அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
தொலைக்காட்சி முன்னால் எப்போதாவது உட்கார்ந்து கொஞ்சம் பழைய படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கம் போது அந்தப் படத்தில் நடித்திருப்பவர்களைப் பற்றி யோசிக்கத் தோன்றும். ஆஹா, அந்தக் காலத்தில் இவர்கள் எல்லாம் இப்படி நடித்திருக்கிறார்களே, இப்போது எங்கே இவர்களைக் காணவில்லை என நினைப்பதுண்டு.
20 வருடங்களுக்கு முன்னால் முன்னணி ஹீரோயின்களாக இருந்த சில நடிகைகள் மட்டுமே கொஞ்சம் வயதானாலும் அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடிக்க முன் வருகிறார்கள். ஆனால், சிலரோ அப்படியெல்லாம் வேண்டாம், சினிமாவே தேவையில்லை என்று எங்கோ சென்று விட்டார்கள்.
சிலர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும சினிமாவில் தங்களை ஏதோ ஒரு துறையில் ஈடுபடுத்திக் கொண்டு இன்று வரை சினிமாவை விட்டுப் பிரியாமல் இருக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் முன்னணியில் இருந்து சில குறிப்பிட்ட முக்கியப் படங்களில் நடித்து இன்று எந்த செய்தியிலும் அடிபடாமல் இருக்கும் காணாமல் போன சில கதாநாயகிகள் ஞாபகத்துக்கு வந்தார்கள். அவர்களில் சிலரை கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பார்ப்போமோ...
ஹீரா
1991ம் ஆண்டு வெளிவந்த 'இதயம்' படத்தில் முரளி ஜோடியாக அறிமுகமானவர். ஒரு அழகான கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தொடர்ந்து சில முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். அவற்றில் “நீ பாதி நான் பாதி, திருடா திருடா, சதி லீலாவதி, காதல் கோட்டை, அவ்வை சண்முகி,” ஆகிய படங்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய படங்கள். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என சுமார் 50 படங்கள் வரை நடித்தவர் ஹீரா. அப்போதெல்லாம் அஜித்துடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டவர். கமல்ஹாசனுடன் இரண்டு படங்களில் நடித்திருந்தார். 91ம் ஆண்டு அறிமுகமாகி 99ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகிவிட்டார். அதன் பின் விவாகரத்தும் பெற்று விட்டார் என்ற செய்தி. இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.
சசிகலா
1983ம் ஆண்டு 'இளமைக் காலங்கள்' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து 'தீர்ப்புகள் திருத்தப்படலாம், ஊமை விழிகள், மண் சோறு, சங்கர் குரு, இணைந்த கைகள், வெற்றி விழா, உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்' உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவர். தமிழை விட இவர் நடித்த தெலுங்குப் படங்கள் அதிகம். தெலுங்கில் இவரது பல படங்கள் வெற்றி பெற்று அங்கு புகழின் உச்சியில் இருந்தார். கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். தமிழில் கடைசியாக 1992ம் ஆண்டு வெளிவந்த 'ஊர் மரியாதை' படத்தில் நடித்திருந்தார். கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று, தன் மூன்று குழந்தைகளுடன் இப்போது பெங்களூருவில் வசித்துக் கொண்டிருப்பதாக ஒரு தகவல்.
ஜெயஸ்ரீ
மிகத் திறமையான இயக்குனரான ஸ்ரீதரால் 1985ம் ஆண்டு வெளிவந்த 'தென்றலே என்னைத் தொடு' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஜெயஸ்ரீ. தன் முதல் படத்திலேயே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியவர். இளையராஜா இசையில் இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தவை. அதன் பின் “கோயில் யானை, மனிதனின் மறுபக்கம், விடிஞ்சா கல்யாணம், பன்னீர் நதிகள், யாரோ எழுதிய கவிதை, திருமதி ஒரு வெகுமதி, வண்ணக் கனவுகள், தாலி தானம், ஆனந்த்” ஆகிய குறிப்பிடத்தக் படங்களில் நடித்தார். 'ஆனந்த்' படத்திற்குப் பிறகு சுமார் 8 ஆண்டுகள் கழித்து 'பிஸ்தா' படத்தில் நடித்தார். சமீபத்தில் கூட இவரை ஒரு தமிழ்ப் படத்தில் பார்த்ததாக ஞாபகம். திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானவர். இன்னும் அமெரிக்காவில்தான் இருக்கிறாரா இல்லை சென்னையில் இருக்கிறாரா என்று தெரியவில்லை.
