தினமலர் விமர்சனம் » ஹரிதாஸ்
தினமலர் விமர்சனம்
கொஞ்சம் ஆட்டிசம் பாதித்த மகன், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அப்பா, அந்த குழந்தைக்காக தன் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி கொண்டு, அதையே அந்த குழந்தையின் ஆச்சர்ய குறியாக்கும் டீச்சர்... இவர்கள் மூவருக்குமிடையே உள்ள உறவும், உன்னதபுரிதலும் தான் "ஹரிதாஸ்" படம் மொத்தமும்!
வெளிநாட்டுவாழ் இந்தியர் டாக்டர் வி.ராமதாஸின் தயாரிப்பில், அவருக்கும் அவரது மருத்துவ தொழிலுக்கும் பெருமை சேர்க்கும்படி வெளிவந்திருக்கும் வெற்றிப்படம்தான் "ஹரிதாஸ்!
மிடுக்கான போலீஸ் அதிகாரி, பாசக்கார தந்தை என்று இருவேறு பரிமாணங்களில் மிரட்டி இருக்கிறார் கிஷோர். தொழிலா, குறைபாடுள்ள மகனா? எனும் நிலையில், இருதலைகொள்ளி எறும்பாக தவித்து, பின் மகனுக்கு சரியானதொரு எதிர்காலத்திற்கு வித்திட்டுவிட்டு, தொழில் எதிரிகளையும் தீர்த்துகட்டி, தானும் மடிந்துபோகும் பாத்திரத்தில் கிஷோர் செம ஜோர்!
மாநகராட்சி பள்ளி ஆசிரியையாக சினேகா அசத்தலான தேர்வு! கிஷோரின் ஆட்டிசம் பாதித்த மகனுக்காக கிஷோரையே திருமணம் செய்து கொள்ள துணிந்து, பின் அப்பாவையும் இழந்த அந்த குழந்தையின் எதிர்காலத்திற்காக தன் எதிர்காலத்தையும் தியாகம் செய்து நம்மையும் உருக வைத்து விடுகிறார் அம்மணி! பலே, பலே!!
மேற்படி இருவரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறான் படத்தின் ரியல் ஹீரோ சிறுவன் ஹரியாக வரும் பிருத்விராஜ் தாஸ். ஆட்டிசம் பாதித்த சிறுவனாகவே வாழ்ந்திருக்கிறான் பிருத்வி என்றால் மிகையல்ல! பொடியன் ஏகப்பட்ட விருதுகளுக்கு வீட்டில் இப்பொழுதே இடத்தை காலி செய்து வைத்துக் கொள்ளலாம்! பரோட்டா சூரி, வில்லன் பிரதீப் ராவத் உள்ளிட்டோரும் படத்தின் பலம்!
ஏ.ஆர்.வெங்கடேஷின் இயல்பான வசன வரிகள், விஜய் ஆண்டனியின் இதமான பின்னணி இசை, ஆர்.ரத்னவேலின் ஒவ்வொரு கேரக்டரின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒளிப்பதிவு, ஆட்டிச சிறுவனின் கதையில் அழுத்தமா ஆக்ஷ்ன் கதையையும் கலந்துகட்டி, ஆர்ட் படத்தை கமர்ஷியல் படமாக தந்திருக்கும் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலின் சாமர்த்தியம், ஹரிதாஸ் படத்தின் வெற்றிக்கான வைத்தியம்!
மொத்தத்தில் "ஹரிதாஸ்" பெயருக்கு ஏற்றபடியே "ஹிட்பாஸ்!"--------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
ஒரு துப்பாக்கியையும், மெல்லிய மலரையும் இணைத்துக் கவிதையாக ஒரு படத்தைத் தந்திருப்பதற்காக முதலில் இயக்குநர் குமரவேலனுக்குக் கை குலுக்கி ஒரு பாராட்டைச் சொல்லியே ஆக வேண்டும். விருது நிச்சயம்!
