இரண்டாம் உலகப்போரின் பின்னணியோடு, ஒரு முக்கோண காதல் கதையையும் கலந்துகட்டி, அதில் சைப் அலிகான், சாகித் கபூர், கங்கனா மூவரும் நடித்து, விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் ‛ரங்கூன். ரங்கூன் ரசிகர்களின் மனதில் நங்கூரமாய் அமர்ந்ததா...? என்று இனி பார்ப்போம்...!
கதைப்படி, ஜூலியா எனும் கங்கனா, ருசி பில்லிமோரியா எனும் சைப் அலிகானின் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்கிறார். இருவருக்கும் காதல் பிறக்கிறது, ஆனால் அந்த காதல் உண்மையானதாக இல்லை. மற்றொருபுறம் இரண்டாம் உலகப்போர் நடக்கிறது. இதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஐஎன்ஏ., படையில் வீரராக இருக்கிறார் நவாப் மாலிக் எனும் சாகித் கபூர். நவாப்பால் ஈர்க்கப்பட்ட ஜூலியா, அவர் மீது காதல் கொள்கிறார். இந்த முக்கோண காதல் கதையில் யார், யாரோடு இணைந்தார்கள் என்பதோடு, இரண்டாம் உலகப்போரையும் கலந்துகட்டி விடையளிக்கிறது ‛ரங்கூன் படத்தின் மீதிக்கதை.
இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும் படம் முழுக்க கங்கனா தான் மனதில் நிற்கிறார். அவரின் துறுதுறு, குறும்புத்தனம், காதல்காட்சிகள் எல்லாவற்றிலும் ரசிகனின் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.
சாகித் கபூர், ராணுவ வீரராக அசத்தலாக தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
தானும் இந்தப்படத்தில் ஒரு ஹீரோவாக நடித்திருக்கிறேன் என்று சொல்லும் அளவில் தான் இருக்கிறது சைப் அலிகான் நடிப்பும்.
பங்கஜ் குமாரின் ஒளிப்பதிவு ரம்மியம், கண்களுக்கு இதம். படத்தொகுப்பும் பக்கா தொகுப்பாக இருக்கிறது. இயக்கம் மட்டுமல்ல இசையையும் சேர்த்து கவனித்துள்ள விஷால் பரத்வாஜ், ரசிகர்கள் மனதில் இதம் சேர்க்கும் வகையில் பாடல்களை கொடுக்கவில்லை என்பதே உண்மை.
இரண்டாம் உலகப்போர், அதில் ஒரு முக்கோண காதல் கதை... என வித்தியாசமான கதைக்களத்தை கொடுக்க முற்பட்டிருக்கிறார் இயக்குநர் விஷால். ஆனால், அதை ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கொடுக்கவில்லை. ஒருமாதிரி குழப்பி, எங்கெங்கோ தொட்டு எப்படியோ முடித்திருக்கிறார். முன்பாதி விறுவிறுப்பாக செல்கிறது, ஆனால் படத்தின் பின்பாதி நீளமாகவும், எந்த விறுவிறுப்பும், டுவிஸ்ட்டும் இல்லாமல் ரசிகனை போரடிக்கவும் செய்கிறது.
விஷால் பரத்வாஜின் இயக்கத்தில் ‛காமினி, ‛ஹைடர் போன்ற படங்களை பார்த்த ரசிகர்களுக்கு ‛ரங்கூன் நிச்சயம் ஏமாற்றமே!