பிரபல குணச்சித்திர நடிகரும், மாஜி அதிபருமான ஜெ.பி. எனும் ஜெயப்பிரகாஷின் வாரிசுகள் நிரஞ்சன் ஜெயப்பிரகாஷ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகாகியிருக்கும் திரைப்படம்! இப்படத்திலும் இவர்களது தந்தை ஜெ.பி. முக்கிய பாத்திரத்தில் நடித்து மகன்களுக்கு பக்கபலமாக இருப்பது சிறப்பு! அதேநேரம் அப்பா ஜெ.பி., அண்ணன், வில்லன், அப்பன், நண்பன் கேர்க்டர்களில் அறிமுக படங்களிலேயே ஜொலித்தது மாதிரி அவரது வாரிசுகள் அறிமுகப்படத்திலேயே ஜொலித்திருக்கிறார்களா.? எனக் கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கும்! காரணம், ஐவராட்டம் படத்தின் கதையும், களமும் அப்படி!
நிரஞ்சன் ஜெபி, துஷ்யந்த் ஜெபி இவர்கள் இருவர் மீது மட்டும் ''ஐவராட்டம்'' படத்தின் கதை டிராவல் ஆவதில்லை... ஜெகதீஷாக வரும் அம்ருத்கலாம், ஆண்டியப்பன் சேர்வையாக வரும் ஜெயப்பிரகாஷ், பூபதியாக வரும் சி.கே.செந்தில் குமார், ரத்னாவாக வரும் நாயகி நித்யா ஷெட்டி உள்ளிட்டவர்கள் மீதும், இவர்கள் எல்லாருக்கும் மேல் சிவகங்கை சீமையில் இருக்கும் அந்த கால்பந்தாட்ட திடல் மீதும், வெற்றி பெறுவதே கெளரவம் என அப்பகுதி இளவட்டங்கள் ஐவர் குழுவாக பிரிந்து வெறியுடன் ஆடும் அந்த கால்பந்தாட்டத்தின் மீதும், 'ஐவராட்டம்' படத்தின் கதையும் களமும் அதிகம் பிரயாணிப்பதும் வித்தியாசம்!
கதைப்படி, ஒரு தகப்பன் இருதாய் வயிற்று பிள்ளைகளான நிரஞ்சன் ஜெபியும், துஷ்யந்த் ஜெபியும் 'ஐவராட்டம்' எனும் கால்பந்தாட்டத்தில் சீனியர் - ஜூனியர் ப்ளேயர்கள். எதிர் எதிர் துருவங்களான இருவரும், இருவரது அணியும், ஒருநாள் கால்பந்தாட்ட மைதானத்தில் மோதிக் கொள்ள வேண்டிய சூழல்! அதாகப்பட்டது, சீனியர் அணியினரை ஜெயித்தால் தான் ஜூனியர் அணியினர் இனி அந்த மைதானத்தில் விளையாட முடியும்...! எனும் ஈகோ மோதல்! இரு அணிகளும் மோதுகிறது, எதிர்பார்த்தபடியே சீனியர் அணி ஜெயிக்கிறது. ஜூனியர் அணி வௌியேற்றப்படுகிறது!
தோல்வியில் துவண்டிருக்கும் ஜூனியர்களை தேற்றி, அவர்களுக்கு புட்பால் கோச்சும் ஆகிறார்... மாஜி வீரரும், அந்த ஊர் பெரிய மனிதர் ஆண்டியப்பன் சேர்வை - ஜெ.பி.யின் இளைய சகோதரருமான ஜெகதீஷ் எனும் அம்ருத்கலாம்! ஜெகதீஷ் - அம்ருத் ஜாதிமாறி திருமணம் செய்து கொண்டதால், அண்ணன் - ஜெ.பி.யுடன் ஒட்டும் உறவும் இல்லாமல் வாழ்கிறார். ஜெ.பி.யின் மற்றொரு சகோதரர் பூபதி எனும் சி.கே.செந்தில் குமார், சீனியர் டீமின் கோச்! சிவகங்கை சீனியர் - ஜூனியர் இரண்டு அணிகளும் சிவகங்கையில் தமிழக அளவில் நடக்கும் ஒரு பெரும் போட்டியில் பிற அணிகளை ஜெயித்து, இறுதிபோட்டியில் எதிர் எதிர் துருவங்களாக மோதுகின்றன. இறுதி வெற்றி சீனியருக்கா.? ஜூனியருக்கா..? எனும் கதையுடன், பிரிந்த அண்ணன் - தம்பிகள் மீண்டும் இணைந்தார்களா.? எனும் கதையையும், நிரஞ்சன் ஜெ.பி - நித்யா ஷெட்டியின் கண்ணாமூச்சி காதலையும் கலந்துகட்டி ஐவராட்டம், ஜாதி வெறியாட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து முடிகிறது!
நிரஞ்சன் ஜெபி., துஷ்யந்த் ஜெபி, அம்ருத்கலாம், ஜெபி., நித்யா ஷெட்டி, சி.கே.செந்தில்குமார், கிங்காங், மனோகர் ராஜபாண்டி, ஆலன், காசி உள்ளிட்ட அனைவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். இவர்களுடன் அந்த ஐவராட்ட கால்பந்தாட்ட மைதானமும் அழகாக மிளிர்ந்திருக்கிறது!
ரவிந்திரநாத் குருவின் ஔிப்பதிவு, சுவாமிநாதனின் இசை, மோகன் ராஜனின் கிராமிய பாடல் வரிகள் உள்ளிட்ட... பலங்களுடன் மிதுனம் மாணிக்கத்தின் எழுத்து, இயக்கத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் ''ஐவராட்டம்'' - தமிழக கிராமங்களில் இன்னும் காணப்படும் வாழ்க்கை போராட்டங்களை அழகாக திரையில் பதிவு செய்திருக்கிறது!
மொத்தத்தில், ''ஐவராட்டம்'', ஒருசில விஷயங்களுக்காக ரசிகர்களின் பாராட்டு பெறும்!!''