பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண், தனி ஆளாய் நின்று எப்படி குற்றவாளியை தண்டிக்கிறார் என்பது தான் மாத்தர் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ரவீணா டாண்டன் நடிப்பில் வெளியாகியுள்ள மாத்தர் படம் ரசிகர்களை உருக வைத்ததா...? என்று பார்ப்போம்.
வித்யா சவுகான் எனும் ரவீணா டாண்டன், பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரது மகள் தியா எனும் ஆலிஷா கான். பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு அம்மாவும், மகளும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் 7 பேர் கொண்ட ஒரு கும்பல் வித்யா மற்றும் தியாவை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். இதில் தியா கொல்லப்படுகிறார். வித்யா மட்டும் உயிர் பிழைக்கிறார். தனக்கு நீதி வேண்டியும், இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திய முதல்வரின் மகன் அபூர்வா மாலிக் எனும் மாதூர் மிட்டலை தண்டிக்க வேண்டியும் போலீஸ் கமிஷரிடம் முறையிடுகிறார். ஆனால் முதல்வரின் மகன் என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதுடன், வித்யாவை இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடும் படி அறிவுறுத்துகின்றனர். இதை ஏற்க மறுக்கும் வித்யா, தனி ஆளாக போராட களமிறங்குகிறார். குற்றவாளி அபூர்வாவுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா..? இல்லை அவரை பழிதீர்த்தாரா...? என்பது மாத்தர் படத்தின் மீதிக்கதை.
படத்தின் உயிரே ரவீணா தான். அவரைச்சுற்றி தான் மொத்த படமும் நகருகிறது. மொத்த கதையையும் தனி ஆளாக தோளில் சுமந்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடூரத்தை வெளிப்படுத்தும் இடங்களிலாகட்டும், குற்றவாளியை பழிதீர்க்க துடிக்கும் இடங்களிலாகட்டும், அவ்வளவு இயல்பாக யதார்த்தமாக நடித்திருக்கிறார்.
அம்மாவையும், மகளையும் பலாத்காரம் செய்யும் கொடூர வில்லனாக மிரட்டியிருக்கிறார் அபூர்வா மாலிக்கான மாதூர் மிட்டல். இவரைப்போலவே படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்களான திவ்யா, அனுராக் அரோரா, ருசாத் ராணா உள்ளிட்டவர்களும் தங்கள் ரோலை சிறப்பாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாம் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்தாலும், படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு பாடலும் எரிச்சலை உண்டாக்குகிறது.
மாத்தர் படத்தை அஸ்தர் சையத் இயக்கியிருக்கிறார். ஒரு உணர்வுப்பூர்வமான கதையை துல்லியமாக இயக்க தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம் படம் மிக மெதுவாக நகருவது தான். இருந்தாலும் பின்பாதியை சற்று விறுவிறுப்பாக்கி ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலை தந்துள்ளார் இயக்குநர். ஏற்கனவே நிறைய படங்களில் பார்த்து பழகிய கதை என்பதாலும், ஏகப்பட்ட லாஜிக் மீறல்களாலும் மாத்தர் பெரிதாக ஜொலிக்கவில்லை என்பதே உண்மை.
மொத்தத்தில் "மாத்தர் - ரவீணாவின் ஒன் மேன் சாரி வுமன் ஷோ"