தினமலர் விமர்சனம்
சக்கரகட்டி படத்தின் மூலம் கதாநாயகராக அறிமுகமான தன் மகன் சாந்தனுவை முன்னணி இளம் நாயகர்களில் ஒருவராக ஸ்திரப்படுத்த கே.பாக்யராஜ் எடுத்திருக்கும் அஸ்திரம்தான் சித்து பிளஸ்2 பர்ஸ்ட் அட்டம்ப்ட்!
கதைப்படி பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியை தழுவும் சாந்தனு, ஹெட் மாஸ்டர் அப்பாவுக்கு பயந்து சென்னைக்கு ரயிலேறி வருகிறார். அதே பிளஸ் 2 வில் தானும் பெயில் என தவறாக புரிந்து கொள்ளும் கதாநாயகி சாந்தனியும் சென்னைக்கு ரயிலில் வருகிறார். சென்னை ரயில்வே ஸ்டேஷனில் இக்கட்டான சூழலில் ஹீரோ சாந்தனுவால் காப்பாற்றப்படும் சாந்தினி, தன் இஷ்டப்படி ஜாலியாக ஊரை சுற்றி முடித்ததும் தற்கொலை முடிவில் இருக்கும் சாந்தனுவுடனேயே தங்கும் முடிவுக்கு வருகிறார். தனக்கே அடைக்கலம் இல்லாத நிலையில் சாந்தினிக்கு முதலில் அடைக்கலம் கொடுக்க மறுக்கும் சாந்தனு, கையில் காசில்லாத நாயகியின் நிலை கண்டு தன்னுடன் தங்க அனுமதிக்கிறார். அந்த அனுமதி இருவருக்குமிடையே ஒரு தெய்வீக (?) காதலையும் வெகுவாக தர, இருவரும் தங்கள் சொந்தபந்தங்களுடன் இணைந்தனரா? சாந்தினி தடை பல கடந்து சாந்தனுவின் திருமதி ஆனாரா. இல்லையா? என்பது வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதைகளிலும், பாக்யராஜ் பட பாணி க்ளைமாக்ஸிலும் சொலலப்பட்டிருக்கிறது.
தம்மாத்துண்டு பலூனை ஊதி ஊதி பெரிதாக்குவதுபோல் இம்மாம் சிறிய கதையை திரைக்கதை மேதை கே.பாக்யராஜ், தனது ஸ்கிரீன் ப்ளே ட்ரீட்மெண்ட்டால் சீனுக்கு சீன் சுவாரஸ்யமாக்கி இருப்பதற்காகவே அவருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்ல வேண்டும்.
வேலியில போற எதையோ எடுத்து வேட்டிக்குள்ள விட்டுக்கிட்டானாம் ; அந்த கதையாகி போச்சு என ஹீரோ சாந்தனு ஒரு சீனில் சாந்தினியிடம் அஙகலாயிக்க... வேலியில் என்ன போச்சு? எதை எடுத்து வேட்டிக்குள்ள விட்டுக்கிட்ட...? என ஹீரோயின் அப்பாவியாய் கேட்பதில் தொடங்கி, அத்தை பையன் - மாமா பையன் மேலதான் ஆசை வரணும்னு இல்ல... ஒரு பொண்ணு வயசுக்கு வந்துட்டாலே அவளுக்கு ஒரு பையன் மேல ஆசை வரலாம்.... அது நான் எப்பவோ வந்துட்டேன். ஒம் மேல ஆசைப்பட அந்த வகையில் எனக்கு எக்கச்சக்க தகுதி இருக்கு... என ஹீரோயின் தன் காதலை வெளிப்படுத்தும் போதெல்லாம் மறுக்கும் ஹீரோவுக்கு, கவுண்டர் கொடுக்கும் சாந்தினியின் குரலை கேட்டாலே தியேட்டரில் விசில் பறக்கிறது.