சின்ன கதைதான் என்றாலும் அதன் வலு ரொம்ப அதிகம். என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் கிஷோரின் குழந்தை ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஸ்பெஷல் சைல்ட். அந்தக் குழந்தையை அதன் திறமை என்ன என்பதை கண்டறிந்து மாரத்தான் ஓட்டப்பந்தய வீரனாக அவனை ஆக்கும் ஒரு தந்தையின் உத்வேகக் கதை இது.
தலை நிமிர்ந்த நிற்கிறார் கிஷோர். கடமை, கண்ணியம் என்று கம்பீரம் காட்டும்போதாகட்டும், வேலைக்கு விடுப்பு போட்டுவிட்டு, குழந்தையே கதி என்று உருக்கம் காட்டும்போதாகட்டும் மனிதர் தன் திறமை முழுவதையும் கொட்டியிருக்கிறார். “டேய், நீ என்ன கேட்டாலும் நான் வாங்கித் தருவேன். ஆனா உனக்கு என்ன வேணும்னு உனக்குத் கேட்கத் தெரியலையேடா’ என்று அவர் சொல்லும்போது நமக்கும் நெஞ்சம் நெகிழ்கிறது.
யார் அந்தக் குட்டிப் பையன் பிரிதிவிராஜ்? இத்தனை நாள் எங்கே இருந்தான்? விரல்கள் நடுங்க, கால் இழுக்க, கண் செருக படம் முழுக்க அவன் காட்டும் பாவனைகள், நடிப்பு என்றே சொல்ல முடியவில்லை. நிஜமாகவே பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை டைரக்டர் நடிக்க வைத்திருக்கிறாரோ என்று சந்தேகம் கூட எழுகிறது. குதிரையைக் கண்டு மகிழ்வதும், க்ளைமாக்ஸில் ஓடப்போகும் முன் அவன் கண்கள் அப்பாவைத் தேடுவதும்... ஆஹா! டேய் குட்டிப் பையா, உன் நடுங்கிய கைகளைக் கெட்டியாக்கிக் கொள், விருதுகளைத் தூக்க பலம் வேண்டும் உனக்கு!
பளிச்சென்று அப்படியே இருக்கிறார் ஸ்நேகா. கார்ப்பரேஷன் பள்ளிக்கூட ஆசிரியையாக அவர் ஆடியபடியே பாடலைச் சொல்லித் தருவதும், அதை கிஷோர் பார்ப்பதும் கண்டு வெட்கமடைவதும் கொள்ளை அழகு. வசனம் பல இடங்களில் நெகிழ வைக்கிறது. சும்மா வசனமாக இல்லாமல் சிறப்புக் குழந்தைகளிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று படிப்படியாக காட்டியிருப்பதற்கு, மீண்டும் பாராட்டு.
போலீஸ் என்றால் மாமூல், மாமா என்று சுலபமாய்ச் சொல்லிவிடும் இந்தக் கால கட்டத்தில் அவர்களது பிரச்னையையும் ஒரு பாடல் சொல்கிறது.
பரோட்டா சூரியன் டீச்சர் காதல் ஓகே.
ரத்னவேலுவின் கேமரா படத்தின் தரத்தை மேலும் உயர்த்துகிறது.
க்ளைமாக்ஸில் கிஷோரைச் சாகடித்திருக்க வேண்டாம். அவரது என்கவுன்ட்டர் தோழர்கள் எப்போதும் தண்ணியடித்துக் கொண்டே ரவுடிகள் மாதிரி திரிவது போன்ற சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
ஹரிதாஸ் - எழுந்து நின்று கைதட்டலாம்
ஆஹா- திரைக்கதை, வசனம், இயக்கம், கிஷோர், சிறுவன் பிரித்விராஜ்
ஹிஹி- அப்படி எதுவும் பெரிசா இல்லீங்க!
