பில்லா பாண்டி - விமர்சனம்
நடிப்பு - ஆர்.கே. சுரேஷ், சாந்தினி, இந்துஜா, தம்பி ராமையா மற்றும் பலர்
இயக்கம் - ராஜ் சேதுபதி
இசை - இளையவன்
தயாரிப்பு - ஜேகே பிலிம் புரொடக்சன்ஸ்
வெளியான தேதி - 6 நவம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 20 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5
எம்கேடி, பியு சின்னப்பா, எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த் ஆகியோர் தமிழ் சினிமாவில் எத்தனையோ சாதனைகளை செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களையெல்லாம் வைத்து கொண்டாடக் கூடிய அளவிற்கு தமிழ் சினிமாவில் எந்தக் கதையும் வந்ததில்லை. தற்போதைய நடிகர்களில் அடுத்தடுத்து தோல்விகளைக் கொடுப்பவர்களைக் கூட பெரிய நடிகர்கள் என கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த 'பில்லா பாண்டி' படத்தில் நாயகனின் கதாபாத்திரத்தை அஜித்தின் ரசிகர் என உருவாக்கி படம் முழுவதுமே 'தல, தல, தல' என கூவிக் கொண்டேயிருக்கிறார்கள். இப்படி படம் எடுத்தால் 'சர்கார்' வந்த சமயத்தில் விஜய் ரசிகர்கள் எப்படி இந்தப் படத்தை வந்து பார்ப்பார்கள். ஆரம்பம் முதல் கடைசி வரை இது அஜித் புராணம் பாடும் ஒரு படம்.
அஜித்தின் தீவிர ரசிகர் ஆர்.கே.சுரேஷ். கட்டிட மேஸ்திரியாக வேலை பார்ப்பவர். அவரை முறைப் பெண் சாந்தினி காதலிக்கிறார். பக்கத்து ஊரில் கட்டிட வேலைக்குப் போகிறார் சுரேஷ். அந்த வீட்டுப் பேத்தியான இந்துஜா, சுரேஷைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். வீட்டு கிரகப் பிரவேசத்தன்று இந்துஜா, தான் சுரேஷைக் காதலிப்பதை வெளிப்படுத்துகிறார். ஆனால், சுரேஷ், இந்துஜாவைக் காதலிக்கவில்லை. அதன்பின் நடக்கும் ஒரு விபத்தில் இந்துஜா, பெற்றோரை இழக்கிறார். விபத்தில் இந்துஜா, ஏழு வயது குழந்தை மனநிலைக்குத் தள்ளப்படுகிறார். ஆதரவில்லாத, இந்துஜாவை தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார். அதனால், அவருக்கு ஊரில் பலத்த எதிர்ப்பு ஏற்படுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
வில்லனாகவே நடித்து வந்து சுரேஷ், நாயகனாக நடித்துள்ள படம். தன்னை கதாநாயகனாக ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகத்திலேயே, தன்னை அஜித் ரசிகர்களாவது ஏற்றுக் கொள்ளட்டும் என படத்தில் அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். எந்த வசனம் பேசினாலும், அதில் அஜித்தைப் பற்றி இணைத்துக் கொள்கிறார். அவருக்கு கை தட்டுகிறார்களோ இல்லையோ அஜித்தைப் பற்றிப் பேசுகிறார் என்பதற்காக கைதட்டலாம்.
சாந்தினி முதல் முறையாக கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறார். மாமன் மீது தீராக காதல் வைத்துள்ள வழக்கமான முறைப் பெண் கதாபாத்திரம். படத்தின் மற்றொரு கதாநாயகி இந்துஜா. தமிழ் சினிமாவில் இந்த மாதிரி ஏற்கெனவே கதாபாத்திரங்களைப் பார்த்துவிட்ட சலிப்பு.
படத்தின் கதை 'மூன்றாம் பிறை' படத்தை ஞாபகப்படுத்துகிறது. எந்த பெரிய திருப்பமும் இல்லாமல் சாதாரண திரைக்கதையாக நகர்கிறது. கிராமத்துக் கதைகள் என்றாலே கலகலப்பாக நகரும். இந்தப் படத்தில் தம்பி ராமையா கதாபாத்திரத்தை வைத்து இரட்டை அர்த்த நகைச்சுவையே சேர்த்து முகம் சுளிக்க வைத்துள்ளார்கள்.
இளையவன் இசையில் பாடல்கள் மிகச் சுமார் ரகம். கிராமம் என்றாலே பசுமையாகக் காட்டுவார்கள். இந்தப் படத்தில் சாதாரண தெருக்களில்தான் அதிக காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.
ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பாளராகவும், வில்லனாகவுமே தொடரலாம்.
பில்லா பாண்டி - பில்லா 2 பாண்டி