அதேமாதிரி அப்பா பாக்யராஜ் மாதிரி டபுள்மீனிங் எல்லாம் கிடையாது, ஸ்டெயிட் மீனிங்தான்... என தன்னுடன் தங்கும் சாந்தினியை ரேப் செய்யப் போவதாக பயமுறுத்தும் சாந்தனு, அவ்வப்போது அப்பா பாணியில் டபுள் மீனிங்கிலும் கலக்கி தியேட்டரை கலகலக்க வைப்பது ஹைலைட்.
டபுள் மீனிங்கில் மட்டுமல்ல... தற்கொலை முடிவோடு சாவையே சந்திக்க துணிந்த ஒருத்தன்.... தைரியமாக வாழுவதற்கு ஒரு சின்ன வழி கிடைத்தால் வாழுவான் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு! என தற்கொலை முடிவில் இருந்து மீண்டவர்கள் மீது சமுதாயத்திற்கு இருக்கும் பார்வையை மாற்ற முயற்சிக்கும் தத்துவ முத்துக்கள் மாதிரி படம் முழுக்க நிறைய மெசேஜை நிரப்பி இருக்கும் பாக்யராஜூக்கு மீண்டும் ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆக வேண்டும். இதேமாதிரி பிளஸ் 2 படிக்கும் சாந்தினியின் குரல் உள்பட எல்லாவற்றிலும் சிறப்பு கவனம் செலுத்தி, தனது சீனியாரிட்டியை மெய்ப்பித்திருக்கிறார் பாக்யராஜ்.
என் சோக கதையை கேளு தாய்க்குலமே... மற்றும் நான் ஆளான தாமரை... ஆகிய இரண்டு தனது ஹிட் பாடல்களை மகனுக்காகனும், இன்றைய இளைஞர்களுக்காகவும் தரணின் இசையில் தரமாகவே ரீ-மிக்ஸ் செய்திருக்கும் பாக்யராஜ், அதை தானே கெஸ்ட்ரோலில தோன்றி ஒரிஜினல் மிக்ஸ் என விளக்கம் கொடுப்பதும் செம காமெடி என்றால்; அதைவிட காமெடி.... வாங்க உங்க எக்சர்சைஸை எல்லாம் மக்கள் பார்த்து ரொம்ப நாளாயிற்று... என அப்பாவை மகன் சாந்தனு ஆட அழைப்பது! இப்படி மகனுக்காக இறங்கி வந்து தன் இமேஜை எல்லாம்கூட டேமேஜ் செய்து கொண்டு சித்து பிளஸ் 2 படம் வெற்றி பெற எக்கச்சக்க சித்து வேலைகளை செய்திருக்கும் சீனியர் பாக்யராஜின் ஆசையை வாரிசு ஜூனியர் பாக்யராஜ் எந்தளவிற்கு பூர்த்தி செய்திருக்கிறார் எனக் கேட்டால்... படத்தின் டைட்டிலில் சித்து பிளஸ் 2 நூற்றுக்க இருநூறு மார்க் வாங்குவதாக போடுகிறார்களே... அது மாதிரி அப்பாவின் ஆசையை பூர்த்தி செய்ய மகன் சாந்தனு இருநூறு சதவீதம் உழைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்!
டான்ஸ், பைட் என அப்பாவிற்கு வராத விஷயங்களில் எல்லாம் கூட கொடி கட்டி பறந்திருக்கும் சாந்தனு, அப்பாவைப் போன்று நடிப்பிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். ஹேட்ஸ் ஆப் சாந்தனு!
சாந்தனு மாதிரியே நாயகி சாந்தினி மற்றொரு நாயகி கவுசா, காமெடி கஞ்சா கருப்பு, தாய்மாமன் விஷ்ணு, ராஜேஸ், தலைவாசல் விஜய், சீமா, சீதா, பிரகதி, அவினாஷ், நெல்லை சிவா, அனுமோகன், சிசர் மனோகர், கவுரவ தோற்றத்தில் வரும் செந்தில், பாக்யராஜ் உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை பாங்காக செய்து, பக்காவாக உழைத்திருக்கிறார்கள்.
