அஜய், அபிநயா, பேபி சாதன்யா, கிஷோர், ருது, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடிக்க, மைக்கேல்அருண் இயக்கத்தில், மிராக்கிள் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையையும், பாதிக்கப்படும் குழந்தையின் மனதையும், நெஞ்சை உறையச் செய்யும் அளவிற்கு உரக்கச் சொல்லியிருக்கும் படம் தான் "நிசப்தம்".
காதல் மணம் புரிந்த பெங்களுரூ மிடில் கிளாஸ் அஜய் - அபிநயா தம்பதியின் ஒற்றை மகள் எட்டு வயதே நிரம்பிய சாதன்யா. ஒரு அடை மழை நாளில் பள்ளிச் செல்லும் அந்த சிறுமியை குளிர் தாங்க முடியவில்லை... உன் குடையில் நானும் வருகிறேன் என ஒரு குடிகார கொடூரன் ஒதுக்குப் புறமான இடத்திற்கு அழைத்துப் போய் பாலியல் பலவந்தம் செய்து, அந்த பிஞ்சை குற்றுயிரும் கொலை உயிருமாக விட்டு செல்கிறான். அப்பாவே என்றாலும் ஆண்களைக் கண்டால் அய்யோ அம்மா.. என அலறும் நிலைக்குத் தள்ளப்படும் சாதன்யா அந்த துயரத்தில் இருந்து மீண்டாரா? அவர் மீள மருத்துவமும், தாய் தந்தையின் பாசமும் எப்படி பாடுபடுகிறது? குற்றவாளிக்கு நம் இந்திய சட்டத்தில் என்ன மாதிரி தண்டனை கிடைக்கிறது...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு காண்போர் இதயம் கண்ணீர் விடுமளவிற்கு வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது நிசப்தம் படத்தின் மீதிக் கதை.
பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமியின் மனநிலையை சிறுமி சாதன்யா, அந்த கதாபாத்திரமாகவே மாறி கேரக்டரை உள்வாங்கி மிகச்சரியாக செய்திருக்கிறார் எனலாம். சாதன்யாவுடைய பிஞ்சு நடிப்பில் நல் முதிர்ச்சிதெரிகிறது. படத்தின் நாயகியே இவர் தான் என்றால் மிகையல்ல. சாதன்யாவும், அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். அதிலும், க்ளைமாக்ஸில், கொடூரனை கோர்ட்டில் கொலை செய்ய ஓடும் தன் அப்பாவை தடுத்து "அப்பா வேணாம்பா நீங்க வேணும் பா ... நீங்க இருந்தா போதும்ப்பா.." எனும் காட்சிகளில் காண்போரை உருக்கி, உலுக்கி எடுத்து, விடுகிறார் சிறுமி சாதன்யா. சிறுமிக்கு பாராட்டுக்கள்.
சிறுமியின் தந்தையாக நாயகன் அஜய், முதல் பாதியில் முழுமையான நடிப்பை வெளிப்படுத்தமுடியாத அளவுக்கு தவித்திருப்பது தெரிகிறது. ஆனால், தனது குழந்தை பாலியல் துன்பத்துக்கு ஆளான பிறகு, ஒரு தந்தையாக அக்குழந்தையை சகஜ நிலைக்கு கொண்டு வர அஜய், எடுக்கும் பெராரே பொம்மை உள்ளிட்ட முயற்சிகள் எல்லாம் பார்ப்பவர்களை கண்கலங்கவைக்கிறது. ஒரு குழந்தைக்கு அப்பாவாக தனது நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்... என்பது படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
படத்தில் எட்டுவயது சிறுமியின் தாயாக வலம் வரும், அபினயா., தனது திறமையான நடிப்பால் ஒரு பாதிக்கப் பட்ட சிறுமியின்தாயாக பதற வைத்திருக்கிறார்.
உதவி ஆணையராக வரும் கிஷோர்,நேர்மையான போலீஸ் அதிகாரியாக மிடுக்கு காட்டியிருக்கிறார். இவருடைய திறமையான நடிப்புக்கு இந்தப்படத்தில் , அவ்வளவு சரியான வாய்ப்பு இல்லை என்றாலும் இப்படி ஒரு விழிப்புணர்வு படத்தில் நடித்தமைக்காக கிஷோர் , காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். .
சிறுமியின் மனநிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் தெரப்பிஸ்ட்டாக வரும் ருது வின் பாத்திரமும் அதில் அவரது பங்களிப்பும் கச்சிதம்.
சிறுமிக்காக வாதாடும் வக்கீலாக வரும் ஏ.வெங்கடேஷ், நாயகனுடைய நண்பராக வரும் பழனி மற்றும் அவருடையமனைவியாக வரும் ஹம்சா உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து , ஆடியன்ஸை கவருகிறார்கள்.
எஸ்.ஜே.ஸ்டாரின் ஒளிப்பதிவில் ஒரு குறையுமில்லை. ஷவான் ஜசிலின் பின்னணி இசை கதையின்ஓட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்திருப்பது சிறப்பு.
இப்போது இது போன்ற பாலியல் வன்முறைகள் தமிழகத்திலும் தலைதூக்கியிருக்கும் வேளையில், இயக்குனர் மைக்கேல் அருண் பெங்களூருவில் சில வருடங்களுக்கு முன் நடந்த சில சம்பவங்களை வைத்து , இந்த படத்தை எடுத்திருக்கிறார் .இந்த மாதிரியான சம்பவங்கள் யாருக்குவேண்டுமானாலும் நடக்கலாம். ஆகையால், இது நடக்காமல் இருப்பதற்கு நாம் தான் நம்முடைய குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தைவலியுறுத்தியும், அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தபிறகு, அந்தசிறுமிக்கும், குடும்பத்துக்கும் ஏற்படும் கஷ்டங்களையும் இந்தபடத்தில் மிக ஆழமாக பதிவுசெய்திருக்கிறார்.... இயக்குனர் மைக்கேல் அருண் .இந்த பதிவினால் படம் பார்ப்பவர்களுக்கு தங்களுடைய குழந்தைகள் மீதுள்ள அக்கறையும் ,பாதுகாப்பும் மேலும் அதிகரிக்கும் என்பது நிதர்சனம். அதற்காக டைரக்டருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப்சொல்லியே ஆக வேண்டும்.
ஆகமொத்தத்தில் 'நிசப்தம்' - அனைவரும் குடும்பத்தோடு காண வேண்டிய சகாப்தம்!"