தினமலர் விமர்சனம்
இதுநாள் வரை வில்லனாக, வில்லனிக் ஹீரோவாக நடித்து வந்த பாபி சிம்ஹா, முதன்முதலாக ஹீரோவாக அதுவும் ஸோலோ ஹீரோவாக மூன்று காலகட்ட கதையில், ஒரே கதாநாயகராக, தன் நடிப்பு பசிக்கு சரியான தீனி போட்டு நடித்திருக்கும் படம்தான் உறுமீன். நாயகரின் பசிக்கு தீனி போட்டிருக்கும் இப்படம், ரசிகனின் பசியையும் தேவை அறிந்து தீர்த்து வைத்திருக்கிறதா? பார்ப்போம்...
மூன்று ஜென்மமாக ஹீரோ பாபி சிம்ஹாவுக்கும், வில்லன் கலையரசனுக்குமிடையில் கொலைப்பகை!
முதல் இரண்டு ஜென்மங்களில் பாபியின் சாவுக்கு காரணமான நம்பிக்கை துரோகி கலையரசனை மூன்றாவது ஜென்மத்திலாவது பாபி சிம்ஹா பழி தீர்த்தாரா, அல்லது கலையின் நயவஞ்சகத்துக்கு பலியானரா..? என்னும் ஜென்ம, ஜென்மமான பழிக்கு பழி வாங்கும் கதையுடன், பாபி- ரேஷ்மி மேனனின் காதலையும் கலந்து கட்டி கலர்புல்லாகவும், கமர்ஷியலாகவும் உறுமீன் படத்தை உறும விட்டிருக்கின்றனர்.
உறுமீன் பல இடங்களில் அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே உறுமியும், சில இடங்களில் ரசிகனின் பொறுமையை சோதிக்கும் விதத்தில் பொருமியும் இருப்பது தான் இப்படத்தின் பலம், பலவீனம் எல்லாம் !
பழிக்கு பழிவாங்கும் ஹீரோவாக பாபி சிம்ஹா, மூன்று ஜென்மத்திலுமே முத்திரை பதித்திருக்கிறார். ஆவேசம், கோபம் கொப்பளிக்கும் இடங்களிலும் சரி, குணவாளனாக காதலி ரேஷ்மி மேனனுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நெருக்கம் கிறக்கம் காட்டும் இடங்களிலும் சரி, இரு துருவங்களிலும் கண்களாலேயே பாபி சிம்ஹா, பலே சிம்ஹாவாக ஜொலித்திருக்கிறார். வாவ்!
கதாநாயகி ரேஷ்மி மேனன் படம் முழுக்கவரவில்லை என்றாலும், கிடைத்த வரைக்கும் தன் திறமையை காட்டி, பாபியை காதல் வலையில் வீழ்த்தி கல்யாணத்திற்கு வித்திட்டதற்கான நியாயம் ரசிகனுக்கும் தெரியுமளவில் நடித்திருப்பது பாராட்டுதலுக்குரியது!
மெட்ராஸ், டார்லிங்.. படங்களைக் காட்டிலும் இதில் வில்லன் கலையரசனுக்கு வெயிட்டான ரோல்.... அவரும் அதை தோள் மேல் சுமந்து சிறப்பாக செய்திருக்கிறார். சைலண்ட் வில்லன் என்றால் இனி, தமிழ் சினிமாவில் கலையரசனைத் தான் கூப்பிடுவார்கள் என நம்பலாம்!
சார்லி, அப்புக்குட்டி, காளி உள்ளிட்டவர்களில் காளி, சார்லி இருவரது பாத்திரமும் நச் - டச்.
ஏஉமையாள்... உள்ளிட்ட பாடல்கள் அச்சு ராஜாமணியின் இசையில், அவரை மற்றொரு ராஜாவாக காட்ட முற்பட்டிருக்கின்றன. ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவு, மூன்று காலகட்டத்திலும் பளிச் பதிவு. அதிலும், தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிதான மோஷன் கேப்சர் முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த 7-8 நிமிடங்கள் பதிவு தொழில்நுட்பம் அட்டகாசம்!
சக்திவேல் பெருமாள்சாமியின் எழுத்து, இயக்கத்தில், பெரிதாக குறைகள் எதுவுமில்லை... என்றாலும், ரசிகனின் பொறுமையை சோதிக்கும் ஒரு சில காட்சிகளையும் தவிர்த்திருந்தால், உறுமீன் மேலும் மிரட்டலாக இருந்திருக்கும்!
ஆக மொத்தத்தில், உறுமீன் - தமிழ் சினிமாவிற்கு சற்றே, புதுமை என்றால்... ஆமென்!