தினமலர் விமர்சனம் » பில்லா-2
தினமலர் விமர்சனம்
அதிரடி ஆக்ஷன் காட்சிகள், கதைகளில் கூட அலட்டிக் கொள்ளாமல் நடிப்பதில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு நிகர், அஜீத்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும்படி வெளிவந்திருக்கும் படம்தான் பில்லா 2.
தடுக்கி விழுந்தாலும் தமிழனாய் விழுவோம் தவறி எழுந்தாலும் தமிழனாய் எழுவோம்... என்றெல்லாம் பக்கம் பக்கமாய் டயலாக் பேசி சென்டிமெண்ட் டச் பண்ணும் மற்ற தமிழ் ஹீரோக்கள் கூட செய்யத் தயங்கும் இலங்கை அகதி கேரக்டரில் இதில் எண்டரி ஆகும் அஜீத்துக்குத்தான் என்ன துணிச்சல்.?! வாவ்., கள்ளத்தோணி மூலம் கடல் கடந்து இலங்கை அகதியாக இந்தியாவிற்கு எண்ட்ரி ஆகி., இராமேஸ்வரம் அகதிகள் முகாமிற்குள் எண்ட்ரி போட்டுவிட்டு "எஸ்" ஆகும் அஜீத், அதன்பிறகு எடுக்கும் அவதாரங்கள் எல்லாம் எக்குத்தப்பாக அவரை எங்கெங்கோ எடுத்து செல்வது தான் ஆச்சர்யம்! அதிசயம்!! லாரியில் மீனும், மீனுக்குள் வைரங்களையும் கடத்தும் அஜீத்., அடுத்து போதை பொருட்கள், அதற்கடுத்து ஆயுதங்கள் என கடத்தி இந்தியாவில் இருந்து இண்டர்நேஷனல் வரை எதிராளிகள் எல்லோரையும் தீர்த்துக்கட்டி குறுகிய காலத்திலேயே பெரிய டானாக., "டர்ன்" ஆவதுடன் தனது அக்கா மகள் ஜாஸ்மினாக வரும் பார்வதி ஓமனக் குட்டனை வில்லன்களிடத்தில் பறி கொடுத்து, பலி கொடுத்துவிட்டு, வில்லி சமீரா எனும் புருணா அப்துல்லாவை நல்லவர் என்று நம்பி மோசம் போய் பின்பு புத்திசாலித்தனமாக அவரைத் தீர்த்துகட்டி, மெயின் வில்லன் திமித்ரி எனும் வித்யாத்ஜாம்வெல்லையும் தீர்த்து கட்டுவதும் தான் பில்லா 2 படத்தின் மொத்த கதையும்!
அகதியாக, அமைதியாக எண்டரியாகும் அஜீத் அதற்கு முந்தைய காட்சியிலேயே அதாவது டைட்டிலுக்கு முந்தைய ஒரு ரீலிலேயே ஏழெட்டு வில்லன்களை எக்குத்தப்பாய் கத்தி, கை துப்பாக்கி உதவியுடன் தீர்த்து கட்டிவிட்டு "என் வாழ்க்கையை ஒவ்வொருநாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன், ஒவ்வொரு நொடியும் நானா திட்டமிட்டடு செதுக்கினது டா... என்னை யாரும் அவ்வளவு எளிதில் தீர்த்துகட்டிட முடியாது..." என கர்ஜிப்பதில் தொடங்கி "எனக்கு நண்பனாக இருக்க எந்த தகுதியும் வேண்டாம். ஆனால் எதிரியா இருக்க நிறைய தகுதிகள் வேண்டும்... அது உன்கிட்டே இல்லை..." என ஒவ்வொருவராய் தீர்த்துகட்டுவது வரை ஒவ்வொரு சீனிலும் ஒரு பெரும் கடத்தல் மன்னனாகவே வழ்ந்திருக்கிறார் பலே!
அதே சமயம் இலங்கை அகதியாக அறிமுகமாகும் அஜித்., அந்த ஈழத்தமிழர்களுக்காக ஏதேதோ செய்யத்தான் "டான்" ஆகிறார் எனப் பார்த்தால், அடுத்தடுத்து அதை கடத்துவது, இதை கடத்துவது, அவரை போட்டு தள்ளுவது, இவரை தீர்த்துக் கட்டுவது... என கிரிமினல் நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகிறாரே ஒழிய, ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யாதது ஏமாற்றத்தையே தருகிறது. மற்றபடி "இது ஆசை இல்ல பசி என்பதும், போராளிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் சொல்வதும், "இதுவரை காட்டி கொடுத்தவங்க எல்லாம் கூட இருந்தவங்க..." தான் என்று பஞ்ச் டயலாக் பேசுவதெல்லாம் பார்க்கும் போது., ஏதோ எடுக்க நினைத்து அது சென்சாரில் ஏதேதோ ஆகியிருப்பது புரிகிறது! அப்பட்டமாகவும் தெரிகிறது.
