குடும்ப பாங்கான படங்களை எடுத்தவர் வி.சேகர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கும் படம் "சரவணபொய்கை". தன் மகன் கார்ல் மார்க்ஸை இதில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். ஹீரோயினாக நடிப்பவர் "வெளுத்துக்கட்டு" அருந்ததி. காமெடிக்கு கருணாஸ் இருக்கிறார். படத்தின் பெரும்பகுதி ஒரு தியேட்டரிலேயே படம் பிடிக்கப்பட்டுள்ளது.
வி.சேகர் படம் பற்றி இப்படி விளக்குகிறார். "பெரும்பாலும் நான் இயக்கிய படங்கள் அனைத்தும் குடும்ப பாங்காக இருக்கும். சமூகத்துக்கு மட்டுமில்லாமல் குடும்பத்துக்கும் மெசேஜ் சொன்னவை. இது நான் இயக்கும் முதல் காதல் படம். கணக்குப்படி 18வது படம். வழக்கம்போல காமெடிக்கும் முக்கியத்துவம் இருக்கும். கார்ல் மார்க்சும், கருணாசும் நண்பர்கள். தியேட்டரில் வேலை செய்கிறவர்கள். கார்ல் மார்க்ஸ் டிக்கெட் கொடுப்பவர். கருணாஸ் டிக்கெட் கிழிப்பவர். அங்கு அடிக்கடி படம் பார்க்க வரும் அருந்ததி மீது கார்ல் மார்க்சுக்கு காதல் வரும். அருந்தயின் அக்கா மீது கருணாசுக்கு காதல். அந்தக் காலத்தில் கிராமங்களில் காதல் உருவாகும் களமாக இருந்ததில் தியேட்டருக்கு பெரிய பங்கு உண்டு. அதையே காமெடியாக சொல்கிறேன் என்றார்.