தினமலர் விமர்சனம்
தமிழ்த் திரையுலகில் இந்த ஆண்டு மட்டும் சிறு பட்ஜெட் படங்கள் என்று அழைக்கப்படும் புதுமுகங்கள் நடித்துள்ள, முன்னணி நடிகர்கள் நடிக்காத 75 சதவீத படங்கள் வெளிவந்துள்ளன. இம்மாதிரியான படங்கள் திரைக்கு வருவதே ஒரு சாதனைதான். அப்படிப்பட்ட படங்களில் கதையம்சமும் நன்றாக இருந்து, நடிப்பும் நன்றாக இருந்தால் அந்த படங்கள் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புண்டு. ஆனால், வெளிவரும் பல படங்களில் பெரும்பாலான படங்கள் அப்படி இருப்பதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.
காலம் காலமாக தமிழ் சினிமாவில் என்றும் இளமையாக இருக்கும் தங்கைப் பாசம்தான் இந்த படத்தின் மையக் கரு. ஆனால், சிறு வயதிலிருந்தே அப்பா, அம்மா இல்லாமல் தான் மட்டுமே தூக்கி வளர்த்த தங்கையை, அண்ணன் சந்தேகப்படுவதிலேயே அந்த மையக் கரு சிதைந்து விட்டது. அப்பா வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு போய் விட, அம்மாவும் இறந்து விட ஒரு அண்ணன், தங்கையை ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து வளர்க்கும் ஒரு அண்ணன், அவளை எப்படி சந்தேகப்பட முடியும். அப்படியே சந்தேகப்பட்டால் அவளிடம் அதைப் பற்றிக் கேட்பதில் தவறில்லையே. அந்த சந்தேகப் பேய் அண்ணனை ஆட்டிப் படைக்க அதற்காக அவன் செய்யும் விஷயம்தான் இந்த 'சூறையாடல்'.
கிராமத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருக்கும் ஸ்ரீபாலாஜி, அப்பா அம்மா இல்லாத நிலையில், தங்கை லீமாவைப் படிக்க வைத்து ஒரு தாயைப் போல பாசம் செலுத்தி வளர்த்து வருகிறார். தங்கை வயதுக்கு வந்த பின் அக்கம்பக்கத்தில் இருக்கும் பாட்டிகள், இதற்கு மேல்தான் நீ தங்கையை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், இது அலை பாயும் வயசு, உன் நண்பர்களை வீட்டுப் பக்கமெல்லாம் சேர்க்காதே என்கிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்கும் ஸ்ரீபாலாஜி, அதன் பின் தங்கையை பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், நண்பர்களை கிட்ட நெருங்கவிடாமலும் இருக்கிறார்.
ஒரு சந்தர்ப்பத்தில் லீமா திடீரென மயங்கி விழ, அவரைப் பரிசோதிக்கும் டாக்டர், லீமா கர்ப்பமாக இருக்கிறார் என்ற அதிர்ச்சித் தகவலை சொல்கிறார். இதனால் கோபமடையும் ஸ்ரீபாலாஜி, தங்கை லீமாவுடன் சிரித்துப் பழகும் நண்பனை சந்தேகப்படுகிறார். அதற்கேற்றாற் போல் அவனும் ஊரை விட்டு எங்கோ போய்விடுகிறான். ஒரு நாள் அந்த நண்பன் ஸ்ரீபாலாஜியைத் தேடி வர என்ன ஏதென்று விசாரிக்காமல் அவனைக் கொன்று விடுகிறார். தங்கையையும் கொல்வதற்காக மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் ஸ்ரீபாலாஜி பொருத்தமாகவே இருக்கிறார். புதுமும் என்று சொல்லமுடியாதபடி நடித்தும் இருக்கிறார். ஆனால், தங்கையின் நிலையைக் கண்டதும் அதைப் பற்றித் தீர விசாரிக்காமல் பித்து பிடித்தவர் போல் கோபமாகவே தெரிவது அவருடைய கதாபாத்திரத்திற்கு முரணாக உள்ளது. காதலியிடம் கூட கொஞ்சம் கூட அன்பான முகம் காட்டாமல் முறுக்கிக் கொண்டே இருப்பது கதாபாத்திற்கு சிறிதும் ஒட்டாமல் இருக்கிறது.
படத்தில் நாயகியான காயத்ரியை விட தங்கையான லீமாவுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். அது என்னமோ, அண்ணன் - தங்கை பாசக் கதை என்றாலே இயக்குனர்கள் நாயகியை 'டம்மி' ஆக்கிவிடுகிறார்கள். 'கேரள நாட்டிளம் பெண்களுடனே' படத்தில் நாயகியாக நடித்தவர்தான் இந்த காயத்ரி. கண்களுக்கு லட்சணமாக இருக்கிறார். ஒரு பெரிய ஹீரோ படத்தில் நடித்தால் முன்னணி வரிசையில் இடம் பிடிக்கலாம். ஆனால், இடைவேளைக்குப் பின் காயத்ரியை 'அம்போ' என விட்டுவிட்டார் இயக்குனர். அப்படி என்ன பிரச்சனை செய்திருப்பாரோ…?
பள்ளிக்குச் செல்லும் பருவ வயதுப் பெண்ணாக லீமா. சரியான கதாபாத்திரத் தேர்வு. அவரும் முடிந்த அளவிற்கு பச்சை மண்ணாகவே நடித்திருக்கிறார். ஆனால், கடைசியில் இவருடய கதாபாத்திரத்தை அப்படியா முடிப்பது. தமிழ் சினிமாவில் கிளைமாக்சில் அம்மாதிரியான முடிவைக் கொடுத்தால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்ற ஒரு நினைப்பு. படத்துக்குப் படம் எப்படி அது நடக்கும், எப்போது ஒரு முறைதானே அந்த வெற்றி கிடைக்கும்.
மிதுன் ஈஸ்வர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை என்று கூட சொல்ல முடியவில்லை. இம்மாதிரியான மினிமம் பட்ஜெட் படங்களில் பாடல்கள்தான் படத்திற்கு பக்கபலமாக அமைய வேண்டும். அதை இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் உணர வேண்டும்.
'சூறையாடல்' - தலைப்பை மட்டும் பலமாக வைத்தால் போதாது…!!