சீன் பை சீன் எதிர்படுபவர்களை எல்லாம் துப்பாக்கியும் கையுமாக போட்டுத்தள்ளும் அஜீத் போன்றே பார்வதி ஓமனக்குட்டன், புருனா அப்துல்லா, மனோஜ் கே. ஜெயன், அப்பாசியாக வரும் சுதான்ஷூ பாண்டே, திமித்ரி-வித்யாத், செல்வராஜ்-இளவரசு, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட ஒவ்வொரு நடிகரும், நடிகையும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். அதிலும் படமுழுக்க பாடல் காட்சிகளிலும் சரி, படக்காட்சிகளிலும் சரி கவர்ச்சி உடையில் வரும் இளம் பெண்கள் படத்தின் பெரும்பலம். ஒரு "ஏ" சர்டிபிகேட் படத்திற்கு இதைவிட வேறென்ன பெரும் பலமாக இருக்க முடியும்.?!
அஜீத் உள்ளிட்ட நட்சத்திரங்களைக் காட்டிலும் ஆர்.டி.ராஜசேகரின் அழகிய ஒளிப்பதிவும், யுவன் சங்கரராஜாவின் இனிய இசையும், சக்ரி டோலட்டியின் 1980களை காட்சிப்படுத்தியிருக்கும் எழுத்து இயக்கமும் இரா. முருகன், முகம்மது ஜாபரின் நச் டச் வசனங்களும் படத்தை பல மடங்கு பிரமாண்டபடுத்தி காட்டியிருக்கின்றன என்றால் மிகையில்லை!
80களில் செல்போனே இல்லாத காலத்தில் வில்லன் திமித்ரி தன் பிஸினஸ் பார்ட்னர்களுக்கு லைவ்ஸ்கிரீனில் தன் ஆயுத ஆலையை காண்பிப்பது உள்ளிட்ட ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்குகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் "பில்லா-2", இல்ல, "நல்லா" என்று ரசிகர்களை கதற விடாத அளவில் இருப்பது ஆறுதல்!
ஆகமொத்தத்தில் “பில்லா இருக்கு நல்லா.?! அப்பாடா!!---------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
பேரிழப்புகளோடு இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்துசேரும் அகதி டேவிட் பில்லா. தஞ்சம் தேடி வந்த இடத்தில்,“ டேவிட் தந்திரமாக வைரக் கடத்தலில் சிக்க வைக்கப்படுகிறான். எதற்கு தயாராக இருக்கும் டேவிட்டுக்கு அதுவே துருப்புச் சீட்டாகிறது. “கத்திக்கு கத்தி, கருணைக்குக் கருணை’ என்ற பாதையிலேயே போய், இறுதியில் டேவிட் “ஒன் அண்ட் ஒன்லி’ டான் ஆவதுதான் பில்லா-2.
மீண்டும் பில்லாவாக அஜீத். நினைத்ததை முடிக்கிற டான் கேரக்டரில் அஜீத்தை ஏனோ மறுகேள்வியின்றி ஏற்றுக் கொள்ள முடிகிறது. முட்டி மோதி படிப்படியாக முன்னேறும்போதும் தடம் மாறும் பேரங்களில் கோபத்தை சூயிங்கம் மாதிரி மென்றுகொண்டே பேசும்போதும் பிரயோகத்துக்குக் காரணம் சொல்லும்போதும் குழப்புகிறார். பில்லாவின் ஆடுபுலி ஆட்டத்துக்கு யுவனின் இசை பலம் சேர்க்கிறது. “மதுரை பொண்ணு எதிரே நின்னு’ பாடல் யுவனுக்கு மட்டுமே கைகூடி வரும் லோக்கல் குத்து.
அகதி முகமோ ஆடம்பரமான பங்களாவோ ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு நேர்த்தியாகக் கண்முன் வைக்கிறது. ஒவ்வொரு பாடலையும் கலர்ஃபுல் திருவிழாவாக மாற்ற ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். அஜீத்துக்கும் பார்ட்டியில் வரம்பு மீறும் இளைஞர்களுக்கும் இடையேயான பாட்டில் சண்டையும், ஹெலிகாப்டரில் நடக்கும் க்ளைமாக்ஸ் மோதலும் ஆக்ஷன் விருந்து.
ஒரு கனமான போட்டோ ஆல்பத்தைப் படு வோகமாக புரட்டும் தொனியிலேயே மொத்தப் படமும் படமாக்கப்பட்டிருப்பதால் முழுமையை உணர முடியவில்லை. “ஏன் எதுக்குன்னு கேட்காதீங்க. பில்லாவால் எதுவும் முடியும்’ என்ற லாஜிக் சில இடங்களில் பில்லாவையே பலவீனப்படுத்துகிறது. எடுத்ததுக்கெல்லாம் கத்தியை நடுக் கழுத்தில் சொருகுவது, கழுத்தைப் பனங்கிழங்கு கணக்காக முறிப்பது என்ற அன்லிமிடெட் வன்முறையைச் சற்று குறைத்திருக்கலாம்.
பில்லா-1ன் வெற்றி, அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என இரட்டை சவால்களுக்கிடையே பணிபுரிந்துள்ள இயக்குநர் சக்ரி டோலட்டியை, அஜீத் என்ற ஒன் மேன் ஆர்மிதான் கரை சேர்த்திருக்கிறது.
பில்லா 2 “தல’ புராணம்.
குமுதம் ரேட்டிங் - ஓகே