தினமலர் விமர்சனம் » வேங்கை
தினமலர் விமர்சனம்
இயக்குநர் ஹரி தனது முதல் படமான "தமிழ்" படத்தில் தொடங்கி "சிங்கம்" வரை... தான் இயக்கிய படங்களில் இருந்தே காட்சிகளையும், கதையையும் உருவி, உருவாக்கி, கருவாக்கி, கதையாக்கி, காட்சிகளாக்கி இருக்கும் படம்தான் "வேங்கை"!. போதாத குறைக்கு லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த "சண்டைக்கோழி" படத்தையும் சைடில் உருவி வேங்கையை பதுங்கி பாய செய்திருக்கிறார்.
தனுஷ், தமன்னா, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்களின் நடிப்பு, தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை, வெற்றியின் ஒளிப்பதிவு, வி.டி.விஜயனின் படத்தொகுப்பு ஆகிய ப்ளஸ் பாயிண்ட்டுகள் ஹரியின் எழுத்து இயக்கத்திற்கு பலம்!
தனுஷ் கைகளில் அளவுக்கு மீறி இருக்கும் ஆயிரமாயிரம் அருவாள்கள் இல்லை என்றால், "வேங்கை" - "வெறுங்கை!", இயக்குநர் ஹரி மாற்றிக்கொள்ள வேண்டும் இந்த "பாங்கை!"
-------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
எதிரியின் தலையில் ஏறி அடிக்கும் ஓர் இளைஞனின் வாழ்க்கையில் கொஞ்சம் ஜாலி, கொஞ்சம் காதல், அதிகமான மோதல், ஆட்டம் போட நாலு பாட்டு... இருந்தால் போதும் கோடம்பாக்கத்தில் படம் பண்ணிவிடலாம். என்ன.. கூடவே பிரபல நடிகரின் கால்ஷீட் கிடைக்க வேண்டும் அவ்வளவுதான். அப்படியான ஒரு கமர்ஷியல் படம் வேங்கை. தனுஷ் நடித்திருப்பதால் கமர்ஷியல் ராக்கெட் எனக் கூடுதல் கவர்ச்சி. மற்றபடி இயக்குனர் ஹரிக்கே உரிய அருவா, அடிதடி, அதிரடி, கார்சேஸிங், காது கிழிய கத்தல்... அக்மார்க் அம்சங்கள் "வேங்கையிலும் உண்டு.
வழக்கத்தை விட கூடுதல் ஒல்லியாகத் தெரிகிற தனுஷின் நடிப்பில் காரமோ காரம். "கோவக்காரன் அருவாளைத் தூக்கக் கூடாது. காவக்காரன் தூக்கலாம் எனச் சொல்லும்போது ஆமாம் என திரைக்கதை நம்மைத் தலையாட்ட வைத்து ஜெயிக்கிறது. பத்தவெச்ச தௌஸன் வாலா போல பரபரன்னு தெரிகிறார் தனுஷ். ராஜ்கிரண் பாத்திரம் வேருக்கு வழிவிடும் இறுகிய பாறை. வெடிப்பதும், துடிப்பதும் வித்தியாசமெனில் நெகிழ்வது எதிர்பார்த்த பழசு. ஊர் பெரிசு என்பதற்காக எம்.எல்.ஏ.வைக் கூப்பிட்டு கணக்குக் கேட்பது உலக மகா ஓவர். ஆடுவதற்கும், அழுவதற்கும் தமன்னா இருக்க, வில்லத்தனத்தில் சிரிக்க வைப்பதில் எப்போதும் போல பிரகாஷ்ராஜ் பிரகாசம். அதுவும், எம்.எல்.ஏ.வாக இருக்கிவரை அடங்கிக் கிடப்பதும், அமைச்சரானதும் ஹெலிகாப்டரில் வந்து சொந்த ஊரை அதகளப்படுத்துவதும் ஆரவார அட்டகாசம்.
தேவிஸ்ரீபிரசாத்தின் அத்தனை பாடல்களும் துள்ளலாட்டம். "பிடிக்கலை என்ற பாடலை இனி எல்லோருக்கும் பிடிக்கும். பின்னணியிலும் துள்ளத் துடிக்க படத்தை நகர்த்தியிருக்கிறார். எல்லாம் சரிதான்... ஆனால் எதற்கெடுத்தாலும் ஆளாளுக்கு ஏய்... ஊய்... என்று சவுண்டு விட்டு காதைக் கிழிப்பது ஏன்? மென்மையான வசனங்களைக் கூட வன்மையாகப் பேசுவதேன்? உலகமே கணினிமயமான பிறகும் இன்னுமா இளைஞர்கள் அரிவாளோடு சுற்றுகிறார்கள்? வில்லனை வெட்டி வீழ்த்தி விடுவதுதான் நீதியா... மன்னிப்பு... பொறுமை... இதெல்லாம் கதையில் சேர்க்கவே முடியாதா? ஒரு ஆள் பயணிக்க எதற்கு இத்தனை கார்கள்? எங்கே பார்வையாளர்கள் மீது கூட கார்கள் ஏறிவிடுமோ... என அச்சமாக இருக்கிறது. இதையெல்லாம் யோசிக்காமல் சிரித்துவிட்டு வரவேண்டுமென்றால், "வேங்கையை ரசிக்கலாம்.
வேங்கை - வேகம் உண்டு; விவேகமில்லை!