தினமலர் விமர்சனம் » ஆரோகணம்
தினமலர் விமர்சனம்
கணவனின் உதாசீனமும், சுற்றத்தின் அலட்சியமும் ஒரு ஏழைத்தாயின் மன அழுத்தத்தை, மனச்சிதைவாக மாற்றும் கதை.
கட்டிடக் காண்ட்ராக்டர் வள்ளிமுத்துவின் (இயக்குனர் மாரிமுத்து) மனைவி நிர்மலாவுக்கு (“தில்லு முல்லு’ விஜி சந்திரசேகர்), இரண்டாவது பிள்ளை செந்தில் (வீரேஷ்) பிறப்பின் போது ஏற்படும் மன அழுத்தும். சிகிச்சையில்லாமலும், கணவன் மற்றும் சகோதரிகளின் பிரிவாலும் மனச்சிதைவாகிறது. அடிக்கடி வீட்டை விட்டு காணாமல் போகும் நிர்மலா, ஒரு இரவில் தொழிலதிபர் சந்தியா (ராஜி விஜயசாரதி) காரில் அடிபடுகிறாள். சந்தியா உதவியால் பிழைக்கும் நிர்மலா, மனச்சிதைவிலிருந்தும் மீள்கிறாள்.
கே.பி.யின் “அக்னிசாட்சி’க்கு, வறுமைச்சாயம் பூசியிருக்கிறார்கள். ஐந்து நட்சத்திர ஓட்டலில், மனச்சிதைவுற்ற ஏழைப்பெண்ணாக, விஜி போடும் ஆட்டம் “க்ளாஸ்’! “விஜியைச் சுற்றியே கதை’ என்றாலும், படம் முழுக்க பல யதார்த்த கதாபாத்திரங்கள்! பைத்திய மனைவியை பிரிந்து செல்லும் போதும், “மனைவி காணவில்லை’ என்றவுடன் அலைந்து திரியும்போதும் மாரிமுத்து ஈர்க்கிறார். மனச்சிதைவின் உச்சத்தில், தாம்பத்ய சுகத்தை நிர்மலா வெறுத்து ஒதுக்க, அதனால் வேறொரு பெண்ணை வள்ளிமுத்து தேடுவது, இயல்பான ஆண் லாஜிக்! ஆனால்... அந்த “சித்தி’யும் நல்லவளாகவே இருப்பது நெருடல்!
நிர்மலாவின் மகளாக வரும் செல்வி (ஜெய் க்யூஹேனி) வரவேற்க வேண்டிய அறிமுகம். “இந்த வான்வெளி விடியாதோ... எந்தன் தாய்மொழி விளங்காதோ...’ பாடலில் சுப்புவின் வரிகளும், “கே’யின் இசையும் கண்களில் நீர் கோர்க்க வைக்கிறது. படத்தின் ஒரே குறை... படம் முழுக்க உலவும் ஆங்கில வசனங்கள்!
ஒரு குறும் படத்திற்கான கதையை, 92 நிமிடப் படமாக இயக்கிய லஷ்மி ராமகிருஷ்ணனைப் பாராட்ட மனம் தடுக்கிறது. ஆனால்... “மறக்க நினைத்து மறைத்து வைக்கப்பட்ட ஒரே கல்யாணப் புகைப்படமும் “காணவில்லை’ புகாருக்காக போலீசில் கொடுக்கப்பட்டு விட்டதே!’ என நிர்மலா வீட்டார் வருந்தும் போது, நட்சத்திர ஓட்டலில் நிர்மலா போட்ட ஆட்டம் “வண்ணப் புகைப்படங்களாக’ வீட்டுக்கு வரும் கடைசிக் காட்சி... மனம் நிறைக்கிறது! இயக்குனருக்கு “பாஸ் மார்க்’ போட வைக்கிறது!
மொத்தத்தில், "ஆரோகணம்" , இன்னுமொரு "அக்னிசாட்சி"
ரசிகன் குரல் : இந்தப் பொண்ணு அவங்க அக்கா சரிதா மாதிரியே முழிக்குதுல்ல!