தினமலர் விமர்சனம்
பெரிய இயக்குனர் பி.வாசுவின் மகன் ஷக்தி, நாயகராக நடித்து வெளிவந்திருக்கும் மூன்றாவது படம்தான் ஆட்ட நாயகன். டைட்டிலைத் தவிர படம் மொத்தமும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஜனரஞ்சகமான கதையம்சம் கொண்டது என்பது தியேட்டருக்கு பின்தான் தெரிய வருவது மைனஸ்!
கதைப்படி, நாசருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவர் ஆதித்யா ஐதராபாத்தில் ஐ.டி. கம்பெனி வைத்திருக்கிறார். இளையவர் ஷீரோ ஷக்தி. அமெரிக்கா போக வேண்டுமென்ற ஆசையில் உள்ளூரில் வெட்டியாக வம்பு, வழக்கென்று திரிகிறார். அப்பா நாசருக்கு பிடிக்காத பிள்ளையாக வளரும் ஷக்தி, அம்மா செல்லம். நண்பருக்கு பெண் பார்க்க போன இடத்தில் பெண்ணின் தங்கை ரம்யா நம்பீசன் மீது ஈஸியாக காதல் வசப்படுகிறார். ரம்யாவும் ஷக்தி மீது காதல் கொள்கிறார். ஆனால் இவர்களது காதல் கைகூட, திருமணம் ஆகாத அக்கா மீரா வாசுதேவன் தடையாக இருக்கிறார். மீராவிற்கு திருமணம் ஆனால்தான் இவர்களது காதல் கல்யாணத்தில் முடியும் எனும் நிலை. இந்த விவகாரம் ஐதராபாத் ஐ.டி. ஆதித்யா அண்ணனுக்கும் தெரியவர, அது வரை கல்யாணமே கசந்த ஆதித்யா, தம்பிக்காக ரம்யாவின் அக்கா மீரா வாசுதேவனை கல்யாணம் கட்டிக் கொள்கிகிறார். அப்புறம் என்ன? ஷக்திக்கும் - ரம்யாவிற்கும் டும் டும் டும்... சுபம் நீங்கள் நினைத்தால் அதுதான் தப்பு. அப்புறம்? அப்புறம்தான் இருக்கிறது ஆட்டநாயகன் கதையே! அதாகப்பட்டது ஐதராபாத்தில் ஐடி கம்பெனி வைத்திருப்பதாக பெரிய தொழில்அதிபர் வேடம் போடும் ஆதித்யா, அங்கு பெரிய தாதாவாக இருக்கிறார். இது தம்பி ஷக்திக்கே ஆதித்யாவுக்கு மீராவை திருமணம் செய்து வைத்த பிறகுதான் தெரியவருகிறது. அதன் விளைவு... அப்பாவின் நம்பிக்கைக்குரிய அண்ணனை எதிரிகளிடம் இருந்தும், என்கவுண்டரில் போட்டுத்தள்ள இருக்கும் போலீசிடம் இருந்தும் காபந்து செய்ய ஐதராபாத்தில் ஆக்ஷனில் இறங்கும் ஷக்தி, வென்றாரா? தோற்றாரா? என்பதை ஆட்ட நாயகனின் மீதிக்கதை வித்தியாசமாகவும், விறுவறுப்பாகவும் சொல்கிறது.
ஷக்தி, முந்தைய படங்களைக் காட்டிலும் நடிப்பில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார். அப்பாக்களால் உதவாக்கரை என ஒதுக்கி வைக்கப்படும் பெரும்பாலான திறமைசாலி பிள்ளைகளை ஒவ்வொரு பிரேமிலும் பிரமாதமாக பிரதிபலிக்கிறார் பேஷ்! பேஷ்!
நாயகி ரம்யா நம்பீசன், தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான நடிகைகள் குறைந்து வரும் குறையை போக்க வந்தவர் போன்று ஜொலிக்கிறார். அக்காவை பெண் பார்க்க வந்து, பெண்ணை பிடிக்காது போகின்றவர்களிடம் அவர்கள் தின்ற பஜ்ஜி- சொஜ்ஜிக்கு பில் செட்டில் பண்ணச் சொல்லி போன் செய்வது செம காமெடி.
டபுள் மீனிங் இல்லாமல், சந்தானமும், லொள்ளுசபா ஜீவாவும் ஹீரோ ஷக்தியுடன் சேர்ந்து பண்ணும் காமெடிகள் தியேட்டரை கலகலக்க வைக்கிறது.
வில்லன் ஆதித்யா, ஷக்தியின் அண்ணனாக வந்து, தான் ஐ.டி., கம்பெனி வைக்காமல் தாதாவாக ஆனதற்கு காரணம் சொல்லும் ப்ளாஷ்பேக்... சினிமாவுக்கு வேண்டுமானால் ஒத்துவரலாம். நிஜத்தில்?! ஆனாலும் ஆதித்யா, தன்னாலும் இதுமாதிரி சவாலான பாத்திரங்களை செய்ய முடியும் என நிரூபித்து இருக்கிறார். சபாஷ். அவரை மாதிரி நாசர், மீரா வாசுதேவன், வில்லன் ரவி என எல்லோரும் நச் என்று நடித்துள்ளனர்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும், எஸ்.டி. விஜய் மில்டனின் ஒளிப்பதிவும் புதியவர் கிருஷ்ணராமின் இயக்கத்திற்கு வலு சேர்கின்றன. ஆந்தி போலீஸ் அதிகாரி, ஷக்தியின் பேச்சை கேட்டு என்கவுண்டரை நிறுத்துவதும், தம்பி சொன்னதும் ஆதித்யா தாதாயிசத்தை உடனடியாக விடுவதும் நம்ப முடியாத காமெடி என்றாலும் ஆட்ட நாயகன் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய அசத்தல் நாயகன்.