‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
2019ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட, அஜித் நடிக்கும் விஸ்வாசம், சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன், ஆர்ஜே பாலாஜி நடிக்கும் எல்கேஜி ஆகிய படங்கள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழ்த் திரையுலகத்தில் நடந்த ஸ்டிரைக்குக்குப் பிறகு திரைப்பட வெளியீடுகளை சரிப்படுத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அனுமதி பெற்றுத்தான் படங்களின் வெளியீடு முறைப்படுத்தப்பட்டது.
ஆனால், அந்தக் குழு அனுமதி இல்லாமலும் சில தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிட்டு அதனால் சர்ச்சைகளும் உருவானது. அப்படி வெளியிட்ட தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியானது. இதுவரை அப்படி யார் மீதாவது நடவடிக்கை எடுத்தார்களா என்பதும் தெரியவில்லை.
பொங்கல் படங்களைப் பொறுத்தவரையில் இதுவரை எந்த ஒரு படமும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழுவிடம் அவர்கள் பட வெளியீடு சம்பந்தமாக அணுகவில்லை என்றே தெரிகிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் அடுத்த வாரம்தான் டிசம்பர், ஜனவரி மாதங்களில் எந்தெந்த படங்கள் வெளியாக வேண்டும் என்று முடிவெடுக்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.
2018ம் ஆண்டின் கடைசி 50 நாட்களுக்குள் இருக்கிறோம். இந்த வருடத்திற்குள் படங்களை வெளியிட இன்னும் 6 வெள்ளிக்கிழமைகளே உள்ளன. அந்த 6 வாரங்களில் நவம்பர் 29ம் தேதியன்று ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் வெளியாவதால் வேறு படங்கள் வர வாய்ப்பில்லை. நவம்பர் 23ம் தேதியன்று ஐந்தாறு சிறிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் அரையாண்டு விடுமுறை வருகிறது. மீதமுள்ள 4 வாரங்களில், டிசம்பர் 21ம் தேதி சிலர் அவர்களது படங்களை வெளியிட எப்போதோ முடிவு செய்திருப்பார்கள். உதாரணத்திற்கு தனுஷ் நடித்துள்ள மாரி 2 படம் அன்றைய தேதியில் வெளியாக வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். மேலும், கிறிஸ்துமஸ் போட்டியில் யார் யார் போட்டியிடப் போகிறார்கள் என்பது அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும்.
2019ம் ஆண்டில் பொங்கல் பண்டிகை, ஜனவரி 15ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வருகிறது. புதன்கிழமையும் அரசு விடுமுறை நாளாக இருக்கும். பொங்கல் தினத்தில் நான்கு படங்கள் போட்டியிட்டால் தமிழ்நாட்டில் இருக்கும் சுமார் 1100 தியேட்டர்களில் எப்படி தியேட்டர்களை பிரித்துக் கொடுப்பார்கள்.
பொதுவாக ரஜினிகாந்த், அஜித் போன்றவர்கள் நடிக்கும் படங்கள் வெளிவந்தால் 500 தியேட்டர்கள் வரை அவர்களது படங்கள் வெளியாகும். அப்படிப் பிரித்துக் கொண்டால் அவர்கள் இருவருடைய படங்களான பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் மட்டும்தான் வெளிவர முடியும். அப்படியென்றால் சிம்புவின் படத்திற்கு எப்படி தியேட்டர் கிடைக்கும். சிம்புவுக்கே தியேட்டர் கிடைக்காதென்றால், முதல் முறையாக நாயகனாக நடிக்கும் ஆர்ஜே பாலாஜி படத்திற்கு யார் தியேட்டரைக் கொடுப்பார்கள்.
ரஜினியோ, அஜித்தோ, விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த சர்கார் படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அப்படியென்றால் அவர்களது படங்கள் அதிகமான தியேட்டர்களில் வெளியாக வேண்டும்.
ரஜினிகாந்த், அஜித் இருவருமே நல்ல ஓபனிங் உள்ள நடிகர்கள். இருவரது படங்களும் ஒரே நாளில் வந்தால் சர்கார் வசூலை முறியடிப்பார்களா என்பது சந்தேகம்தான். ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பில் பாதியளவு கூட பேட்ட படத்திற்கு இல்லை என்பதே உண்மை. அது போல, விவேகம் படத்தை தோல்விப் படமாகக் கொடுத்ததால் விஸ்வாசம் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இல்லை.
இருந்தாலும் கூட ரஜினிகாந்த், அஜித் இருவருமே பெரிய நடிகர்கள் என்பதால் தியேட்டர்காரர்கள் படங்களை வாங்க போட்டி போடலாம். அதனால், இரண்டு படங்களுக்குமே அவர்கள் வாங்கும் விலையைக் குறைக்க வாய்ப்புகள் இருக்கிறது.
இரண்டு படங்களில் ஒரு படம் சுமார் என்றால் கூட அந்த சுமார் படத்தின் வசூல் மிகச் சுமார் ஆகிவிடும். மற்றொரு படம் நன்றாக இருந்தால் அது வசூலை அள்ளிக் கொடுத்துவிடும்.
இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களுமே பொங்கலுக்கு அவர்களது படங்களை வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், சில வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் இப்படி இரண்டு பெரிய நடிகர்கள் மோதிக் கொள்வதை விரும்ப வாய்ப்பில்லை.
பொங்கல் தினம் செவ்வாய்க்கிழமை வருவதால் அதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை அன்றே இரண்டு படங்களில் ஒரு படத்தை வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களை வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் கேட்க வாய்ப்புள்ளது.
அந்த வெள்ளிக்கிழமை ஒரு படம் வந்தால் அந்தப் படத்திற்கு வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் என ஏழு நாட்கள் என வசூல் கிடைக்க வாய்ப்புண்டு. அதில் ஐந்து விடுமுறை நாட்கள் உண்டு. மற்றொரு படம் பொங்கல் தினமான செவ்வாய் அன்று வரலாம். அந்தப் படத்திற்கு மூன்று விடுமுறை நாட்களின் வசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால், இரண்டு படங்களுமே குறிப்பிட்ட வசூலைப் பெறவும், போட்டியால் வசூலை இழக்காத சூழலும் உருவாகலாம்.
இதை தயாரிப்பாளர் சங்கமும், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் சேர்ந்து செய்வார்களா என்பதுதான் கேள்வி ?.