தெலுங்கு திரை உலகில் குழந்தை நட்சத்திர நடிகராக இருந்த நாக அன்வேஷ் கதாநாயகனாக நடித்துள்ள முதல் படம் “வினாவயா ராமையா”.கதை என்னவோ திரை உலகம் அதிகம் பார்த்து பழகிய காதல் கதைதான்.
படத்தில் வீரையா பாளையம் என்கிற ஒரு கிராமம். வழக்கம் போல வேலை இல்லாமல் வெட்டி ஆபீசராக நாயகன், எப்போதும் போல தன் சிறு வயது தோழியை காதலிக்கிறார்.ஒரு சுபமுகூர்த்த சுபதினத்தில் தனது காதலை காதலியிடம் சொல்லவும் செய்கிறார். இங்கே எல்லாரும் எதிர்பார்ப்பது போல் நாயகி காதலை மறுக்கிறார்.
வழக்கம் போல மனமுடைந்து நண்பர்களிடம் புலம்புகிறான். நாயகனுக்கு உதவுவதாக நினைத்து, திருமணம் நிச்சயமான நாயகியை, நாயகனின் நண்பர்கள் கடத்திவிடுகிறார்கள். நாயகன் என்ன செய்தான் எப்படி சூழ்நிலையை சமாளித்தான் என்பது வழக்கமான மீதி கதை.
நாகஅன்வேஷ் குறிப்பிடும்படியாக தன்முதல்படத்திலேயே தன்னை நிரூபித்திருக்கிறார். நடிப்பு இயல்பாகவே வருகிறது, நடனமும். டைமிங்க் நகைச்சுவை காட்சிகளிலும் சிரிக்க வைக்கிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்ததாலோ என்னவோ அன்வேஷின் வசன உச்சரிப்புகள் கச்சிதம். நாயகியாக கிருத்திகா ஏற்கனவே த்ரிஷ்யம் படத்தின் மூலம் டோலிவுட்டின் கவனம் ஈர்த்தவர். இதில் இன்னும் அழகாக கவனம் ஈர்க்கின்றார்.
பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எப்போதும் போல் நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுகிறார்.படத்திற்கு பாதகம் என்று பார்த்தால், பல படங்களில் பார்த்து பழகிய கதைதான், பார்ப்பவர்களை படத்துடன் கட்டி போட புதிதாக ஏதும் இல்லை. எல்லாம் எதிர்பார்த்தபடியே நடக்கிறது.படத்தின் கதை காதல் தான்.. அப்படி இருக்கையில் அதில் உயிரோட்டம் இருக்க வேண்டாமா?? காதல் காட்சிகளின் ஆழம் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.
படம் கிளைமாக்ஸை நெருங்கியதும் கதாபாத்திர மாறுதல்களின் வேகம் அதிகம், அதை தவிர்த்திருக்கலாம். சில பாடல்களையும் தவிர்த்திருக்கலாம்.தொழில் நுட்ப ரீதியில் பார்த்தால் மிக பலமான டீமுடன் தான் படம் இருக்கிறது. ரசூலின் ஒளிப்பதிவு வர்ணிக்க முடியாத அழகு. ரூபனின் இசை அழகாக, மெலிதாக காட்சிகளை தாங்கி பிடிக்கிறது.மொத்தமாக பார்த்தால், அன்வேஷ்க்கு அழகான அறிமுகம் தான், பழகிய கதையை மறந்து விட்டு பார்த்தால் படம் நல்ல பொழுதுபோக்கு தான்.
வினாவயா ராமையா - பழகிய காதல் கதை