நடிகர்கள் ; குணால் கபூர், ஷிவஜித் நம்பியார், ஹிமர்ஷா வெங்கடசாமி, டிவினா தாக்கூர் மற்றும் பலர். கதை : ஷேக்ஸ்பியரின் மெக்பத் நாடகத்தின் தழுவல் ,இசை ; ஜெப் ரோனா
ஒளிப்பதிவு ; எஸ்.குமார்
டைரக்சன் ; ஜெயராஜ்
போர் ஸ்டூடண்ட்ஸ் படம் மூலம் தமிழிலும் பிரபலமான மலையாள இயக்குனர் ஜெயராஜ் இயக்கத்தில் மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாகியுள்ள படம் தான் வீரம்.ஒருநாட்டின் அரசாளும் பதவிக்கு அடுத்ததாக வரவிருக்கிறான் ஒரு வீர இளைஞன், அவனது வீரத்தில் காமமும் துரோகமும் கலந்ததால் என்ன நடந்தது - இதுதான் வீரம் படத்தின் கதை.
சாதாரண படைவீரனாக இருப்பவர்கள் சந்து சேகவர் (குணால் கபூர்) மற்றும் ஆரோமல் சேகவர்.. இருவருக்குமே அடுத்ததாக நாடாளும் உரிமை இருந்தாலும் மகாசக்தியின் வாக்குப்படி சந்துவுக்கு முதலிலும் அவருக்கு பின்னால் ஆரோமல் சேகவரின் மகனுக்கும் தான் முடிசூட்டும் பாக்கியம் இருப்பதாக தெரியவருகிறது.
வாக்குப்படியே சிறிய படைப்பிரிவின் தலைவன்,, சேனாதிபதி என படிப்படியாக பதவிகள் சந்துவை தேடி வருகின்றன. இந்தநிலையில் ஆரோமல் சேகவரின் எதிரியான அறிங்கோடர் சேகவர் அவரை வீழ்த்த நினைக்கிறார்.. இருவருக்கும் நடைபெறும் சண்டையில் அறிங்கோடர் கொல்லப்படுகிறார். அவரது சாவுக்கு பழிவாங்க துடிக்கும் அவரது முறைப்பெண் இதற்காக சந்துவை காதல் (காம) வலையில் மயக்கி ஆரோமல் சேகவரை கொல்ல வைக்கிறாள்..
இப்போது சந்தேகம் தனது பக்கம் திரும்பும் என்பதால், சந்தேகப்படும் நபர்களை வேறு வழியின்றி தானே தீர்த்துக்கட்டும் முடிவுக்கு தள்ளப்படுகிறான் சந்து. பின்னர் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களால், விதிப்படி சந்து சேகவரால் நாடாளும் பதவியை பிடிக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
பாலிவுட் நடிகர்தான் என்றாலும் சந்து சேகவர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார் குணால் கபூர்.. வீரத்துடன் வாள் சண்டை இடும் காட்சியாகட்டும் நாயகியுடன் காமரசத்துடன் சண்டை இடும் காட்சியாகட்டும் இரண்டிலுமே வீரத்தையும் வேகத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார் குணால் கபூர்.
காமவலை வீசி தனது சபதம் முடிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராகும் பாத்திரத்தில் டிவினா தாக்கூர் நம்மை விழிகள் விரிய வைக்கிறார். சந்துவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள மைய கதாபாத்திரங்களும் நடக்கும் வரலாற்று நிகழ்வுகளை இம்மி பிசகாமல் தங்களது நடிப்பால் திரையில் கொண்டுவந்துள்ளார்கள்..அரண்மனை, ஆடை அணிகலன்கள் மற்றும் பலத்தை நிரூபிக்கும் களரி சண்டை என அச்சு அசலாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ். அவரின் தேவையறிந்து கூடவே பயணித்துள்ளார் ஒளிப்பதிவாளர் எஸ்.குமார்.. குறிப்பாக களரி சண்டை.. அதிலும் குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி..
இந்தப்படத்தின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் யாரை நாயகன் நாயகி என நினைக்கிறோமோ அவர்களே வில்லனும் வில்லியும் ஆவதுதான். தனது திருப்திக்காக மட்டுமே இந்தப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஜெயராஜ் விருதை குறிவைத்துள்ளாரே தவிர சாதாரண ரசிகர்களை மனதில் கொள்ள தவறிவிட்டார் என்றே சொல்ல தோன்றுகிறது.
வெகுஜன ரசிகர்களை இந்தப்படம் ரசிக்க வைக்குமா என்றால் அது சந்தேகம் தான்..