நடிகர்கள் : குஞ்சாக்கோ போபன், ரீனு மேத்யூஸ், பரத், சன்னி வெய்ன், நெடுமுடி வேணு, செம்பான் வினோத், ஜேக்கப் கிரிகரி
இயக்கம் : அனில் ராதாகிருஷ்ணன் மேனன்
கதை : இயற்கையை பாதுகாக்க கிளம்பும் இளைஞர் கூட்டத்தின் போராட்டம்.
7000 கண்டி என்பது கேரளாவின் இயற்கை எழில் சூழ்ந்த அடர்ந்த காட்டுக்குள் உள்ள ஆதிவாசி கிராமம். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தப்படி 15௦ வருடம் 'லார்டு லிவிங்ஸ்டோன்' என்கிற நிறுவனத்தின் குத்தகை அதிகாரத்தில் இந்த கிராமம் இருக்கிறது. ஆனால் இத்தனை வருடங்களில் அங்கே எந்தவித பணியும் நடைபெறவில்லை. அதன் ஒப்பந்த காலம் முடிவதற்குள் அந்த இடத்தில் அந்த நிறுவனம் தங்களது கம்பெனியை துவங்கிவிட்டால் அதன்பின் இன்னும் 35௦ வருடத்திற்கு அது அவர்களுக்கே சொந்தமாகி விடும்..
இதனால் அந்தப்பகுதியில் உள்ள காட்டு வளம் அழிக்கப்படுவதுடன் அந்தப்பகுதியில் குடியிருக்கும் ஆதிவாசி மக்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும்.. ஒப்பந்தம் முடிய ஆறு மாதங்களே உள்ள நிலையில் அந்த நிறுவனம் காடுகளை அழிக்கும் வேலையை ஆரம்பிக்கிறது. இந்த விஷயத்தை அறிந்த இயற்கை ஆர்வலரான குஞ்சாக்கோ போபன் இதை எப்படியாவது தடுத்து நிறுத்தி காட்டையும் பழங்குடி மக்களையும் காப்பற்ற முயற்சி எடுக்கிறார்..
தனி மனிதனான தன்னால் அது முடியாமல் போகவே இயற்கையின் மீது ஆர்வம் கொண்ட 100 பேருக்கு உதவி வேண்டி அழைப்பு விடுக்கிறார்.. ஆனால் வந்தவர்களோ ஆறு பேர் மட்டுமே.. இருந்தாலும் வெவ்வேறு துறைகளில் நிபுணர்களான இவர்களின் உதவியுடன் அந்த நிறுவனத்தின் கட்டுமான பணிகளை நடக்கவிடாமல் முறியடித்து இயற்கையை எப்படி பாதுகாக்கிறார்கள் என்பது தான் க்ளைமாக்ஸ்.
எந்த தனிப்பட்ட நடிகரையும் தனியாக முன்னிறுத்தாமல் கதாபாத்திரங்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு தந்திருக்கிறார்கள். இயற்கை ஆர்வலராக வரும் குஞ்சாக்கோ போபனின் ஆதங்கம் படம் பார்க்கும் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.
சென்னையில் இருந்து கிளம்பி வரும் தசை நோயால் பாதிக்கப்பட்ட பரத், புனேவில் இருந்து வரும் துப்பாக்கி தயாரிப்பதில் எக்ஸ்பர்ட்டான ரீனு மேத்யூஸ், பறவை, விலங்குகளின் கழிவுகளை ஆராய்ச்சி செய்யும் புரபசராக செம்பான் வினோத், மேஜிக்மேன் சன்னி வெய்ன், ரசாயனத்தில் தேர்ச்சிபெற்ற ஜேக்கப் கிரிகரி, இலவச மருத்துவமனை சிறையில் இருந்து தப்பிவரும் வயதான நெடுமுடிவேணு, இவர்களையெல்லாம் காட்டுக்குள் வழிநடத்தி செல்லும் மலவேடனாக வரும் சுதீர் காரமணா என அனைவரின் பங்குமே சிறப்பானது.
தசை வலியால் பயணம் முழுவதும் அவதிப்படும் பரத், மலைவாழ் மக்கள் அளிக்கும் மூலிகை சிகிச்சையால் குணமாவதை பார்க்கும்போது இந்த நகர வாழ்க்கையில் நாம் இயற்கையை எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பது தெரிகிறது. காட்டை அழிப்பதற்காக வெளிநாட்டு நிறுவனம் உள்ளே வந்து வேலையை ஆரம்பிக்க இந்த டீம் அனைவைரும் தங்களது தொழில் திறமைகளை பயன்படுத்தி அவர்களை விரட்டுவது சுவாரஸ்யம்..
படத்தின் மொத்த பளுவையும் தனது தொழில் தூக்கி வைத்துக்கொண்டு பயணித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயேஷ் நாயர்.. படம் ஆரம்பித்த கால் மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் நாமும் காட்டுக்குள்ளேயே பயணித்த சந்தோஷ உணர்வும் படம் பார்த்து முடித்துவிட்டு வெளியே வந்ததும் சிட்டியை பார்க்கும்போது ஒரு அலுப்பும் ஏற்படுவது அவரது ஒளிப்பதிவுக்கு கிடைத்த வெற்றி.
நான் இப்படித்தான் படம் எடுப்பேன் என்னை எதுவும் கட்டுப்படுத்தாது என்கிற விதமாக படங்களை இயக்குபவர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன். அவரது முந்தைய இரண்டு படங்களிலும் இது தெளிவாக புலப்பட்டிருக்கும். இருந்தாலும் காட்டுக்குள் பயணம் என்பதே த்ரில்லிங் அனுபவம் என்பதால் முதல் பாதியில் இந்த இயற்கை பாதுகாப்பு குழுவினரின் திருப்பங்கள் எதுவும் இல்லாத பயணம் சற்று அலுப்பாகத்தான் இருக்கிறது.. அதற்கு ஓரளவு பரிகாரம் செய்கிறது விறுவிறுப்பான இரண்டாம் பாதி.. மலைவாழ் மக்களின் யதார்த்த வாழ்க்கையையும் கண்முன்னே நிறுத்தியுள்ளார் இயக்குனர் அனில்.
காதல், கத்திரிக்காய் என எந்த சமரசமும் செய்யாமல், இயற்கையை அதாவது காடுகளையும், பழங்குடி மக்களையும் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்த்துவதற்காக மட்டுமே ஒரு படத்தை இயக்கியுள்ள அனில் ராதாகிருஷ்ணன் மேனனுக்கு ஒரு ராயல் சல்யூட்.