சல்மான் கான் தயாரிப்பில் சூரஜ் பஞ்சோலி, அதியா ஷெட்டி பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள ரொமான்டிக் கம் ஆக்ஷன் படம் - ஹீரோ
பத்திரிகையாளர் மரணத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் சூர்யகாந்த் பாஷா (ஆதித்யா பஞ்சோலி). சிறையில், சூர்யகாந்த் பாஷாவுக்கு ஐ.ஜி., ஸ்ரீகாந்த் மாத்தூருக்கும் (திக்மான்சு துலியா) இடையே பகை உருவாகிறது. இவர்களிடையேயான பகை தான் படத்தின் கரு, கதை, களம் எல்லாம்...
இந்நிலையில், ஹீரோ உத்வேகத்துடன் இப்படத்தில் மட்டுமல்லாது, பாலிவுட் திரையுலகிற்கும் அறிமுகமாகிறார் சூரஜ் (சூரஜ் பஞ்சோலி). சூரஜ் பஞ்சோலியிடம், அவனது தந்தை சூர்யகாந்த் பாஷா, ஐ.ஜி. மகள் ராதாவை (அதியா ஷெட்டி) கடத்த சொல்கிறார். ராதாவை, 14 நாட்கள் தன்னுடனே வைத்துக்கொள்ளுமாறும் கூறுகிறார். இதனிடையே, சூரஜ்க்கும், ராதாவிற்கும் இடையே காதல் பூக்கிறது. பின் அவர்கள் சேர்ந்தனரா இல்லையா என்பது படத்தின் மீதிக்கதை....
படத்தை திறம்பட இயக்குநர் நிகில் அத்வானி இயக்கியிருக்கும் போதிலும், படம் பார்ப்பவர்களே கணிக்கும் படியான அடுத்தடுத்த காட்சிகள், பலவீனமான கேரக்டரைசேஷன் உள்ளிட்டவைகள் படம் பார்ப்பவர்களை சலிப்படைய செய்கிறது. படத்தின் வசனங்கள் அரதப்பழசாக உள்ளன. ஒளிப்பதிவு குறிப்பிடும்படியாக இல்லை. படத்தின் இசை, பாடல்களில் மட்டுமே தெரிகிறது.
ஆக்ஷன் காட்சிகளில், சூரஜ் பஞ்சோலி பிரகாசித்திருக்கும்போதிலும், நடிப்பில் கிலோ என்ன விலை என்று கேட்க தான் வைக்கிறார் சூரஜ். அதியா ஷெட்டி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவளது பேஸ் எக்ஸ்பிரஷன், படம் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை மட்டுமே பரிசாக அளிக்கிறது. திக்மான்சு துலியா மற்றும் ஆதித்யா பஞ்சோலி தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சேத்தன் ஹன்ஸ்ராஜ்., சரத் கேல்கார் நடிப்பு ஆறுதல்..
ஹீரோ - ஒட்டுமொத்த மசாலா படம்..இருந்தபோதிலும், காரம், மணம், சுவை கம்மி தான்!!! ரொமான்டிக் பட விரும்பிகள், தாராளமாக இப்படத்திற்கு போகலாம்!!
ரேட்டிங் : 2/5