தினமலர் விமர்சனம்
பிரபல திரை விமர்சகரும், பத்திரிகையாளருமான கேபிள் சங்கர், நாலு பாட்டு, நாலு பைட்டு, கொஞ்சம் சென்டிமெண்ட், கொஞ்சம் காமெடி, நிறைய லவ்வு... என அடுகடை படுகடையாக வௌிவரும் ஒரே மாதிரி தமிழ் சினிமாக்களின் மீது கொண்ட கோபத்தின் வௌிப்பாடாக எழுதி, இயக்கி வௌிவந்திருக்கும் திரைப்படம் தான் தொட்டால் தொடரும்.
கதைப்படி, ஒரு தனியார் நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் ஹெச்.ஆர்., அதிகாரி பொறுப்பில் இருக்கும் சிவா எனும் ஹீரோ தமன் குமாருக்கும், தனியார் வங்கி ஒன்றில் கடன் வேண்டுமா.? எனக் கேட்கும் டெலிகாலர் பிரிவில் வேலை பார்க்கும் மது எனும் நாயகி அருந்ததிக்கும் தொலைபேசியில் முட்டி மோதி, எட்டி பார்க்கும் காதல், நேரில் கொட்டி தீர்க்க வழியும் வாய்ப்பும் சரியாக அமையாமல் ஜவ்வாக இழுக்கிறது, இருக்கிறது.
இந்நிலையில் அருந்ததியின் தம்பி, அருந்ததியின் அஜாக்கிரதையால் விபத்தொன்றில் சிக்க, அவருக்கு தொடர் அறுவை சிகிச்சைகளுக்காக சுமார் 25 லட்சம் தேவைப்படுகிறது. இதை அருந்ததியின் தோழி மூலம் கேள்விபடும் சிவா-தமன்குமார், தன் இணையதள தொடர்புகள், நண்பர்கள் வாயிலாக உடனடியாக 30 லட்சத்தை திரட்டி 5 லட்சம் அதிகமாகவே அருந்ததிக்கு தெரியாமல் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் கட்டுகிறார்(அடி ஆத்தி!)
தன் தம்பி உயிர் பிழைக்க காரணம் தன் டெலிபோன் காதலர் தமன்குமார் தான் என்பது தெரிந்ததும், அருந்ததியின் காதல் நேரிலும் ஜோராக மேலும் கசிந்துருகி இருந்தால் அது வழக்கமான தமிழ் சினிமாவின் கரு, கதை, களமாக இருந்திருக்கும். அவ்வாறு இல்லாமல் தொட்டால் தொடரும் படத்தில் தன் தொலைபேசி காதலன், தன் தம்பி பிழைக்க லட்சக்கணக்கில் பிச்சை எடுத்து உதவியிருக்கிறான்... என்பது தெரிந்ததும் அருந்ததி மேலும் கவலை ஆகிறார். காரணம், அமைச்சர் பிரமிட் நடராஜன் உள்ளிட்ட தன் விரோதிகள் சகலரையும் ஆள் வைத்து கொன்று அதை விபத்தாக ஜோடிக்கும் எம்.பி.யின் மகன் நிகிலும், அவரது அடியாள் வின்சென்ட் அசோகனும் தான்.
நிகிலுக்கும், அருந்ததிக்கும் என்ன சம்பந்தம்.? அது தமன்-அருந்ததியின் காதலுக்கு எவ்வாறு தடையாக இருக்கிறது.? அந்த தடையை தமன்குமார் எவ்வாறு தகர்ந்தெறிந்தார்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்லி இருப்பது தான் தொட்டால் தொடரும் படத்தின் மீதிக்கதை! அதை சற்றே புதுமையாக சொல்லி இருக்கும் விதத்தில் தான், இத்திரைப்படம் மற்ற தமிழ் படங்களில் இருந்து தொலைவில் இருக்கிறது. அதற்காக அறிமுக இயக்குநர் கேபிள் சங்கருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆக வேண்டும்!
சிவாவாக தமன்குமார் தன் முந்தைய படங்களை காட்டிலும் பிரமாதமாக நடித்திருக்கிறார். தொலைபேசியில் முகம் தெரியாத அருந்ததியின் காதலுக்கு ஏங்குவது உள்ளிட்ட காட்சியில் படம்பார்க்கும் ரசிகர்களையும் ஏங்க வைக்கும் தமன், வில்லன் வின்சென்ட் அசோகன், காரில் செல்லும் இவர்களை லாரியில் துரத்தும் காட்சியில் கடைசியில் கை கெட்டும் தூரத்தில் வில்லன் இருந்தும் அவரை கோட்டை விட்டு விட்டு அதன்பின், அவரை பிடிக்க இமாலய திட்டம் எல்லாம் போடுவது ரொம்பவும் சினிமாடிக்காக கூட இல்லை... டிரமாட்டிக்காக இருக்கிறது. அதே லாரி சேஸிங் சீனில் தன் போலீஸ் நண்பரை, வின்சென்ட் போக்குகாட்டி திசை திருப்ப ஒருகாரில் வர சொல்லும் காட்சியிலும் எக்கச்சக்க லாஜிக் மிஸ்டேக். அருந்ததியை ஏற்றி கொல்ல வரும் லாரி வில்லன், அந்த நண்பர்களையும் காரோடு லாரி ஏற்றி கொன்றுவிட மாட்டாரா.? என்ன..? இதற்கெல்லாம் இயக்குநர் தான் பதில் சொல்ல வேண்டும்!
