தினமலர் விமர்சனம் » சட்டம் ஒரு இருட்டறை
தினமலர் விமர்சனம்
முப்பது வருடங்களுக்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகரனின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற "சட்டம் ஒரு இருட்டறை" படத்தை சில, பல மாற்றங்களுடன் எஸ்.ஏ.சி.யின் பேத்தி முறை இளம் பெண் இயக்குனர் சினேஹா பிரீட்டோ இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அன்று விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சீரஞ்சீவி உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற "சட்டம் ஒரு இருட்டறை" புதுமுகம் தமன் நடித்து தற்போது வெளிவந்திருக்கிறது!
கதைப்படி, ஒரு கொலைக்கு சாட்சியாகும் தன் காதலி பியாவை கொன்றவர்களை ஹீரோ தமன், சாட்சிகளே இல்லாமல் கொன்று குவிப்பதுதான் "சட்டம் ஒரு இருட்டறை" படத்தின் மொத்த கதையும்! இந்த கதையில் ஒரு அக்கா, தம்பி சென்டிமென்ட், இரண்டு காதல், நான்கைந்து டூயட், நான்கு பைட், நிறைய சட்ட ஓட்டைகள் கூடவே கொஞ்சம் இருட்டறைகள்(?) என்று படத்தை கலர்புல்லாக தர முயற்சித்திருக்கிறார் 18 வயதே நிரம்பிய இளம் பெண் இயக்குனர் சினேஹா பிரிட்டோ, பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக இல்லாமல், பிள்ளையார் பிடிக்கப்போய் அது யானைமுகனாக ஆனதால் அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார் சினேஹா, என்பது எஸ்.ஏ.சி.க்கு ஆறுதல்!
மற்றபடி ஹீரோ தமன், நாயகிகள் பியா, பிந்து மாதவி, அக்கா கேரக்டரில் அதிரடி போலீஸ் ஆபிஸராக வரும் ரீமா சென், வில்லன்கள் ராதாரவி, சுரேஷ், சம்பத்ராம் எல்லோரும் மிரட்டுகிறார்கள்! வில்லன்கள் மிரட்டுவது சரி! நாயகன் நாயகியருமா...? என வாசகர்கள் விழிபிதுங்குவது புரிகிறது... வேறு என்ன சொல்ல...?!
"சட்டம் ஒரு இருட்டறை" என்று அறிஞர் அண்ணா சொன்னார். "சாட்சிகள் சரியில்லைன்னா நீதிக்கே தண்டனை கிடைக்கும்னு நான் சொன்னேன் எவனும் கேட்கலை..." என்று பன்ச் டயலாக் பேசியபடி க்ளைமாக்ஸில் ஹீரோவுக்கு உதவும் ஜெயிலராக வரும் எஸ்.ஏ.சி., படத்திற்கு பக்கபலம்!
ஆனாலும் காமெடி என்ற பெயரில் கடிப்பதற்கு இருவர், பச்சை, மஞ்சள், கறுப்பு, சிவப்பு, நீளம், ஊதா, ஆரஞ்சு, வைலட் என்று வண்ண வண்ண கலர்களால் நம் கண்களின் "பாப்பாவை(விழித்திரை) படுத்தும் காமிராமேன் சி.ஜே.ராஜ் குமாரின் ஒளிப்பதிவு என்று ஏகப்பட்ட பலவீனங்கள் இருந்தும், விஜய் ஆண்டனியின் இசையும், சினேஹா பிரிட்டோவின் விறுவிறுப்பான திரைக்கதையும், வித்தியாசமான காட்சியமைப்புகளும் "சட்டம் ஒரு இருட்டறை"யை "கலர்புல் திரையாக்கியுள்ளன என்றால் மிகையல்ல!
ஆக மொத்தத்தில், "சட்டம் ஒரு இருட்டறை", பியா, பிந்து மாதவி உள்ளிட்ட கலர்புல்களுடன் கூடிய "பிரமாண்ட அறை!" எனினும் "சற்றே இருட்டறை!"--------------------------------------------------------------
குமுதம் சினிமா விமர்சனம்
ஒரு கொலையைக் கண்ணால் பார்த்த காதலியை வில்லன்கள் மூன்று பேர் போட்டுத் தள்ள, காதலன் அந்த மூன்று பேரையும் தனி ஆளாக போட்டுத் தள்ளுகிறான். 30 வருடங்கள் பழைய கதையானாலும் புதிதாகத்தான் இருக்கிறது.
விஜயகாந்த் ஏற்ற பார்த்திரத்தில் தமன். ஆடத் தெரிகிறது. சண்டை போடத் தெரிகிறது. தனியாளாய் சவால் விடும்போது மட்டும் புன்னகை வருகிறது. படத்தின் பலம் மூன்று தேவதைகள். ரீமாசென், பிந்து மாதவி, பியா. ஐ.பி.எஸ். அதிகாரியாக ரீமா. மிடுக்கைத் தக்க வைத்துக் கொள்கிறார். தம்பியுடன் சவால் விடும்போதும், அவன் கன்னத்தில் அறைந்து வெளியில் தள்ளும்போதும் பளிச். ஆனால் படம் பூராவும் அவர் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பது கண்ணில் தூசி. சரி அவரது புருஷனாக வருபவர் தயாரிப்பாளருக்குச் சொந்தக்காரரா? மனிதர் எப்போதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார்!
கவர்ச்சிக்கு பிந்துமாதவி. செமை! காதலுக்கு பியா. அங்கங்கே விஜய் படத்தின் காட்சியையும், அவர் பெயரையும் சொல்கிறார்கள். கைதட்டலுக்காம்!
பாடல்கள் ஒரு தடவை கேட்கலாம். ரீரெக்கார்டிங்கிலேயே பல இடங்களில் கைதட்டலையும் விஸில் சத்தத்தையும் சேர்த்திருக்கிறார்கள். ஹஹா. க்ளைமாக்ஸில் எஸ்.ஏ.சந்திரசேகர் வந்து ஓவராகப் பேசுகிறார். படத்தை இயக்கியிருப்பது ஸ்னேகா பிரிட்டோ என்ற இளம் பெண். தாத்தா ஏஸ்.ஏ.சி.யின் படத்தை பேத்தி எடுத்திருக்கிறார். தன்னைப் போல் இளமையாகவே!
குமுதம் ரேட்டிங் - ஓகே