தினமலர் விமர்சனம் » வெள்ளச்சி
தினமலர் விமர்சனம்
காமெடி நடிகர் பாண்டுவின் வாரிசு பிண்டு கதாநாயகராக அறிமுகமாகியிருக்கும் படம் "வெள்ளச்சி". பவதாரணியின் இசை படத்தின் பெரும்பலம்!
கள்ளக்காதல்கள் பல செய்து காசைக் கரைக்கும் தந்தைக்கும், நல்ல காதல் ஒன்றே ஒன்று செய்து நல்ல வழியில் காசு சம்பாதிக்கும் மகனுக்குமிடையில் நடக்கும் ஈகோ யுத்தம் தான் "வெள்ளச்சி" மொத்தமும். இந்த ஈகோ யுத்தத்தின் இறுதியில் அப்பனே மகனுக்கு விஷம் வைத்த இனிப்பை, அவனது காதலி மூலமே கொடுத்தனுப்பி, நயவஞ்சமாக மகனை கொல்வது நம்பமுடியாத க்ளைமாக்ஸ் என்றாலும், நெஞ்சை பதற வைக்கும் க்ளைமாக்ஸ் என்பது படத்தின் பலங்களில் மற்றும் ஒன்று!
பாண்டுவின் மகன் பிண்டு, கிராமத்து இளைஞனாக, கதாநாயகனாக 16 அடி பாய்ந்திருக்கிறார். பலே பலே!
கதாநாயகி வெள்ளச்சியாக வரும் சுசித்ரா உண்ணி காதல், சோகம், கலகலப்பு, கோபம் என்று நவரசத்தையும் முகத்தில் தேக்கி முடிந்த வரை தன் பாத்திரத்தையும் படத்தின் டைட்டில் ரோலையும் தூக்கி நிறுத்தியிருக்கிறார். பேஷ், பேஷ்!
ஹீரோ பிண்டுவின் ஸ்கூல் வாத்தியராக பாண்டு, கள்ளக்காதல் கம் கழுத்தறுப்பு பேர்வழியாக செவ்வாளை, பிண்டுவின் ரியல் எஸ்டேட் குருநாதர் கம் வில்லன் மதுமாறன், அவரது நான்கு மனைவிகள் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
சாய்நட்ராஜின் ஒளிப்பதிவும், பவதாரணியின் பாடல்கள், இசையும் (பின்னணி இசையில் இருக்கும் அதிகப்படியான இரைச்சலை தவிர்த்திருக்கலாம்...) படத்திற்கு மேலும் பெரும் பலங்கள்! வேலு விஸ்வநாத்தின் எழுத்து, இயக்கத்தில் விளையாட்டாக சொல்வது வினையாகி போகும் கதையாக வெளியாகி இருக்கும் "வெள்ளச்சி" - "தமிழச்சி" - "வெற்றியாட்சி...?!!"