தினமலர் விமர்சனம் » மார்கழி 16
தினமலர் விமர்சனம்
"அலைகள் ஓய்வதில்லை", "பன்னீர் புஷ்பங்கள்", "வருஷம்-16", "இதயம்", "சேது", "காதல்", "கல்லூரி" உள்ளிட்ட படங்களின் வரிசையில் மாணவ பருவ காதலை மையமாக கொண்டு வெளிவந்திருக்கும் படம்தான் "மார்கழி-16".
வசதியான கிறிஸ்துவ பெண்ணுக்கும், ஏழை இந்து யைபனுக்குமிடையில் ஏற்படும் காதலும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் இப்படத்தின் கதை! நல்ல மனநிலையில் இருந்தபோது ஒன்று சேர முடியாத காதலர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் க்ளைமாக்ஸில் இணையும் காட்சிகளுக்காகவே அறிமுக இயக்குநர் கே.ஸ்டீபனை பாராட்டலாம்.
நாயகன் கதிராக புதுமுகம் ஜெயந்த் பாத்திரத்துடன் ஒன்றி நடித்திருக்கிறார். மாஜி ஹீரோ பானுசந்தரின் வாரிசுதானாம் இந்த ஜெயந்த். நிச்சயம் 16-அடி பாயும் குட்டி!
கதையின் நாயகி ஜெனியாக புதுமுகம் ஸ்ரீநிதி. வட்டமுகம், உருண்டு திரண்ட தேகம் என படம் பார்க்கும் பலதரப்பு ரசிகர்களின் பள்ளிப்பருவ காதலிகளை ஞாபகப்டுத்துகிறார். "சங்கர்குரு" ராஜா, கூத்துப்பட்டறை சந்திரா, ஸ்ரீனிவாஸ், செவ்வாளை, செல்வா, ஹீரோவின் நண்பர்கள் ஹீரோயின் சகோதரிகள் என எல்லோரும் பாத்திரம் அறிந்து நடித்திருக்கின்றனர்.
வி.லஷ்மிபதியின் ஒளிப்பதிவும், ஈ.கே.பாபியின் இசையும், கே.ஸ்டீபனின் எழுத்து இயக்கத்தில் "மார்கழி-16", ரசிகர்களுக்கு "மலரும்-16".