நடிகர்கள் ; ஜெயசூர்யா, பிரயாகா மார்ட்டின், சித்திக், லால், அனு சித்தாரா
டைரக்சன் ; சித்திக்
மம்முட்டி, நயன்தாரா நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை தொடர்ந்து சித்திக் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் ஃபுக்ரி..
அனாதையான ஜெயசூர்யாவுக்கு நண்பர்கள் மட்டுமே உலகம். கிராமத்தில் ஒரு சிக்கலில் மாட்டி, தப்பித்து டவுனுக்கு வரும் ஜெயசூர்யா, நண்பர்களுடன் சேர்ந்து சின்னசின்ன சீட்டிங் வேலைகளில் ஈடுபடுகிறார்.. ஒருமுறை கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு செல்லும் முஸ்லீம் பெரியவர் ஃபுக்ரியின் குடும்பத்து பெண்ணான பிரயாகாவை, கல்லூரி முதல்வர் சஸ்பென்ட் செய்வதில் இருந்து சாமர்த்தியமாக காப்பாற்றுகிறார் ஜெயசூர்யா.. அப்போது தன்னை தேடி அங்கே வரும் தனது மாமன் மகனிடம் இருந்து ஜெயசூர்யாவை காப்பாற்ற, தமது குடும்பத்தில் இருந்து எப்போதோ ஓடிப்போன தனது மாமன் லாலுடைய மகன் என அறிமுகப்படுத்துகிறார்.
அப்போது முதல் பிரயாகா மீது காதலாகிறார் ஜெயசூர்யா.. அந்த சமயத்தில் லாலின் உண்மையான வாரிசான அவரது ஒரே மகள் அனு சித்தாரா, பல வருடங்களாக பிரிந்து இருக்கும் தனது தந்தையையும் தாத்தா ஃபுக்ரியையும் மீண்டும் சேர்த்து வைக்க ஜெயசூர்யாவின் உதவியை நாடுகிறார். இந்துப்பெண்ணை திருமணம் செய்துகொண்டு தன் தந்தையை எதிர்த்து வீட்டை விட்டு கிளம்பிப்போன லாலுவும் அவரது தந்தையான ஃபுக்ரி சித்திக்கும் இப்போதுவரை கீரியும் பாம்புமாக இருக்கிறார்கள்.
கோபத்தால் பிரிந்து கிடக்கும் தந்தை-மகனை சேர்த்து வைக்கும் சாக்கில் தான் விரும்பும் பிரயாகாவை காதலிப்பதற்காக இந்த ஆள் மாறாட்டத்திற்கு ஒப்புக்கொண்டு ஃபுக்ரியின் பங்களாவுக்குள், நான்தான் லாலின் வாரிசு என நுழைகிறார் ஜெயசூர்யா. அவரால் பிரயாகாவின் காதலை பெற முடிந்ததா, சித்திக்கையும் லாலையும் இணைக்க முடிந்ததா என்பதே மீதிக்கதை.
கதைச்சுருக்கத்தை படிக்கும்போதே உங்களுக்கே கொஞ்சம் தெரிந்திருக்குமே.. உண்மைதான்.. விஜய் நடித்த பூவே உனக்காக படத்தை லைட்டாக பட்டி டிங்கரிங் பண்ணி, அப்படியே ஃபுக்ரியாக மாற்றி இருக்கிறார் இயக்குனர் சித்திக். அதனாலேயோ என்னாவோ வழக்கமாக சித்திக் படங்களில் இருக்கும் ஒரு பரவசம் இதில் மிஸ்ஸிங் ஆகியிருப்பதும் நன்றாகவே தெரிகிறது.
ஜெயசூர்யாவுக்கு இந்துவாகவும் முஸ்லீமாகவும் ஆள்மாறாட்டம் பண்ணும் கேரக்டர்.. அவரும் அதில் செமையாக ஸ்கோர் பண்ணியுள்ளார்.. பிரயாகா மார்ட்டின், அணு சித்தாரா என இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், காதல் காட்சிகள் ரொம்பவே குறைவு தான். முஸ்லீம் பெரியவராக வித்தியாசமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் நடிகர் சித்திக்..
சித்திக்கின் மகனாக வரும் லால் வழக்கம்போல சிடுசிடுக்கும் சண்டக்கோழி கேரக்டரில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். ஜெயசூர்யாவின் நண்பர்களாக வரும் மூவரணி பல இடங்களில் காமெடிக்கு உத்தரவாதம் தருகிறது.. இரிடியம் இருப்பதாக கோவில் கலசத்துக்கு ஆசைப்பட்டு, அதனாலேயே கோவில், பள்ளிவாசல் சீரமைப்பு செலவுகளில் தலையை விட்டு அவதிப்படும் ஜோஜூ ஜார்ஜ் ரசிக்க வைக்கிறார்.
விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. சித்திக்கின் படங்கள் எப்போதும் உணர்வுப்பூர்வமாகவே இருக்கும்.. ஒரு குடும்பம், அதற்குள் இருக்கும் பகை, கோபதாபங்கள், சென்டிமென்ட், பாசம் என எல்லாம் கலந்த கலவையாக அவரது படாம் இருக்கும்.. இந்தப்படமும் அப்படி ஒரு கலவைதான் என்றாலும் கூட அதை சரியான விதத்தில் இயக்குனர் சித்திக் கலக்கவில்லை என்றே தோன்றுகிறது..
அதேசமயம் கிளைமாக்ஸில் பிரிந்த இரண்டு குடும்பங்கள் இணையும்போது வழக்கமாக காட்டப்பட்டும் பாசிடிவ் அணுகுமுறை, கோபமாக வெளியேறும் நாயகனை பின் தொடர்ந்து வந்து, மொத்த குடும்பமே தங்களது பெண்ணை தந்து காதலை சேர்த்து வைப்பது என வழக்கமான எந்த க்ளிஷேக்களும் இல்லாமல் பிராக்டிகலாக காட்சிகளை நகர்த்தியதற்காக இயக்குனர் சித்திக்கை பாராட்டலாம். அதேசமயம், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பஞ்சம் இல்லை என்றாலும் சித்திக் படத்தை பார்த்தோம் என்கிற முழு திருப்தியுடன் நம்மால் வெளியே வரமுடியவில்லை என்பதே உண்மை..
சித்திக் சார்.. வி ஆர் வெய்ட்டிங்...