நடிகர்கள் ; குஞ்சாக்கோ போபன், ரீமா கல்லிங்கல்
டைரக்சன் : சந்தோஷ் விஸ்வநாத்
கிராமத்தை சேர்ந்த தையல்காரன் குஞ்சாக்கா போபனுக்கும் அதே ஊரை சேர்ந்த பணக்காரர் ஜாய் மேத்யூஸ் மகள் ரீமா கல்லிங்கலுக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் தனது மகளை கல்ப்காரனுக்கு (அவரும் குஞ்சாக்கோ போபன் தான்) திருமணம் பண்ணிவைக்க முடிவு செய்கிறார். திருமணத்திற்கு முதல்நாள் இரவு மகள் வீட்டை விட்டு தையல்காரனுடன் ஓட முயற்சிக்க, காதலனை அடித்துப்போட்டுவிட்டு அவரை மணவறைக்கு இழுத்து வருகிறார் தந்தை. காதலன் விஷம் குடிக்கிறார்.. விஷயம் அறிந்த காதலி அவரை காப்பாற்ற ஓடுகிறார். முடிவு என்ன என்பது க்ளைமாக்ஸ்.
அய்யே... இது என்ன ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி அரைச்ச அதே பழைய புளித்த மாவையே அரைத்திருக்கிறார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்.. உங்கள் நினைப்பை அப்படியே மாற்றிக்கொள்ளுங்கள்.. டைட்டில் கார்டு தொடங்கி என்ட் கார்டு வரைக்கும் சினிமாவின் வழக்கமான க்ளிஷேக்களை எல்லாம் நையாண்டி செய்து, கிழித்து தோரணம் தொங்க விடுகிறார்கள்..
ஒரு இயக்குனரிடம் கதை சொல்வதற்காக செல்லும் கதாசிரியரான அம்புஜாட்சன் என்பவர் மேலே சொன்ன கதையை அவரிடம் விவரிப்பதாக ஆரம்பித்து, அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக அவ்வப்போது ஒவ்வொரு காட்சிக்கும் நக்கல் தெறிக்க படம் பண்ணியிருக்கிறார்கள்.. அதாவது சட்டையர் ட்ரெண்டிங்கில் ஒரு புதிய படம் என்று சொல்லலாம்.
இதுவரை ஒரே மாதிரி கெட்டப்பிலேயே நடித்துவந்த குஞ்சாக்கோ போபன் தையல்காரன், கல்ப்காரன் என இரண்டு விதமான கேரக்டர்களில் இருவித கெட்டப்புகளில் அடியோடு ஆளே மாறியுள்ளார்.. பென்சில் மீசை டெய்லரை விட, துபாய் ரிட்டர்னாக வந்து கருகரு முகத்துடன் வந்து டீசன்ட்டான வில்லத்தனம் காட்டும் மீசை மழித்த குஞ்சாக்கோ தான் நடிப்பிலும் வித்தியாசமான கெட்டப்பிலும் நம்மை அதிகம் கவருகிறார்.
துணிச்சலான கேரக்டர்களில் நடித்து பழகிவிட்ட ரீமா கல்லிங்கலுக்கு பழைய கே.ஆர்.விஜயா காலத்துக்கு ஏற்ற மாதிரி நடிப்பது சவாலான விஷயமாக இருந்தாலும் அதை அழகாக சமாளித்திருக்கிறார்.. அவரது தந்தையாக வரும் ஜாய் மேத்யூஸ் நமது பழைய வினுச்சக்கரவர்த்தியை ஞாபகப்படுத்துகிறார்.
ரீமாவின் தோழியாக வரும் சிருந்தா ஆஷப் காமெடி ஆட்டம் ஆடியிருக்கிறார். ரீமாவின் அம்மாவாக நடித்திருக்கும் கலாரஞ்சனி 'விஸ்வரூபம்' வில்லன் ராகுல்போஸ் போல தொண்டைகட்டிய குரலில் பேசியிருப்பதும் கூட ஒரு புதுமை தான்.
இவர்கள் அத்தனைபேரையும் ஓவர்டேக் பண்ணிவிடுகிறார் கதாசிரியர் அம்புஜாட்சனாக வரும் சீனிவாசன்.. மனோஜ் கே.ஜெயனிடம் இவர் கதை சொல்ல ஆரம்பிப்பதில் இருந்து காட்சிக்கு காட்சி சினிமாவை கிண்டலடித்து ஒவ்வொரு சீனாக சொல்வதும் அதற்கு மனோஜ் விளக்கம் கேட்பதும் காட்சிக்கு தொடர் சிரிப்பலைக்கு உத்தரவாதம் தருகின்றன. அந்த விதமாக மனோஜ் கே.ஜெயனும் காமெடி ஏரியாவுக்குள் தன்னை புகுத்திக்கொள்கிறார்.
டெய்லரான குஞ்சாக்கோவின் நண்பனாக இடைவேளை வரை வரும் ஜேக்கப் கிரிகரியும், இடைவேளைக்குப்பின் அவரது கேரக்டரில் ட்ராவல் பண்ணும் இடவேள பாலுவும் காமெடியில் போட்டு தாக்கியிருகிறார்கள். இவர்கள் இருவரின் கேரக்டர்களை வைத்து இன்றைய சீரியலில் இவருக்கு பதில் இவர் என ஆளை மாற்றும் போக்கையும், அக்ரிமென்ட்டை மீறி ஒரு நடிகர் இன்னொரு படத்தில் நடித்தால் அவர் மீது ரெட் கார்டு போடப்படுவதையும் இந்த அளவுக்கு யாராலும் கிண்டல் பண்ண முடியாது.
அதாவது சீனிவாசன் சொல்லிக்கொண்டு வரும் கதையில் காமெடியனாக ஜேக்கப் கிரிகரியை பிக்ஸ் செய்து வைத்துக்கொண்டு கதை பேசுகிறார்கள்.. இடைவேளை விடும் நேரத்தில் திடீரென ஜேக்கப் கிரிகரி மீது ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாக தகவல்வர, அவரை அப்படியே தூக்கிவிட்டு இடவேள பாலு என்பவரை காமெடியனாக மாற்றி மீண்டும் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். இதை விஷுவலாக பார்க்கும்போது காமெடி அள்ளுகிறது..
அதேபோல ஜேக்கப்புடன் முதல் பாதியில் கடலை போடும் சிருந்தா ஆஷப், காமெடியன் மாற்றப்பட்டாலும் கதைப்படி இடவேள பாலுவுடன் அதை தொடரத்தானே வேண்டும்.. ஆனால் அவரது கேரக்டரோ என்னகென்ன தெரியும் இப்படி திடீரென காமெடி ஆளை மாற்றுவீர்கள் என்று.. அதெல்லாம் லவ் பண்ண முடியாது என சதாய்ப்பது எல்லாமே காமெடி அட்ராசிட்டி தான்..
குறிப்பாக சீனிவாசன் சொல்லும் கதையில் நாயகியாக வரும் ரீமா கதாபாத்திரம், இடைவேளை விடப்படும் நேரத்தில் உண்மையாகவே சீனிவாசனை தேடி வந்து இனிமேல் தனது கேரக்டரை எப்படி கொண்டுபோக போகிறீர்கள் என மிரட்டுவது செம திருப்பம். ரசிகர்களுக்கு பிடித்த புதிய ட்ரெண்ட்டிங்கில் வித்தியாசமாக படத்தை நகர்த்தியிருக்கும் இயக்குனர் சந்தோஷ் விஸ்வநாத் மலையாள சினிமாவில் கவனித்தக்க இயக்குனராக வலம் வருவார் என்பது உறுதி.