' - 'வெத்துவேட்டு!'