குமுதம் ரேட்டிங் - நன்று-------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
மனநிலை முதிராத மகனைத் தூக்கிச் சுமக்கும் அப்பாவின் வலி நிறைந்த கதை. என்கவுன்ட்டர் போலீஸுக்குள் உறைந்திருக்கும் தாய்மை, படம் முழுக்கப் பரவுகிறது!
ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட தம் குழந்தையை ஓட்டப்பந்தய வீரணாக்குவதற்காக அப்பா படும் வலியும், வேதனையும் மெல்ல மெல்ல பார்வையாளனுக்குள் இறங்குவதில் திரைக்கதை கனகச்சிதம்.
படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டும் கிஷோர் ஃப்ரேமுக்கு ஃபேரம் ஸ்கோர் செய்கிறார்! “ஹரி... ஹரி... எனக்குப் பிறகு நீ என்னடா செய்வ...’ எனக் கதறி அழும்போது, பார்வையாளனுக்குள்ளும் ஏதோவொன்று உடைந்து நொறுங்குகிறது!
ஆட்டிஸக் குழந்தையாக அநாயாசமாக நடித்திருக்கிறான் பிருத்விராஜ்தாஸ். நேருக்கு நேர் பார்க்காத விழிகள், உடையும் பேச்சு, சுவாரஸ்யமற்ற மேனரிஸம்... எல்லாம் ஹண்ட்ரட் பர்சென்ட் பொருந்துகிறது! யாருக்கு அந்த ஓமக்குச்சி சிறுவன்? அவனுக்கும் ஸ்பெஷல் அப்ளாஸ்!
சினேகா நடிப்பில் சிக்ஸர் அடிக்கும் காட்சிகள் நிறைய. கிஷோர் முன்பு அவர் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தர தயங்குவதும், பின்பு “ஹரிக்கு நான் அம்மாவா இருக்கேன்’ எனும்போதும் படத்தில் கூடுதல் பலம் சேர்கிறது!
வசனங்களும் படத்துக்குப் பெரிய பலம். “கோச் டாக்டர் மாதிரி பேசுகிறார். டாக்டர் கோச் மாதிரி பேசுகிறார்’ என்று சினேகா சொல்வது ஒரு சோற்றுப் பதம்.
சூரி காமெடி தாங்கலை. இப்படியே போனா வண்டி ஓடாது சூரி.
படத்துக்குப் பெரிய பலம் ரத்னவேலுவின் கேமரா! போலீஸ் குவாட்ரஸ்குள்ளும், குத்துப் பாட்டுக்குள்ளும் நெளிவு சுளிவு தெரிந்து விளையாடுகிறது. விஜய் ஆண்டனி பின்னணியில் சில இடங்களில் பேசாமல் இருந்து கதைக்கு இடம் கொடுக்கிறார். “அன்னையின் கருவில்’ மன உருக்கம் எனில் “போலீஸ்’ குத்துப்பாட்டு துள்ளல்!
ஆட்டிஸம் கதையா... என்கவுன்ட்டர் கதையா... என்றால் நிச்சயம் ஆட்டிஸம்தான். பிறகு என்கவுன்ட்டர் பூச்சு எதுக்கு இயக்குனர் ஸார்?
இரண்டாம் பாகத்தின் கடைசி நேரம்தான் படத்தின் போக்கை மாற்றுகிறது. வழக்கமான க்ளைமாக்ஸ் சண்டையும், குத்துப் பாட்டு காம்பரமைஸும் தவிர்க்கப்பட்டிருக்கலாம்!
படம் முடிந்து எழுந்து வருகிற ஒவ்வொரு ரசிகனுக்குள்ளும் கனத்த மௌனம் ஓங்கி அறைகிறது. அந்த அறைதல் கிஷோரின் முகமாக இருப்பது கதை, திரைக்கதை இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றிதான்.
- கதிர்பாரதி