தினமலர் விமர்சனம் » நாளை நமதே
தினமலர் விமர்சனம்
நடைபாதைவாசிகளை நாகரீக வாசிகளாகவும், குடிசைவாசிகளை கோபுரத்தில் குடியேற்றி வைக்கவும் போராடும் அனாதை இளைஞன் மற்றும் அவனது அனாதை அப்பாவின் கதைதான் நாளை நமதே...!
கோடீஸ்வரர் ஆஷிஷ் வித்யார்த்தி, கலெக்டர் கார்த்திகா முன்னிலையில், தனது சொத்தில் முக்கால்வாசியை மாவட்டத்தில் உள்ள ஏழை எளியோரின் அடிப்படை வசதி மற்றும் வளர்ச்சி நிதியாக கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கு மேல் தானமாக கொடுக்கிறார். அந்த நிதியை ஏழைகளின் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தும் அதிகாரத்தை பிளாட்பாரவாசிகர் மணிவண்ணனிடமும், பிரதீப்பிடமும் ஒப்படைக்கப் படுகிறது. விடுவார்களா நம்மூர் அரசியல்வா(வியா)திகள். அந்த பணத்தை அடித்து செல்ல முயலும் அரசியல் வாதிகளில் முக்கியமாவனர் அமைச்சர் ராஜன் பி.தேவ். ஏழைகளுக்கு வீடு, வசதி, இத்யாதி... இத்யாதி என நல்லது பண்ண நினைக்கும் பிரதீப், மணிவண்ணன் கோஷ்டிக்கும், ராஜன் பி.தேவ் குரூப்பிற்கும் இடையில் முட்டல் - மோதல்... மிரட்டல் - உருட்டல் எல்லாம் நடக்கிறது. ஒரு கட்டத்தில் எல்லை மீறி ராஜன் பி.தேவ், மணிவண்ணன், பிரதீப் கோஷ்டிக்கு தொல்லை தர... அமைச்சரை கடத்தி சுரங்க குகைக்குள் சிறை வைக்கிறது மேற்படி பிளாட்பார கோஷ்டி. அட... அமைச்சர் அடைக்கப்பட்டிருக்கும் அதே சுரங்கத்துக்குள் ஆயிரம் கோடிக்கு மேல் உதவி செய்த ஆஷிஷ் வித்யார்த்தியும் அடைக்கப் பட்டிருக்கிறார். என்ன கொடுமை சார் இது? என சீட்டின் நுனிக்கு வந்தால், பிளாட்பார வாசிகளுக்கும், ஆஷிஷ் வித்யார்த்திக்கும் உள்ள முன் காலத்து சொந்தம் - பந்தம் எல்லாம் பிளாஷ்பேக்கில் விரிகிறது.! வழக்கம்போல ஆஷிஷ் வித்யார்த்தி கெட்டவர், மணி கோஷ்டியினர் நல்லவர்கள். இதற்கிடையே அமைச்சர் ராஜன் பி.தேவின் மகன் சர்வானந்திற்கும், மணிவண்ணனின் வளர்ப்பு மகள் தனுஷாவிற்கும் இடையில் வளரும் காதல். அதை தடுக்க முயலும் ராஜன் பி.தேவ், சுரங்க குகைக்குள் இருந்து தப்பித்து மணிவண்ணன், பிரதீப் கோஷ்டியை தீர்த்துக் கட்ட களம் இறங்குகிறார். இதில் வெற்றி யாருக்கு? ஆஷிஷ் என்ன ஆனார் உள்ளிட்ட இன்னும் சில கேள்விகளுக்கு வித்தியாசமாக பதில் சொல்கிறது க்ளைமாக்ஸ்.
புரட்சி வீரனாக புதுமுகம் பிரதீப் வெளுத்து வாங்குகிறார். முதல் தமிழ்படம் காதல்னா சும்மா இல்ல அளவிற்கு இதில் சர்வானந்திற்கு நடிக்க வாய்ப்பில்லாதது குறை. புதுமுக நாயகி தனுஷா ஏழ்மை, வறுமை காட்சிகளிலும் பளீச். பாவம் படத்திற்கு தேவையே இல்லாத கற்பழிப்பு காட்சியில் இவர் சிக்கி, க்ளைமாக்ஸில் சின்னா பின்னாபடுவது கொடுமை. பாலியல் தொழிலாளியாக வரும் கிரண், பாலுணர்வை தூண்டுகிறார். கார்த்திகா கலெக்டராக கலக்குகிறார். மணிவண்ணன், ராஜன் பி.தேவ், ஆஷிஷ் வித்யார்த்தி எல்லோரும் கச்சிதமான தேர்வு. எம்.எஸ்.பாஸ்கர், சார்லி அண்ட் கோவினரில் காமெடி சிரிப்பல்ல... கடுப்பு!
பரத்வாஜின் இசை, ராஜரத்தினத்தின் ஓளிப்பதிவு உள்ளிட்ட பல பலங்கள் இருந்தும் கதையில் கோட்டை விட்டிருப்பதால் இது இயக்குனர் வினயனின் படமா? எனும் கேள்வி எழுகிறது.
நாளை நமதே : நாலு நாட்கள் ஓடினால் மிகுதே.