தரணின் இசையும், ராசாமதியின் ஒளிப்பதிவும் இயக்குனர் சீனியர் கே.பாக்யராஜின், கதை - திரைக்கதை- வசனம்- இயக்கத்யுைம் இளமை ஆக்கியிருக்கிறதென்றால் மிகையல்ல! முன்பாதியில் இருக்கும் விறுவிறுப்பு பின்பாதியிலும் இருந்திருந்தால் வெறும் வாயை மெல்பவர்களின் வாயையும் அடைத்திருப்பான் சித்து! நாடக பாணியில் அமைந்திருக்கும் பாம் சீன், என்கவுண்டர் சீன் உள்ளிட்டவைகளை மட்டும் ஒதுக்கி விட்டு உள்ளே உள்ள சிறப்புகளை மட்டும் பார்த்தால் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் சித்து பிளஸ் 2 - பத்துக்கு பிளஸ் 2.
---------------------------------
குமுதம் விமர்சனம்
காதலில் விழுந்து... காதலி வீட்டில் நல்ல புள்ளையாக நம்ம ஹீரோ டெண்ட் அடித்து... "அட... சமர்த்துப் பையனா இருக்கானேன்னு பேர் சம்பாதிச்சு..."தில்வாலே ஆரம்பிச்சு ""ஜப் வீ மெட் வரையிலான அதே பழைய வெற்றி ஃபார்முலாதான் படத்தின் ஒன்லைன்.
ஆனால், கதாநாயகனை டார்ச்சர் செய்யும் அப்பா... கதாநாயகியின் அன்புக்காக ஏங்கும் வெள்ளந்தி தாய்மாமன், என்கவுண்ட்டர் செய்யத் துடிக்கும் போலீஸ் கேரக்டர் என சின்ன சின்னதாய் ஐஸ் கட்டிகளைப் போட்டு செம கூலாக காக்டெயில் கலந்து "மைல்ட் கிக் கொடுத்திருக்கிறார்கள், இயக்குனர் பாக்யராஜூம், கதையாசிரியர் கிருஷ்ணா டாவின்சியும். பல இடங்களில் பனங்கள்ளு அடிச்ச மாதிரியான எஃபெக்ட்டை பாராட்டலாம்.
"அடப்போய்யா நம்ம அப்பாதானே டைரக்டர்... என்ற அலட்சியத்தில் ஆரம்பத்தில் சாந்தனு கொஞ்சம் சறுக்கினாலும், போலீஸூக்கான ஆண்மைக் குறைவுக்கான லேகிய வைத்தியரின் அட்ரஸ் கொடுக்கும் காட்சியிலும், "அவ உனக்கு ஆன்ட்டி மாதிரி இருக்கா, அவகிட்டே போய் வழியறியே.. என ஹீரோயின் கேட்கும் கேள்விக்கு "சோ வாட்..? நல்ல கோச்சுதான், நல்லா கத்துக்கொடுப்பாங்க... என கலாய்ப்பதும் ரசிக்கவைக்கும் காட்சிகள்.
கதாநாயகியின் அப்பா கேரக்டருக்கு அவ்வளவு பில்ட் அப் தேவையா.. என்ன? ஏன்பா.... இந்த பால்ய காதல் ஃப்ளாஷ்பேக்கை விடவே மாட்டீங்களா...? அந்த தாய்மாமாவின் ப்ளாக் அண்ட் ஒயிட் காட்சிகள் நம்மை எரிச்சல்தான் படுத்துகிறது.
தரணின் இசையில் எல்லாப்பாடல்களுமே காதுக்கு இனிமை. ராசாபதியின் உறுத்தாத ஒளிப்பதிவு படத்திற்கு பக்கா பலம்.
சித்து +2 - அப்பா வைத்த டெஸ்ட்டில் மகன் ஃபெயிலாகவில்லை ; குமுதம் ரேட்டிங் - ஓ.கே.