வயிற்று பிழைப்புக்காக நடனம் ஆடும் ஒரு பெண்ணின் வாழ்க்கை பயணம் தான் ‛அனார்கலி ஆப் ஆரா'. ஸ்வரா பாஸ்கர் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களை நடனமாட வைத்ததா...?, இல்லை வலியை தந்ததா...? என்று பார்ப்போம்...!
கதைப்படி, பீகார் மாநிலம் ஆரா எனும் ஊரில் வயிற்று பிழைப்புக்காக கொஞ்சம் கவர்ச்சியாக ஆடி சம்பாதிப்பவர் அனார்கலி எனும் ஸ்வரா பாஸ்கர். ஒருநாள் ஒரு நிகழ்ச்சியில் ஸ்வரா ஆடும்போது, தனியார் கல்லூரி ஒன்றில் தாளாளராக இருக்கும் தர்மேந்திரா சவுகான் எனும் சஞ்சய் மிஸ்ரா, குடிபோதையில் ஸ்வராவிடம் தவறாக நடக்க முயல, கோபத்தில் சஞ்சய் மிஸ்ராவை அடித்து விடுகிறார். நாலு பேருக்கு மத்தியில் தன்னை அடித்ததை அவமானமாக கருதும் சஞ்சய் மிஸ்ரா, ஸ்வரா பாஸ்கரை எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் என்று வெறியோடு திரிகிறார். ஸ்வராவை, சஞ்சய் பழி தீர்த்தாரா, சஞ்சயின் வலையில் இருந்து தன்னை ஸ்வரா தற்காத்து கொண்டாரா...? என்பது படத்தின் மீதிக்கதை.
ஸ்வரா பாஸ்கர், நடனக்காரியாக தன் ரோலை சிறப்பாக செய்திருக்கிறார். சஞ்சய் மிஸ்ரா, தன்னாலும் வில்லனாக நடிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். இவர்களை போலவே பங்கஜ் திரிபாதியும் சொல்லிக்கொள்ளும் படி நடித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் அவினாஷ் தாஸ் அனார்கலி ஆப் ஆரா படத்தை இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்து ரசிகர்களை குறிவைத்து படத்தை இயக்கியிருக்கிறார் அவினாஷ் தாஸ். இடைவேளைக்கு முன்பு வரை சிறப்பாக இயக்கியிருக்கிறார் அவினாஷ். ஆனால், இடைவேளைக்கு பிறகு கதையின் ஓட்டம் மெதுவாக நகருவதும், திரைக்கதை விறுவிறுப்பாக இல்லாததும் பலவீனம். இசை சூப்பர் என்றளவுக்கு இல்லாவிட்டாலும் மோசம் என்று சொல்லும்படி இல்லை. இசையை போன்றே ஒளிப்பதிவு, படத்தொகுப்பும் ஓ.கே., என்ற அளவில் இருக்கிறது.
நாலு பேருக்கு மத்தியில் நடனம் ஆடுபவர் என்பதற்காக, அந்த பெண்ணை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்க கூடாது, பெண்களை மதிக்க வேண்டும் எனும் செய்தியோடு வெளிவந்திருக்கும் ‛அனார்கலி ஆப் ஆரா' படத்தை ஒருமுறை பார்க்கலாம், ரசிக்கலாம்.
மொத்தத்தில், ‛அனார்கலி ஆப் ஆரா - கிராமத்து பிங்க்'