‛என்.ஹெச்.10' படத்தை தொடர்ந்து நடிகை அனுஷ்கா சர்மா நடித்து, தயாரித்து வெளியாகியுள்ள ரொமான்ட்டிக் படம் தான் ‛பில்வுரி'. கூடவே ஒரு பேயையும் படத்தில் காண்பித்து அதை காமெடியாக சொல்ல முயற்சித்திருக்கின்றனர். இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா...? என்று இனி பார்ப்போம்.
கதைப்படி, கனடாவில் இருந்து தன் பால்ய சிநேகிதி அனு எனும் மெஹ்ராவை கரம் பிடிக்க இந்தியா வருகிறார் கண்ணன் எனும் சுராஜ் சர்மா. ஆனால் அவருக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதால் அதை கழிப்பதற்காக ஒரு மரத்திற்கு தாலி கட்டும் சடங்குகள் நடக்கிறது. இந்த மரத்தில் தான் சாஷி எனும் அனுஷ்கா சர்மா, பேயாக இருக்கிறார். இது தெரியாமல் அந்த மரத்திற்கு தாலி கட்டுகிறார் கண்ணா. இதனால் அனுஷ்கா, சுராஜின் முதல் மனைவியாக பேயாகவே வந்து சுராஜின் பின்னாலேயே திரிகிறார். இதனால் பேயிடமிருந்து தப்பிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கிறார். அனுஷ்கா எதனால் பேயாக மாறினார் என்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிளாஷ்பேக் பஞ்சாப்பில் விரிகிறது. பஞ்சாப்பில் பில்வுரி எனும் ஊரில் பாடகராக இருக்கிறார் ரூப் சிங் பில்வுரி எனும் தில்ஜித் தோஸ்னா. இதே ஊரில் வாழும் சாஷி - அனுஷ்கா, தில்ஜித் மீது காதல் கொள்ள இருவரும் காதலிக்கின்றனர். இந்த விஷயம் அனுஷ்காவின் குடும்பத்திற்கு தெரியவர எதிர்ப்பு கிளம்புகிறது. அதன்பின் என்ன நடந்தது, அனுஷ்கா-தில்ஜித் காதல் கை கூடியதா, அனுஷ்கா எதனால் பேயாக மாறினார், சுராஜ் சர்மாவை விட்டு அனுஷ்கா விலகினாரா, மெஹ்ராவை, சுராஜ் கரம் பிடித்தாரா...? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ரொமான்ட்டிக் உடன், பேய்யின் கலாட்டாக்களையும் காமெடியாக கலந்து விடையளிக்கிறது ‛பில்வுரி' படத்தின் மீதிக்கதை.
ஹீரோயினாக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருப்பதால் என்னவோ நடிப்பிலும் சிக்கனம் காட்டியிருக்கிறார் அனுஷ்கா. பிளாஷ்பேக்கில் வரும் அனுஷ்காவின் நடிப்பில் பெரிய குறையொன்றுமில்லை, அழகாக தோன்றுகிறார், ஆனால் பேய் கதாபாத்திரத்தில் வரும் அவரது நடிப்பு சுத்தமாக எடுபடவில்லை.
கொஞ்சம் காட்சிகளிலே வந்தாலும் தில்ஜித் மனதில் ஒட்டிக் கொள்கிறார். இவரைப்போலவே சுராஜ் சர்மாவும் நடிப்பில் மட்டுமல்லாது காமெடியிலும் ரசிகர்களை மகிழ்விக்கிறார். சுராஜின் காதலியாக வரும் அறிமுக நடிகை மெஹ்ராவின் நடிப்பு ஓகே., என்ற அளவில் தான் உள்ளது.
ராஜஸ்தானின் எழில் மிகுந்த இடங்களை அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். சாஸ்வத் சஜ்தேவ், ஜஸ்லீன் ராயல் என இரண்டு பேர் இசையமைத்திருந்தாலும் பாடல்கள் சுக ராகங்களாக இல்லை.
அன்சாய் லால் என்ற அறிமுக இயக்குநர் தான் பில்வுரி படத்தை இயக்கியுள்ளார். அறிமுக படம் என்பதாலோ என்னவோ, ஒரே நேரத்தில் இரண்டு காலக்கட்ட கதையை கொடுக்க நினைத்து அதில் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார். படத்தின் முதல்பாதியை சிறப்பாக இயக்கியுள்ளார், ஆனால் இரண்டாம் பாதியில் கதையின் ஓட்டத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல தவறிவிட்டார். இனி வரும் படங்களில் இதை சரி செய்வார் என நம்பலாம். அந்த நம்பிக்கையுடனேயே ‛பில்வுரி' படத்தை ஒருமுறை வேண்டுமானால் பார்க்கலாம்.