மற்றபடி மதுவாக வரும் கதாநாயகி அருந்ததி, நண்பர் கௌதமாக வரும் பாலாஜி வேணு கோபால், பிரமிட் நடராஜன், வின்சென்ட் அசோகன், விஜய் ஆனந்த், சிங்கப்பூர் துரைராஜ், ரஞ்சன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அருந்ததி சில சீன்களில் ஹீரோ தமனுக்கு அக்கா மாதிரி தெரிந்தாலும், அம்சமாக நடித்திருக்கிறார்.
காமெடி பாலாஜி, லைனுக்கு லைன் பன்ச் டயலாக் பேச நான் என்ன சந்தானமா.? என நன்றாகவே நக்கலடித்திருக்கிறார். கூடவே எக்கச்சக்க இன்ஸ்டண்ட் காதல்களால் இளம்பெண்களையும் கலாய்த்து கலகலப்பூட்டியிருக்கிறார். பேஷ், பேஷ்!
லோனே பர்ஸ்னல் லோன்... அப்புறம் என்ன அபிஷியல் போன்... உள்ளிட்ட வசனங்களில் திரும்பி பார்க்க வைக்கும் இயக்குநர் கேபிள் சங்கர் இயக்கத்தில் ஒருசில குறைகள் இருந்தாலும் நிச்சயம் புதிதாக யோசித்திருக்கிறார் என்பதற்காக பாராட்டலாம்!
தமன்குமார், அருந்ததி, பாலாஜி உள்ளிட்டோரின் நடிப்பு, பி.சி.ஷிவனின் இசை, விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஔிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் கேபிள் சங்கரின் இயக்கத்தில், தொட்டால் தொடரும் திரைப்படத்தை வெற்றிபடமாக்க முயற்சித்திருக்கின்றன என்றால் மிகையல்ல!
மொத்தத்தில், தொட்டால் தொடரும் ஒருவகையில் தமிழ் சினிமாவில் புதுவித உயரம் தொடும்!
கல்கி சினி விமர்சனம்
சாலைகளில் நடக்கும் விபத்துக்கள் எல்லாமே விபத்துகள் அல்ல. அதில் திட்டமிட்ட கொலைகளும் உள்ளன என்பதைச் சொல்லும் படம் 'தொட்டால் தொடரும்'.
படத்தின் நாயகி அருந்ததி (மது) கால் சென்டரில் வேலை செய்கிறார். அவருக்கு வீட்டில் சித்தியால் ஏக டார்ச்சர். 'ஹைவே வங்கியின் மூலம் லோன் வேண்டுமா?' என நாயகன் தரணிடம் பேசும்போது இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இருவரும் பார்க்காமலே காதலை வளர்க்கிறார்கள். காதல் கைகூடும் சமயம் அருந்ததி போனில் பேசியபடியே தன் தம்பியை ஸ்கூட்டியில் அழைத்துச் செல்லும்போது ஆக்ஸிடென்ட் ஆகி தம்பியைக் காப்பாற்ற ரூ. 30 லட்சம் தேவைப்படுகிறது. தன் உயிரையே பணயம் வைத்து 30 லட்சம் ஏற்பாடு செய்கிறார். ஆனாலும் ஒரு பிரச்னை. இந்தச் சிக்கலிலிருந்து தப்பினாரா அருந்ததி? என்பதே கதை.
அமைச்சர் துரைபாண்டி ஆரம்பக் காட்சியில் காரில் வரும்போது ஒரு கூலிப்படை அவரை விபத்து ஏற்படுத்திக் கொல்கிறது. அதிலிருந்து ஒரு இன்ஸ்பெக்டர் துப்பறிய, இது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை என்று தெரியவருகிறது. அந்தக் கொலைக்குப் பின்னர் ஒரு நெட் ஒர்க் எப்படி வேலை செய்கிறது என்பதைக் காட்டும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.
துப்பறியும் பாணியிலான கதையில் காதல் கலந்து விறுவிறுப்பாக இயக்கியுள்ளார் கேபிள் சங்கர். பத்திரிகையாளராக இருந்து இயக்குநர் ஆன கேபிள் சங்கரின் முதல் படம் இது. புதுவிதமான ஒரு சமுதாயக் கருத்தைச் சொன்னதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.
அமைச்சர் பேச்சை டிரைவர் வீடியோ எடுக்கிறார். அது எப்படி சாத்தியம்? அவர் ஏன் வீடியோ எடுத்தார் என்பது விளக்கப்படவில்லை. காட்சிக்குக் காட்சி பஞ்ச் டயலாக் பேசும் பாலாஜி எல்லாப் பெண்களிடமும் வழிவது மொக்கை.
ரோடு ஆக்ஸிடென்ட், பத்திரிகையாளன் மரணம், நிகிலுக்கு டார்க்கெட் என்று பழைய பாணியில் படம் போனாலும் படம் முழுக்க ஒரு பரபரப்பு இருக்கிறது.
தொட்டால் தொடரும் - ஈர்க்கும்