"கோலி சோடா" விஜய் மில்டன் எஸ்.டி இயக்கத்தில், "காதல்" பரத், சுபிக்ஷா, ராஜகுமாரன், ராதிகா பிரசிதா, பரத் சீனி, ஏ.வெங்கடேஷ், தயா வெங்கட்... உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, பரத் சீனியின் ரப் நோட் பட நிறுவனம் தயாரித்து வழங்க, நடிகர் சூர்யாவின் "2 டி" என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியீடு செய்திருக்கும் படம் தான் "கடுகு".
கதைப்படி, நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி காவல் நிலையத்திற்கு போலீஸ் ‛இன்ஸ் ஆக வேறு பகுதியிலிருந்து மாற்றலாகி வரும் சூர்ய பிரகாஷ் எனும் ஏ.வெங்கடேஷ் கூடவே தன் எடுபிடி புலி ஆட்டம் தெரிந்த புலி ஜெ.பாண்டி எனும் ராஜகுமாரனையும் கூட்டி வருகிறார். வந்த இடத்தில் ஊர் பெரும் புள்ளியும், இளம் அரசியல்வாதியும், பாக்ஸிங் வீரருமான நம்பி எனும் பரத்தை பகைத்துக் கொள்ளாது வாழும் ‛இன்ஸ் ஏ.வெங்கடேஷ், ஒரு 14 வயது சிறுமிக்கு இழைக்கப்படும் அநீதிக்கு, எதிராக, எடுபிடி புலிப்பாண்டியின் பேச்சைக் கேட்டு பரத்தை எதிர்க்கிறார். அதன் விளைவால் எழும் பரத்தின் பாய்ச்சலால், ‛இன்ஸ் வெங்கடேஷ், டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு ஓட வேண்டிய நிலை. அதனால் அவர் ஓட்டம் எடுக்கிறார். புலிப்பாண்டி - ராஜகுமாரன், அந்த ஊர் ஸ்டேஷன் எடுபிடி பெட்டி கேஸ் அனிரூத் - பரத் சீனியையும், ஸ்கூல் டீச்சரும் , தன் பேஸ்புக் காதலியுமான எவி எனும் ராதிகா பிரசிதாவையும் சேர்த்துக் கொண்டு பரத்துக்கு எதிராக எவ்வாறு? புலிப் பாய்ச்சல் காட்டி வெற்றி பெறுகிறார்..? என்பதுடன் கொஞ்சம் காதல், கொஞ்சம் அரசியல், நிறைய யதார்த்தம்... எல்லாம் கலந்து கட்டி, கொஞ்சம் சமூகத்திற்கு மெஸேஜூம் சொல்லி, வந்திருக்கும் படம் தான் "கடுகு."
இளம் அரசியல்வாதியும் பாக்ஸிங் வீரருமாக நம்பி எனும் பாத்திரத்தில் பரத் வில்லானிக் ஹீரோவாக வாழ்ந்திருக்கிறார்.
புலி ஆட்டம் தெரிந்த போலீஸ் எடுபிடியாக புலி ஜெ.பாண்டியாக, ஹீரோவாக ராஜகுமாரன் வாழ முயற்சித்து நிறைய ஹோம் ஒர்க்குகளுடன் போராடிருக்கிறார். வாழ்த்துக்கள்.
இவர்கள் இருவர் போன்றே பெட்டி கேஸ் அனிருத்தாக இப்படத் தயாரிப்பாளர் பரத் சீனியும் கச்சிதம்.
பரத் - பரத் சீனியின் காதலி மேகாவாக வரும் சுபிக்ஷாவிற்கு படத்தில் நிறைய வேலை இல்லை, என்றாலும் சுபிட்சமாக ரசிகனை கவருகிறார்.
எவி டீச்சராக டிராஜிடி மும்பை பிளாஷ்பேக்குடன் ராஜகுமாரனின் பேஸ்புக் காதலி ராதிகா பிரசிதாவிற்கு நடிக்க நிறைய வாய்ப்பு. அம்மணியும் செமயாய் ஸ்கோர் செய்திருக்கிறார் கீப் இட் அப்.
பள்ளிக்கூடம் தானே இப்படி காத்தாட உச்சா போயிட்டு வாரேன் எனப் போயி, வி.ஜ.பி.யாக வந்த இடத்தில், கலை நிகழ்ச்சிக்காக மான் வேடம் போட்டு நிற்கும் சிறுமியை வேட்டையாட பாயும் மந்திரி துரைக்கண்ணுவாக தயா வெங்கட், அரசியல்வாதிகள் பலரின் நிஜ முகத்தை பிரதிபலித்திருக்கிறார்.
சிறுமி கீர்த்தியாக வரும் சக்தி, இன்ஸ் - ஏ.வெங்கடேஷ், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, கோவை உமா உள்ளிட்டோரும் தங்கள் பாத்திரத்திற்கு பலம் சேர்த்து படத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கின்றனர்.
"நிலவது கரையெது....", "கடுகளவு..." ஆகிய இரண்டே பாடல்களில் ரசிகனின் கவனம் ஈர்க்கிறார்., இளம் இசையாளர் அருணகிரி எஸ்.என்.என்றால், மற்றொரு இசையமைப்பாளர் அனூப் சீலின் தனது பின்னணி இசையாலும் அதை செய்கிறார்.
ஜான் ஆபிரகாமின் படத்தொகுப்பில் பெரிய குறையொன்றுமில்லை .
விஜய் மில்டன் எஸ்.டி.யின் எழுத்து, ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில், "புலி இனமே அழிந்து வருகிறது.... இந்தியாவுல இப்போதைக்கு 3500 புலிகள் தான் இருக்கு..." என்பது உள்ளிட்ட தகவல்களில் தொடங்கி, "உன்னை மாட்டிவிடறதை விட, மாத்தி விடுறது தான்... என் நோக்கம்", "நாலு பேர் நம்மை எப்படி பார்க்கிறாங்க என்பது முக்கியமல்ல ... கண்ணாடி முன் நின்று நாம நம்மள என்னவா பார்க்கிறோம்..... என்பது தான் முக்கியம்." என்பது உள்ளிட்ட நெஞ்சை டச் செய்யும் "பன்ச்"கள், படம் முடிந்து வெளிவந்த பின்பும் யோசிக்க வைப்பதும், கதை நடைபெறும் தரங்கம்பாடி டச்சு கோட்டை, கொத்தளங்களுடன் கூடிய அழகிய கடற்கரை பின்னணி... உள்ளிட்டவைகளும் "கடுகு" படத்திற்கு பெரிய பலம் சேர்கின்றன.
அதே நேரம், மேற்படி, தத்துவ, வித்துவ, தகவல்களை எல்லாம் புலி வேஷம் கட்டும் சாமான்ய ராஜகுமாரன் பேசுவதும், அவருக்கு பேஸ்புக், ஒய் - பை எல்லாம் தெரிந்திருப்பதும் நம்ப முடியாத ஹம்பக் ஆக தெரிவதும், அவரது டயலாக் மாடுலேஷனும் சற்றே பலவீனமாகத் தெரிகிறது.
ஆனாலும், "கடுகு - சற்று காரம் குறைவு தான்!"