தினமலர் விமர்சனம்
சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் அவலங்களை கூறுகிறேன் பேர்வழி என அழகாக ஆரம்பமாகி, வழக்கமான தமிழ்சினிமா அவலங்களுடன் சாதாரணமாக முடிந்திருக்கும் திருப்படம் மலையன்!
சின்ன வயது முதல், பஞ்சம் பிழைக்க வந்த தன்னையும், தன் குடும்பத்தையும் சோறு போட்டு வளர்க்கும் பட்டாசு தொழிற்சாலை முதலாளியை கூறுபோட நினைக்கும் கும்பலை தீர்த்துக் கட்டத் துடிக்கும் மலையன் கரணுக்கும், புதுமுகம் ஷம்புவிற்கும் முதலில் ஊடல், பின் காதல்! அந்த காதல் கல்யாணமாக கைகூடும் வேளையில், தன் ஆசை மச்சானை பார்க்க பட்டாசு ஆலைக்கு வரும் ஷம்மு, அங்கு நிகழும் கொடூர வெடி விபத்தில் சிக்கி வெந்து போகிறார்! அதன் பின் என்ன? கரண் என்ன செய்கிறார்? எப்படி வாழ்கிறார்? என்பது மலையனின் மலைக்க வைக்கும் மீதிக்கதை!
மலையனாக கரண், தன் முதலாளி சரத்பாபு வரை வில்லன் முத்திரை குத்தி நல்ல பாம்பாக கொத்தி எடுக்கிறார். அவரது காதலி பாக்கியமாக ஷம்மு, இன்னொரு நாயகி உதயதாரா, சரத்பாபு, மயில்சாமி, பாலாசிங், ராஜன் பி.தேவ், சக்தி குமார், தீரஜ்கர் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நன்றாக நடித்திருக்கிறது.
தினாவின் இசையும், ஜெ.ஸ்ரீதரின் ஒளிப்பதிவும் பெரும்பலம்! ஆனால் ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் புதியவர் எம்.பி.கோபியின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் முன்பாதியில் இருந்த ராக்கெட் வேகம் பின் பாதியில் புஸ்வானமாகி இருப்பது வருத்தம்.
-------------------
கல்கி விமர்சனம்
* பட்டாசு தொழிலை மையப்படுத்தி வந்திருக்கும் நெகிழ்ச்சியான கதை. அங்கங்கே பட்டாசு தீ விபத்து நடக்கற நேரத்துல வந்திருக்கு.
* மலையன் பாத்திரத்துக்கு ஏத்தாப்ல கரண் உடம்புலயும் நடிப்புலயும் செம ஹாட். பட், பாறைக்குள் ஈரமாக கரணுக்குள் காதல்.
* அந்தக் காதல் அவரை மென்மையாகவும், வன்மையாகவும் மாத்துவதுதான் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.
* ஹீரோயின் ஷம்மு. சும்மா கும்முன்னு இருந்தாலும் நடிப்புல ஏன் பம்முறாங்க? அதனால்தான் அவர் வர்ற காட்சிகளை டைரக்டர் கோபி குறைச்சுட்டாரோ?
* ஆனால், கரிக்கட்டையாக கருகி கிடக்கையில் கண் கலங்க வைக்கிறார்.
* உதயதாரா, ஷம்முவோட போட்டி போட்டிக்கிட்டு நடிப்புன்னா என்னன்னு கேட்கறார். டைரக்டர் சொல்லித் தந்திருக்கலாம்.
* சிவகாசியின் அன்றாடங்களை அங்குலம், அங்குலமாக காட்சிப் படுத்தியிருப்பதில் கவிதை.
* எதிரெதிர் துருவங்களாக கலக்கல் கான்ட்ராஸ்ட் காட்டியிருக்கும் சரத்பாபுவும், ராஜன் பி.தேவும் பாத்திரத்துக்கு கச்சிதம்.
* நடந்த வெடி விபத்தை மறைக்கவும், முதலாளியை காப்பாற்றவும் கரண் சொல்லும் காரணம் நச்சோ நச்.
* தினாவின் இசை, ஸ்ரீதரின் ஒளிப்பதிவு ஜாடிக்கேத்த மூடி.