தினமலர் விமர்சனம்
அப்பாவி மாணவன் ஒருவன் அடப்பாவி ரக ஆசாமிகளை தீர்த்து கட்டி திகில் கிளப்புவதுதான் அப்பாவி படத்தின் மொத்த கதையும்!
கலெக்டர் அம்மாவுக்கும், ஆயுதத்தை தூக்காதே... ஐ.ஏ.எஸ். ஆபிஸராகி போராடு என எண்ணற்ற ஏழை மாணவர்களை கலேக்டர் ஆக்கிய ஆசிரியர் அப்பாவுக்கும் பிறந்த அப்பாவி மாணவன் பாரதி., அப்பாவின் கொள்கைகளுக்கும், அம்மாவின் அதிகார வரம்பிற்கும் கட்டுப்படாமல்ஆயுதைத்தை தூக்குகிறான்! அது ஏன்? எதற்கு என்பதை வித்தியாசமாக விளக்குகிறது அப்பாவி படத்தின் மீதிக் கதை!
சமூக அவலங்களை கண்டு வெகுண்டெழும் அப்பாவி மாணவன் பாரதி கேரக்டரில் கச்சிதமாய் பொருந்துகிறார் புதுமுகம் கவுதம். ஆனால் இவர் புதுமுகம் என்பதையும், ஒரு அப்பாவி மாணவனால் அத்தனை அடப்பாவிகளை கொலை செய்ய முடியும் என்பதையும் நம்ப முடியவில்லை என்பதுதான் பாரதி பாத்திரத்திற்கு மட்டுமல்ல... படத்திற்கும் பலவீனம். பாரதி - கவுதமின் காதலியாக கல்லூரி மாணவியாக கவர்ச்சி பதுமையாக கதாநாயகியாக வந்து போகிறார் சுஹானி. மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை சுஹானி பற்றி!
எண்ணற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உருவாக்கும் ராமசாமி ஆசிரியராக பிளாஷ்பேக்கில் சில காட்சிகளிலேயே வரும் கே.பாக்யராஜ், மகன் பாரதியின் மாற்றத்திற்கு காரணமாகி மறைவது உருக்கம். கலெக்டர் மணிமேகலையாக ஸ்ரீரஞ்சனி தாம் தூம் என்று தூள் பரத்துவதும், மகன் பாரதியிடம் திடீர் பாசம் காட்டுவதும் நடிப்பென்று தெரியும் வகையில் நடித்திருப்பது மைனஸ்! மகாதேவன், சூரி, சம்பத், கிருஷ்ணப்பா உள்ளிட்டவர்களும் படத்தில் இருக்கிறோம் எனும் அளவில் நடித்திருக்கின்றனர்.
நான் நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது ; நாம் என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும் எனும் முதல்வர் கருணாநிதியின் நல்வாசகத்தை, பீர் பிராந்தி, ஜின், ரம், நமீதா, தமன்னா உள்ளிட்ட மது - மாதுக்களுடன் ஒப்பிட்டு கொச்சைப்படுத்தியிருப்பது கருணாநிதியை பிடிக்காதவர்களுக்கு கூட பிடிக்காது. இயக்குனர் ஆர்.ரகுராஜுக்கு முதல்வர் மீது அப்படியென்ன கோபமோ?
கிருஷ்ணசாமியின் அழகிய ஒளிப்பதி, ஜோஸ்வா ஸ்ரீதரின் அதிரடி இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்களுடன் ஆர்.ரகுராஜின் எழுத்து, இயக்கத்தில் அப்பாவி - அடப்பாவி எனும் அளவில் இல்லாதது ஆறுதல்!