நடிகர்கள் ; துல்கர் சல்மான், பார்வதி, அபர்ணா கோபிநாத், சீதா, நெடுமுடி வேணு, செம்பான் வினோத் மற்றும் பலர்.
டைரக்சன் ; மார்ட்டின் பரக்கத்
ஏபிசிடி படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக துல்கர் சல்மான்-மார்ட்டின் பரக்கத் இணைந்துள்ள படம் இது..
சந்தோஷத்துல பெரிய சந்தோசம் அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்குறதுதான் என்கிற பாக்யராஜின் கான்செப்ட் தான் கதைக்கரு.. அதற்கு டச்சிங்காக பேண்டஸி முலாம் பூசி 'சார்லி'யாக மாற்றியுள்ளார் இயக்குனர் மார்ட்டின் பரக்கத்.
வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை, ஏற்கனவே பார்த்து வரும் ஐடி கம்பெனி வேலை என சாதாராண வாழ்க்கை எதுவுமே பிடிக்காமல், சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு கிளம்புகிறார் பார்வதி. அப்படி வந்த இடத்தில் தோழி மூலமாக அவருக்கு ஏற்கனவே ஒருவர் உபயோகப்படுத்திய மேன்ஷன் ஒன்றில் தங்குவதற்கு அறை ஒன்று கிடைக்கிறது. அந்த அறையில் உள்ள பொருட்கள் அனைத்தும் வித்தியாசமான சிந்தனையுடன் உருவாக்கப்பட்டதாக இருக்கின்றன. அந்த அறையில் உள்ள நோட்டு புத்தகத்தில் சித்திரமாக வரையப்பட்ட உண்மை கதை ஒன்றின் மூலம் அங்கே தங்கியிருந்த துல்கரை பற்றி அறிந்துகொள்கிறார்.
ஆனால் அந்த உண்மைக்கதை சஸ்பென்சாக ஓரிடத்தில் நிற்க, அதன்பின் என்ன நடந்திருக்கும் என்கிற ஆவலில் துல்கரை கண்டுபிடிக்க கிளம்புகிறார் பார்வதி. துல்கர் தொடர்புடைய நபர்களை ஒவ்வொருவராக சந்திக்கும் பார்வதி, அவர்கள் மூலம் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து துல்கரின் மீது காதல் வயப்பட்டு இன்னும் தீவிரமாக தேடுகிறார். இரண்டுமுறை இருவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு இருந்தும் சந்திக்கமுடியாமல் போகிறது.. இறுதியில் பார்வதி துல்கரை சந்தித்தாரா, அவரின் காதல் கைகூடியதா என்பது க்ளைமாக்ஸ்.
இப்படி ஒரு மனிதன், எந்நேரமும் உற்சாகமாக, எதையும் பாசிடிவாக எடுத்துக்கொள்பவனாக இருக்க முடியுமா என்கிற ஆச்சர்யத்தை படம் முழுவதும் நம் கண்களில் நிரப்புகிறார் துல்கர் சல்மான், செல்போன் வைத்துக்கொள்ளாத அவரது குணம் ஒன்றே அவரது கேரக்டரை பளிச்சென சொல்லிவிடுகிறது.. தற்கொலை செய்ய முயலும் பெண்ணை காப்பாற்றுவது, தான் நடத்திவரும் முதியோர் இல்லத்தில் உள்ள வயதானவரின் முன்னாள் காதலியை அழைத்துவந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பது என எந்நேரமும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே கடத்தும வேலையை செவ்வனே செய்திருக்கிறார் துல்கர்.
பார்வதி மட்டும் சளைத்தவரா என்ன..? குட்டையாக வெட்டிய சுருள்முடி, சோடாபுட்டி கண்ணாடி என தன்னை எந்தவிதத்திலும் அழகாக காட்டிக்கொள்ள விரும்பாத பெண்ணாக அற்புதமாக நடித்துள்ளார். துல்கரின் அறையில் தங்கிருக்கும்போது அவர் படும் அவஸ்தைகள் காமெடி ரகம்.. துல்கர் மீது அவர் கொஞ்சம் கொஞ்சமாக காதல் வயப்படுவது படு யதார்த்தம்.
இன்னொரு கதாநாயகியாக பாப் கட்டிங் ஹேர்ஸ்டைல் அபர்ணா கோபிநாத் (படத்துக்குப்படம் இவரோட ஹேர்ஸ்டைல மாத்தவே மாட்டீங்களாப்பா...?) தான் தற்கொலை செய்துகொள்வதை துல்கர் தடுத்து தன்னை காப்பாற்றிய பின்னர், வரும் காட்சிகளில் எல்லாமே பாந்தமாண நடிப்பில் அசரடிக்கிறார். படத்தின் துணை கதாபாத்திரங்களாக வரும் சீதா, நெடுமுடி வேணு, கல்பனா, செம்பான் வினோத், ரெஞ்சி பணிக்கர், காமெடியனாக வரும் சௌபின் சாஹிர் என அனைவரும் பொருத்தமான தேர்வு என்பதை நிரூபித்துள்ளார்கள். ஜோமோன் டி.ஜானின் ஒளிப்பதிவில் கிளைமாக்ஸில் வரும் திருச்சூர் பூரம் திருவிழா காட்சி பிரமிக்கவைகிறது. கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் மனதை வருடிச்செல்கின்றன.
தனது முதல் படமான ஏபிசிடியில் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த மலையாள இளைஞர்கள் இருவர் கேரளாவில் படிப்பதற்காக வந்த இடத்தில் நடக்கும் யதார்த்த வாழ்வியல் கூத்துக்களை அழகாக பதிவு செய்த மார்ட்டின் பரக்கத், இந்தப்படத்தில் ஒரு மனிதனின் உண்மையான சந்தோசம் எதில் இருக்கிறது என்பதை துல்கர் கதாபாத்திரம் மூலமாகவும், ஆர்வத்தை தூண்டும் திரைக்கதை மூலமாகவும் படம் காட்டியிருக்கிறார்.. அதனாலேயே சில இடங்களில் படம் மெதுவாக நகருவது போல தெரிகிறது... இல்லையில்லை மெதுவாகத்தான் நகர்கிறது.. ஆனால் அதுகூட நமக்கு சந்தோஷ அலுப்பாக மாறுவதுதான் இந்த 'சார்லி'யின் மேஜிக்..
மொத்தத்தில், இந்த சார்லி அன்பையும் மகிழ்ச்சியையும் மட்டுமே கடத்துபவன்.. ரசிகர்களுக்கும் அதையேதான் செய்திருக்கிறான்.