இளவரசி
கங்கை அமரன் இயக்கிய 'கொக்கரக்கோ' என்ற படத்தின் மூலம் 1983ம் ஆண்டு நாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து “ஆலய தீபம், குவா குவா வாத்துக்கள், அவள் சுமங்கலிதான், மண்ணுக்கேத்த பொண்ணு, குங்குமச் சிமிழ், சம்சாரம் அது மின்சாரம், ஊமைக்குயில், தாவணிக் கனவுகள்” ஆகிய குறிப்பிட வேண்டிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக 1994ம் ஆண்டு வரை நடித்துள்ளார். அதன் பின் இவரைப் பற்றிய எந்த செய்தியும் பத்திரிகைகளில் கூட வந்ததாகத் தெரியவில்லை.
சாந்தி ப்ரியா (எ) நிஷாந்தி
இவர் யார் என்று கேட்பவர்களுக்கு ஒரே ஒரு படத்தை உதாரணமாகச் சொன்னால் போதும், அட, இவரா என ஆச்சரியத்துடன் கேட்பார்கள். ராமராஜன் நடிக்க கங்கை அமரன் இயக்கிய 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் சாந்தி ப்ரியா. பட்டி, தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம். நிஷாந்தி என்ற பெயரில் இந்தப் படத்தில் அறிமுகமானவர் அதன் பின் தன் பெயரை சாந்தி ப்ரியா என மாற்றிக் கொண்டார். அப்போதைய முன்னணி ஹீரோயினான பானுப்ரியாவின் தங்கை இவர். அதன் பின் 'ஒருவர் வாழும் ஆலயம், ரயிலுக்கு நேரமாச்சு, கை நாட்டு, சிவப்புத்தாலி, சிறையில் பூத்த சின்ன மலர்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' படத்தில் 'இரவு நிலவு..' பாடலுக்கு மட்டும் நடனமாடியவர் தமிழ் சினிமாவில் காணாமல் போய்விட்டார். தொடர்ந்து சில ஹிந்திப் படங்களில் நடித்தவர் அதன் பின் தமிழ் சினிமா பக்கம் வரவேயில்லை. ஹிந்தித் திரையுலகின் பிரபல இயக்குரான வி.சாந்தாராம் பேரன் சித்தார்த் ரேயை திருமணம் செய்து கொண்டார். சித்தார்த் 2004ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார். சாந்தி ப்ரியா தற்போது அவருடைய இரண்டு மகன்களுடன் மும்பையில் வசித்து வருவதாகத் தகவல்.
சுவாதி
இன்றைக்கு தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அடுத்து முன்னணியில் இருக்கும் விஜய், அஜித் ஆகியோருடைய ஆரம்ப காலப் படங்களில் நடித்தவர் சுவாதி. அப்போது ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். விஜய் நாயகனாக நடித்த 'தேவா' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து விஜய்யுடன் 'வசந்த வாசல், செல்வா' ஆகிய படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். அஜித்துடன் 'வான்மதி, உன்னைத் தேடி' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இவருடன் ஜோடியாக நடித்த விஜய், அஜித் முன்னணி ஹீரோக்களாக இருக்க, சுவாதி 90களிலேயே சில படங்களில் மட்டுமே நாயகியாக நடித்திருந்தார்.தொடர்ந்து 'அண்ணன், நாட்டுப்புற நாயகன், ஹவுஸ்ஃபுல், பொன்விழா' ஆகிய படங்களில் நடித்தார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அமீர் நடித்த 'யோகி' படத்தில் நடித்திருந்தார். அதன்பின் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. அந்தக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடிகை தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டார். இப்போது கணவருடன் துபாயில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
மேலே குறிப்பிடப்பட்ட முன்னாள் ஹீரோயின்கள் அனைவருமே அவர்களது காலத்தில் பத்திரிகைகளில் அதிக முக்கியத்துவம் பெற்றவர்களாக இருந்தார்கள். அவர்களைப் பற்றிய பரபரப்பான கிசுகிசுக்கள், செய்திகள், பேட்டிகள் என நிறையவே வந்தன.
அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஹீரோக்கள் இன்றும் முன்னணி ஹீரோக்களாக நடித்துக் கொண்டிருக்க, அவர்கள் மட்டும் சினிமாவை விட்டு விலகியது காலத்தின் நிர்ப்பந்தமா அல்லது அவர்களாகவே எடுத்த முடிவா என்பது தெரியவில்லை. இருந்தாலும் ஒரு காலத்தில் ரசிகர்களை மகிழ்வித்தவர்களை இன்றும் நினைத்துப் பார்க்க இதன் மூலம் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.