காமெடிக்கு புகழ்பெற்ற நடிகர் அர்ஷத் வர்ஷி, கொஞ்சம் சீரியஸான படத்தில் நடித்து வெளியாகிருக்கும் படம் ‛இரதா‛. கூடவே ஒரு விழிப்புணர்வு படமாகவும் வந்திருக்கும் இந்த இரதா ரசிகர்களை ஈர்த்ததா...? என்று இனி பார்ப்போம்...!
ஓய்வுப்பெற்ற ராணுவ அதிகாரியான பிரபஜித் வாலியா எனும் நஸ்ரூதின் ஷா, தன் மகள் ரியா எனும் ருமணாவுடன் பஞ்சாப்பில் வசித்து வருகிறார். இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகே சேகர் கேல்கர் நடத்தும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதிலிருந்து வெளியேறும் நச்சு கழிவுகள் குடிநீரில் கலப்பதால் அந்த ஊர் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில் நஸ்ரூதின் மகளும் ரியாவும் பாதிக்கிறார். ஒருநாள் இந்த தொழிற்சாலையில் பெரிய விபத்து நடக்கிறது. அதில் ஏராளமான பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரிக்க அதிகாரியாக அர்ஜூன் மிஸ்ரா எனும் அர்ஷத் வர்ஷி வருகிறார். கூடவே இதை புலனாய்வு செய்யும் பத்திரிகையாளராக சிமி எனும் சாகாரியாவும் களமிறங்குகிறார். விபத்து எப்படி நடந்தது, விபத்துக்கான காரணம் என்ன.?, அந்த ஊர் மக்களுக்கு நியாயம் கிடைத்ததா...? என்பது இரதா படத்தின் மீதிக்கதை.
பிரபஜித்தாக வரும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி நஸ்ரூதின் ஷா, சொல்லவே வேண்டாம், அவ்வளவு அருமையாக நடித்திருக்கிறார்.
விசாரணை அதிகாரியாக வரும் அர்ஷத் வர்சி, காமெடி மட்டுமல்ல தன்னால் எப்படிப்பட்டட ரோலிலும் நடிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.
திவ்யா தத்தா, சகாரியா காக்தே, சரத் கேல்கர் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
ஒரு நல்ல விழிப்புணர்வு மற்றும் சமூகத்திற்கு தேவையான கதையை அருமையாக இயக்கி இருக்கிறார் அபர்ணா சிங். அதிலும், வசனங்கள் தெறிக்கிறது. அதேசமயம் படத்தின் முதல்பாதி விறுவிறுப்பாக செல்கிறது, இரண்டாம்பாகம் சற்றே தொய்வையும், அடுத்தடுத்து என்ன நிகழப்போகிறது என்பதை முன்கூட்டிய அறியும் திரைக்கதையும் பலவீனம்.
அபர்ணாவின் எழுத்து - இயக்கத்திற்கு ஒளிப்பதிவு, படத்தொகுப்பும் பக்காவாக பொருந்தி இருக்கின்றன. ஆனால் இசை தான் சுமார் என்ற அளவில் இருக்கிறது.
கமர்ஷியல் படங்களையும், மசாலா படங்களையும் விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் பிடிக்காது. அதேசமயம், ஒரு நல்ல விழிப்புணர்வு மற்றும் சமூகத்திற்கு தேவையான செய்தியையும் சொல்லியிருக்கும் இரதா படத்தை அனைவரும் பார்க்கலாம், ரசிக்கலாம்! வசூல் கல்லா கட்டுமா...? அது ரசிகர்கள் கையில் தான் உள்ளது.